பொதுத் தேர்வுகள் ஆரம்பம்
பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் தமிழகத்தில் தொடங்குகின்றன. எதிர்கால கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கு அடித்தளம் அமைப்பது பத்தாம் வகுப்புப் பொதுதேர்வுகள் தான். எனவே, மாணவர்கள் நன்கு படித்து, வினாக்களை புரிந்து கொண்டு பதட்டமின்றி விடைகளை எழுத வேண்டியது அவசியம். இந்த காலகட்டத்தில் பிள்ளைகளை விட பெற்றோர்களுக்கே அதிகமான ஆலோசனைகள் தேவைப்படுகிறது.
ஏனென்றால் பிள்ளைகளை விட பெற்றோர்களே பதட்டத்துடன் இருக்கிறார்கள். மதிப்பெண் குறைந்துவிடும், வாழ்க்கை போய்விடும் என்றெல்லாம் பிள்ளைகளை அச்சுறுத்தல் செய்கிறார்கள். இது, தவிர்க்க வேண்டிய பழக்கம். மாணவர்களிடம் பொறுப்பை ஒப்படைத்துவிடுவதே நல்லது. எது நடந்தாலும் நல்லது என்று நம்பிக்கையுடன் அனுப்பிவையுங்கள்.
- இந்த கேள்வி வருகிறது என்று யாராவது பெற்றோர், நண்பர்கள் சொல்வதைக் கேட்டு கடைசி நேரத்தில் பிள்ளைகளை குழப்பாதீர்கள். தேர்வுக்கு முதல் நாள் நல்ல தூக்கம் அவசியம். படித்தவற்றைத் தேர்வில் நினைவுபடுத்தி எழுதுவதற்கு 7 மணி நேரம் தூக்கம் மிகவும் அவசியம்.
- அதேபோல் தேர்வு நேரத்தில் சரியான சரிவிகித சத்துணவு கொடுத்து பிள்ளையை தெம்புடன் அனுப்புங்கள். அவர்கள் அசட்டையாக இருந்தாலும், இதில் பெறோர் கண்டுகொள்ளாமல் இருக்கக்கூடாது.
- தேர்வு என்பது மாணவர் படிப்புக்கு ஒரு அளவீடு மட்டுமே. இதுவே வாழ்க்கையின் எல்லை கிடையாது, ஆரம்பம் தான். வாழ்க்கையின் ஆரம்பத்தில் வெற்றி அடைந்து விட்டால் நல்ல கல்லூரி கிடைக்கும். அதே நேரத்தில் தோல்வி அடைந்தாலும், மீண்டும் வாய்ப்பு இருக்கிறது.
- இந்தியாவில் 70 நுழைவுத் தேர்வுகள் உள்ளது. அவற்றில் உங்களுக்கு எது தேவை என்பதைத் தேர்வு செய்து படிக்க வேண்டும். இதையெல்லாம் முன்கூட்டியே தேடி, தகவல்கள் அறிந்துவைத்திருப்பது நல்லது.
- மருத்துவப் படிப்பில் சேர்வதற்கு எல்லா பாடத்திலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றால் தான் இடம் கிடைக்கும் என்ற நிலைமை இன்று இல்லை. 60 சதவீதம் மதிப்பெண் பெற்றாலும் நீட் தேர்வில் மதிப்பெண் பெற்றால் மருத்துவ படிப்பில் இடம் கிடைக்கும். அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்குத் தனியாக இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
- டாக்டர் தொழில் மட்டும் கிடையாது, அதைவிட அதிகமான வருமானம் மற்றும் மதிப்பும் கொடுக்கக்கூடிய தொழில்களும் ஏராளமாக உள்ளன.
- பரீட்சை எழுதி முடிக்கும் வரை பிள்ளைகள் கொஞ்சம் அழுத்தத்தை உணரட்டும். அது நல்லது தான். இந்த நேரத்தில் வீட்டில் வேறு பிரச்னைகள் அவர்களை அண்டாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
- எதற்காகவும் யாரிடமும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டாம். தேர்வு என்பதை ஒரு இயல்பான பரிசோதனை என்று எடுத்துக்கொண்டால், மாணவர்களுக்கும் அந்த அழுத்தம் ஏற்படாது.
- நன்றாக படிப்பவர் மட்டுமின்றி படிக்காதவர்களும் மாபெரும் வெற்றி அடைந்திருக்கிறார்கள் என்பதை பெற்றோர் உணர்ந்துகொண்டு, மாணவர்கள் திறனுக்கு மதிப்பளிக்க வேண்டும். ஏனென்றால் எல்லா மாணவர்களும் முதல் மதிப்பெண் பெற இயலாது.
- ஒவ்வொரு பிள்ளையின் உடல் நலன், மன வளர்ச்சி ஆகியவையும் மதிப்பெண், தேர்வுகளில் முக்கியப் பங்காற்றுகின்றன. ஆகவே, பிள்ளையின் வெற்றி தோல்விக்கு பெற்றோரும் ஒரு காரணம் என்பதைப் புரிந்துகொண்டு தேர்வுக்குத் தயாராகுங்கள், வெற்றி பெறுங்கள்.