கூவம் ஆறு சீரமைக்கும் முயற்சி

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி – 339

மெரினா கடற்கரை, மகாபலிபுரம், வண்டலூர் உயிரியல் பூங்கா, பார்த்தசாரதி கோயில் என்று பெரசென்னை நகருக்கு எத்தனையோ பெருமைகள் இருக்கின்றன. ஆனால், இவை எல்லாவற்றுக்கும்  திருஷ்டிப் பொட்டாக  கூவம் திகழ்கிறது. கூவத்தைக் கடக்கும் நேரத்தில் மூக்கைப் பிடித்துக்கொண்டு நடக்கும் அவலம் இருக்கிறது. பெருநகர சென்னை மேயரானதும் கூவம் நதி சீரமைப்பு என்பது அவருக்கு ஒரு மிகப்பெரும் சவாலாகவே இருந்தது.

ஏனென்றால், கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக கூவம் நதி சீரமைப்புக்கு ஏராளமான திட்டங்கள் வகுக்கப்பட்டு, எக்கச்சக்க பணம் செலவழிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவை எல்லாமே கடலில் கரைத்த பெருங்காயமாக கண்ணுக்குத் தெரியாமல் கரைந்துபோனதுதான் மிச்சம். கூவம் இன்னமும் எதற்கும் அடங்காமல் கூடுதல் கழிவுகளுடன் ஓடிக்கொண்டு இருக்கிறது.

இன்றைய மக்களுக்கு கூவம் நதியின் வரலாறு தெரியாது. திருவள்ளூர் மாவட்டம் கூவம் கிராமத்தில் இந்த நதி பிறப்பதால் இதனை கூவம் ஆறு என்கிறார்கள். கேசவரம் ஏரியிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீர் கிளை ஆறாக உருவாகி, 72 கிலோ மீட்டர் தவழ்ந்து, நேப்பியர் பாலம் அருகே மெரினாவில் சங்கமிக்கிறது. கூவத்தின் பாதையில் ஆரண்வயல் அணை , கொரட்டூர் அணை உள்ளிட்ட 6 அணைகள் கட்டப்பட்டுள்ளன.

கூவத்தில்  தூய நீர் ஓடிக் கொண்டிருந்த காலத்தில் மீன் பிடி தொழிலும் சிறப்பாக நடந்துள்ளது.  படகுப் போட்டிகளும் நடைபெற்றன. முன்பு கூவம் நதியில் மக்கள் குடிநீர் எடுத்தார்கள், குளித்தார்கள், அன்றாட தேவைக்குப் பயன்படுத்தினார்கள், படகுப் பயணம் செய்தார்கள். ஆனால், இன்று அது சாக்கடை கழிவு நீர் ஓடை போன்று மாறியிருக்கிறது. குறிப்பாக  சென்னை நகர எல்லையான கோயம்பேட்டில் இருந்து மாநகரக் கழிவுகள் மொத்தமும் இந்த கூவத்தில் இணையத் தொடங்குகின்றன. அதனால் சாக்கடையாக மாறிவிடுகிறது.

சென்னையின் துயரமாகக் காட்சியளிக்கும் கூவம் மட்டுமின்றி அடையாறு நீர்வழிப் பாதையையும் மேம்படுத்த திட்டமிட்டார். இதற்கு எத்தனை எதிர்ப்புகள், கேலிகள், கிண்டல்கள்?

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment