அம்பேத்கர் பிறந்தநாள் குறிப்புகள்
“எவன் ஒருவன் தன் உரிமைகளை எப்போதும் தற்காத்துக்கொள்ளத் தயாராக இருக்கிறானோ, யார் ஒருவன் பொது விமர்சனத்துக்கு அச்சப்படாமல் இருக்கிறானோ, யார் அடுத்தவன் கைப்பாவையாக மாறாமல் போதிய சிந்தனையும் சுய மரியாதையும் பெற்று இருக்கிறானோ, அவனே சுதந்திரமான மனிதன் என்பேன்…’’ என்கிறார் டாக்டர் அம்பேத்கர்.
பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கரின் வாழ்க்கைக்குள் நுழைந்து திரும்பினால் மட்டுமே, அவர் கடந்து வந்த பாதையின் வேதனையும் வலியும் தெரியும்.
அம்பேத்கர் தனது சிறுவயதில் பள்ளிக்காலத்திலேயே சாதிய ஒதுக்குதலால் பாதிக்கப்பட்டார். சமுதாயத்தின் மோசமான சிந்தனையால் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த குழந்தைகள் படிக்க பள்ளிக்குச் செல்ல முடியாத நிலை இருந்தது. அப்போது, ராணுவத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களின் குழந்தைகளுக்காக அரசு சிறப்புப் பள்ளியை நடத்தியதால், பி.ஆர்.அம்பேத்கரின் ஆரம்பக் கல்வி சாத்தியமானது. படிப்பில் சிறந்தவராக இருந்தபோதிலும், அவருடன் வரும் அனைத்து தாழ்த்தப்பட்ட குழந்தைகளுடன் அவர் வகுப்பிற்கு வெளியே அல்லது வகுப்பின் மூலையில் அமர்த்தப்பட்டார். அங்குள்ள ஆசிரியர்கள் அம்பேத்கரை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை, கவனிக்கவும் இல்லை.
1894 இல் தந்தை ராம்ஜி சக்பால் ஓய்வு பெற்ற பிறகு, அவரது முழு குடும்பமும் மகாராஷ்டிராவில் உள்ள சதாரா என்ற இடத்திற்கு குடிபெயர்ந்தது, அம்பேத்கரின் தாயார் இறந்த பிறகு, அவரது அத்தை கடினமான சூழ்நிலையில் அவரைக் கவனித்துக்கொண்டார். ராம்ஜி சக்பால் மற்றும் அவரது மனைவிக்கு 14 குழந்தைகள் என்றாலும் அவர்களில் மூன்று மகன்கள் மற்றும் மூன்று மகள்கள் மட்டுமே கடினமான சூழ்நிலைக்குத் தாக்குப்பிடித்து உயிர் பிழைத்தனர். மேலும் அவரது சகோதர சகோதரிகளில், பீம்ராவ் அம்பேத்கர் மட்டுமே 1897 இல், சமூகப் பாகுபாட்டைப் புறக்கணித்து, தொடர்ந்து கல்வியைத் தொடர முடிந்தது.
டாக்டர் அம்பேத்கரின் கல்வி!
அம்பேத்கர் மும்பை உயர்நிலைப் பள்ளியில் சேர்க்கை பெற்றார், மேலும் அந்த பள்ளியில் சேர்க்கை பெற்ற முதல் தாழ்த்தப்பட்ட மாணவர் அவர் என்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. 1907 இல், அம்பேத்கர் உயர்நிலைப் பள்ளி தேர்வில் தேர்ச்சி பெற்றார். இந்த வெற்றி அவரது சாதி மக்களிடையே மிகப் பெரும் மகிழ்ச்சி அலையைத் தூண்டியது, ஏனெனில் அந்த நேரத்தில் உயர்நிலைப் பள்ளியில் தேர்ச்சி பெறுவது என்பதே மிகவும் கடினமான ஒன்றாக கருதப்பட்டது. அந்த சூழலில் அவர்களின் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் வெற்றி பெற்றது ஆச்சரியமாகவும் ஆனந்தமாகவும் அம்மக்களுக்கு இருந்தது.
உயர் கல்விக்கான பயணம்!
அதன் பிறகு பீம்ராவ் அம்பேத்கர் 1912 இல் பொருளாதாரம் மற்றும் அரசியல் அறிவியலில் பட்டம் பெற்றார், ஆய்வுத் துறையில் அனைத்து சாதனைகளையும் முறியடித்தார். 1913 இல், அவர் முதுகலைப் பட்டப்படிப்புக்காக அமெரிக்கா சென்றார், அங்கு 1915 இல் கொலம்பியா பல்கலைக்கழகத்தில், அவர் எம்.ஏ. முடித்தார், அடுத்த ஆண்டில் அவரது ஆராய்ச்சி ஒன்றிற்காக அவருக்கு PhD வழங்கப்பட்டது. 1916 இல், பிரிட்டிஷ் இந்தியாவில் மாகாண நிதியின் பரிணாமம் என்ற புத்தகத்தை வெளியிட்டார்.
பி.ஆர்.அம்பேத்கர் தனது முனைவர் பட்டத்துடன் 1916 ஆம் ஆண்டு லண்டன் சென்றவர், சட்டம் பயின்றார், பொருளாதாரத்தில் முனைவர் பட்டத்திற்கான பட்டப்படிப்பில் சேர்ந்தார். உதவித்தொகை போதுமானதாக இல்லாததால் அடுத்த ஆண்டு இந்தியாவுக்கு வந்து, எழுத்தர் வேலை, கணக்காளர் வேலை என பல வேலைகளைச் செய்தார். 1923 இல் மீதிப் பணத்துடன் மீண்டும் லண்டன் சென்று தனது ஆராய்ச்சியை முடித்தார். பல்கலைக்கழகம் அவருக்கு அறிவியல் முனைவர் பட்டம் வழங்கியது. தெற்காசியப் பகுதியில் இருந்து பொருளாதாரப் பாடத்தில் முனைவர் பட்டம் பெற்ற முதல் நபரும் ஆவார்.
