அடுத்து தேவர் சமுதாயக் கணக்கு
கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளை எல்லாம் பள்ளிக் கல்வித்துறையுடன் இணைக்கும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்று தமிழக அரசு தெளிவாகக் கூறிய பிறகும் அ.தி.மு.க. சார்பில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. கள்ளர் சமுதாயத்திற்கு போராடக் கிடைத்த வாய்ப்பை விடக் கூடாது என்பதற்காகவே இந்தப் போராட்டம் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி, ‘’க்ள்ளர் சீரமைப்புப் பள்ளிகள் மற்றும் விடுதிகளை உள்நோக்கத்தோடு முடக்க முயற்சிக்கும் விடியா திமுக அரசைக் கண்டித்தும், கள்ளர் சீரமைப்பு பள்ளி மற்றும் விடுதிகளை பள்ளிகல்வித்துறையோடு இணைக்கும் முயற்சியின் முதல் படியாக , இணை இயக்குநர் (கள்ளர் சீரமைப்பு) அவர்களின் தனித்துவமான கட்டுப்பாட்டில் இயங்கி வந்த கள்ளர் சீரமைப்பு விடுதிகளை கள்ளர் சீரமைப்புத் துறையின் நிர்வாகத்திலிருந்து விடுவித்து, அதன் அதிகாரத்தை மழுங்கடிக்கும் வகையில் வெளியிடப்பட்ட விடியா அரசின் அரசாணை 40/2022- ஐ கைவிட வலியுறுத்தியும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் மதுரை செக்கானூரணி பகுதியில் இன்று நடைபெற்றது.
விடியா திமுக அரசின் பல்வேறு இடையூறுகளைத் தாண்டி போராட்டத்தை எழுச்சியுற நடத்திய திண்டுக்கல், மதுரை, தேனி வருவாய் மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்து கழக நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும், தோழமைக் கட்சியினருக்கும், சமுதாய அமைப்புகளுக்கும், பொதுமக்களுக்கும் எனது வாழ்த்துகள். நேற்று மதியம் ஒரு வெற்று அறிக்கையின் மூலம் போராட்டத்தின் தீவிரத்தன்மையை குறைத்திடலாம் என்று எண்ணிய விடியா திமுக அரசின் சூழ்ச்சிகள் அனைத்தையும், சமுதாய அமைப்புகளும் பொதுமக்களும் இந்த போராட்டத்திற்கான தங்கள் ஆதரவால் முறியடித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து விளிம்புநிலை சமுதாய மக்களின் நியாயமான கோரிக்கைகளை பிரதிபலிக்கும் ஒரே இயக்கம்
தான் என்பதை இந்த போராட்டம் மீண்டும் ஒருமுறை மெய்ப்பித்துள்ளது. இந்த போராட்டத்தின் வலிமையை உணர்ந்து, மிகவும் பிற்படுத்தப்பட்ட சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்த கள்ளர் சமுதாயத்தின் வரலாற்று ரீதியான கல்வி அடையாளமான கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள் மற்றும் விடுதிகளின் நிர்வாக அமைப்பில் மாற்றங்கள் கொண்டுவருவதற்கான எண்ணத்தை முழுவதுமாக கைவிடுமாறு விடியா திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன்’’ என்று கூறியிருக்கிறார்.
இதே போன்று அடுத்து தேவர் சமுதாய மக்களுக்கு ஒரு போராட்டம் நடத்தினால் போதும் ஓட்டுக்களை அள்ளிவிடலாம் என்ற நம்பிக்கையில் இருக்கிறாராம் எடப்பாடி பழனிசாமி. கணக்கெல்லாம் நல்லாத் தான் இருக்குது. இதெல்லாம் ஓட்டா மாறுமா?