சூப்பர் டிப்ஸ்
அழகுக்காக எத்தனையோ க்ரீம்களை வாங்கி உடல் முழுக்க பூசிக்கொள்ளும் பெண்கள் அதனால் மட்டும் அழகாகிவிடுவதில்லை. ஏன் தெரியுமா? அழகு என்பது உடலுக்கு உள்ளே இருந்து வரவேண்டும்.
ஒல்லியாக இருப்பதுதான் அழகு என்ற எண்ணத்தில் சாப்பிடும் உணவை குறைப்பது, கண்ட நேரத்தில் சாப்பிடுவது, ஹோட்டல்களில் சாப்பிடுவது போன்ற எல்லாமே அழகுக்கு எதிரிகள். இவைதான் உடல் அழகை கெடுத்துவிடும். ஆகவே, அழகாக இருக்கவேண்டும் என்றால் ஆரோக்கியமான உணவுப்பழக்கம் அவசியம்.
ஆரோக்கியமான உணவு வேண்டும் என்றால் ரொம்பவும் யோசிக்க வேண்டியதில்லை. நம் வீட்டு சமையலறையை சரியாகப் பயன்படுத்தினாலே போதும். முதல் விஷயம் சரியான உணவு. அதாவது, சமச்சீரான உணவை எடுத்துக்கொள்வது மிகவும் அவசியம். சமச்சீரான உணவு என்பது கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு மற்றும் நார்ச்சத்து அடங்கியது. எனவே, உணவைக் காய்கறி, கீரை, அரிசி அல்லது கோதுமை என அனைத்தும் உள்ளதாகத் தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும்.
குறிப்பாக பாட்டில் ஐட்டங்கள் என்று சொல்லக்கூடிய செயற்கையான பழரச பானங்கள், குளிர்பானங்கள், சுவையூட்டிகள் சேர்க்கப்பட்ட பாக்கெட் உணவுகள், அதிக மசாலா சேர்க்கப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
மூன்று வேளை உண்ணாமல் உணவை ஆறு வேளையாகப் பிரித்துச் சாப்பிடுவது நல்லது. மூன்று வேளை உண்ணுவதாக இருந்தால், நான்கு மணி நேர இடைவேளையில் சாப்பிட வேண்டும். காலை உணவை அதிகமாகவும், மதியம் மிதமாகவும் இரவு குறைவாகவும் உட்கொள்ள வேண்டும்.
காலை மட்டும் அல்ல, எந்த வேளை உணவையும் எந்தக் காரணம் கொண்டும் தவிர்க்க வேண்டாம். காலை, மதியம், இரவு குறித்த நேரத்தில் சாப்பிடும் பழக்கத்தை உருவாக்க வேண்டும். சாப்பிடுவதற்கு முன்னும் சாப்பிட்டு 1 மணி நேரம் கழித்தும் நிறைய தண்ணீர் குடிக்கவும்.
காலை நான்கு இட்லிகள், காய்கறிகள் சேர்க்கப்பட்ட சாம்பார், ஒரு டம்ளர் பால் அருந்தலாம். காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் முன்பு, ஏதாவது ஒரு பழத்தை ஜூஸாகக் குடிக்காமல் அப்படியே மென்று சாப்பிட வேண்டும். அல்லது ஃபுரூட் சாலட்டாகச் சாப்பிட வேண்டும். இதனால், தாடை தசைக்கள் வலுவாகும். பழங்களின் நார்ச்சத்து முழுமையாகக் கிடைக்கும்.
மதியம் அளவான சாப்பாட்டுடன் காய்கறிகள் நிறைய சேர்க்கப்பட்ட சாம்பார், கீரை, ரசம், தயிர் எனச் சாப்பிட வேண்டும். அசைவ உணவு எடுப்பவர்கள் இந்த நேரத்தில் மட்டும் சாப்பிடலாம்.
மாலை நேரத்தில் ஸ்நாக்ச் போன்று முளைக்கட்டிய பயறை, வேகவைத்துச் சாப்பிடலாம். இரவு அளவாகச் சாப்பிடுவது நல்லது. அதுவும் இரவு 8 மணிக்கு சாப்பிடுவிடுவது நல்லது. இதனால், அஜீரணம், தூக்கம் கெடுதல் போன்ற சிக்கல்கள் ஏற்படாது. உடலும் தேவையற்ற கலோரி சேர்வதால் பருமனாகாமல் இருக்கும். இரவில் படுக்கப்போகும் முன்பு பால் அருந்த வேண்டும்.
டீ, காபி போன்றவற்றை ஒரு நாளைக்கு இரண்டு முறை சாப்பிட வேண்டும். அதாவது, காலை காபி என்றால் மாலை டீ என்றோ அல்லது காலை மாலை இருவேளையும் ஏதேனும் ஒன்றை மட்டுமோ சாப்பிட வேண்டும். அதற்கு மேல் சாப்பிடுவது, அந்தப் பழக்கத்துக்கு நம்மை அடிமையாக்கி நம் உணவுப்பழக்கத்தைச் சீர்குலைக்கும். தேவையெனில் கிரீன் டீ எடுத்துக்கொள்ளலாம்.
பாகற்காய், கோவைக்காய் போன்றவைகளின் சுவை பிடிக்கவில்லை என்றால், வேறு வேறு வடிவங்களில் உணவுகளை செய்து தர வேண்டும். முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டாம். தினமும் ஒரு டீஸ்பூன் நட்ஸ் வகைகளைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். பாதாம், பிஸ்தா, அக்ரூட், முந்திரி என அனைத்தும் கலந்த நட்ஸில் ஒரு டீஸ்பூன் சாப்பிடுவது உடலுக்குத் தேவையான சத்துக்கள் சேர்த்துப் பலத்தைக் கூட்டும்.
இவை எல்லாவற்றையும் மலர்ந்த முகத்துடன் எடுத்துக்கொள்ளுங்கள். ஆரோக்கியமான உணவுதான் அழகுக்கு அடிப்படை. இதனை மறந்துவிட்டு எத்தனை க்ரீம் பூசினாலும் அழகு கிடைக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.