- பியூட்டி இனி ஈஸி
முட்டையின் வெள்ளைக்கரு, மஞ்சள் கருவை மட்டும் பயன்படுத்திவிட்டு, ஓட்டை தூக்கி எறிந்துவிடுவோம். ஆனால், முட்டையின் ஓட்டிலும் அழகுக்கு பயன் தரக்கூடிய நிறையவே சத்துகள் உள்ளன. வேகவைத்த பிறகு முட்டை ஓட்டை தனியாக எடுத்து அதை ஒருமுறை சுத்தமாக கழுவி விட்டு மறுபடியும் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். பிறகு கொதித்த இந்த முட்டை ஓட்டை தனியாக எடுத்து நன்றாக உலர வைக்க வேண்டும். அவை நன்றாக காய்ந்த பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு பொடியாக அரைத்துக்கொள்ள வேண்டும்.
இரண்டு ஸ்பூன் அளவிற்கு முட்டை ஓடு பொடியுடன் அரை எலுமிச்சம் பழச்சாறை பிழிந்து போதுமான அளவு தண்ணீரை ஊற்றி நன்றாக பேஸ்ட் ஆக்க வேண்டும். இந்த பேஸ்ட்டை முகத்தில் நன்றாக தடவி காய விட வேண்டும். காய்ந்த பிறகு சிறிது தண்ணீரை முகத்தில் தெளித்து ஸ்கிரப் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் முகத்தில் இருக்கக்கூடிய இறந்த செல்கள் அனைத்தும் வெளியேறி முகம் புத்துணர்ச்சியுடன் திகழும். முகத்தில் ஏற்படக்கூடிய சுருக்கங்களை தடுப்பதற்கும் உதவும் இந்த ஃபேஸ் பேக்கை வாரம் ஒரு முறை செய்துவந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
ஒரு டேபிள் ஸ்பூன் காய்ச்சாத பச்சை பாலுடன் ஒரு டீஸ்பூன் எலுமிச்சம் பழச்சாறை சேர்த்து நன்றாக கலந்து ஒரு காட்டன் துணியை பயன்படுத்தி முகத்தில் தடவி நன்றாக துடைக்க வேண்டும். இதனால் முகத்தில் இருக்கும் அழுக்குகள் அனைத்தும் நீங்கிவிடும். அடுத்ததாக ஸ்க்ரப்பிங் செய்வதற்கு இரண்டு ஸ்பூன் அளவு காபி தூளுடன் ஒரு ஸ்பூன் அளவிற்கு தேன், கொஞ்சம் பன்னீரை ஊற்றி நன்றாக கலந்து முகத்தில் தடவ வேண்டும். ஐந்து நிமிடம் கழித்து கைகளை வைத்து மிருது மிருதுவாக வட்ட வடிவில் மசாஜ் செய்து முகத்தை கழுவி விட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் முகத்தில் இருக்கும் இறந்த செல்கள் அனைத்தும் நீங்கிவிடும். காபித்தூளுக்குப் பதிலாக அரிசி மாவை உபயோகப்படுத்தலாம்.
அகலமான பாத்திரத்தில் பாதி அளவிற்கு தண்ணீர் பிடித்து நன்றாக சூடு பண்ணி அதில் 2 ஸ்பூன் பன்னீரை ஊற்ற வேண்டும். ஒரு கனமான போர்வையை பயன்படுத்தி முகத்தில் அந்த ஆவி படும்படி ஆவி பிடிக்க வேண்டும். முகத்தை நன்றாக துடைத்துவிட்டு காய வைக்க வேண்டும். அடுத்து இரண்டு ஸ்பூன் கடலை மாவை எடுத்து அதனுடன் ஒரு டேபிள் ஸ்பூன் தயிர், ஒரு டீஸ்பூன் சந்தன பொடி, ஒரு டேபிள் ஸ்பூன் தக்காளி சாறு சேர்த்து நன்றாக பேஸ்ட் பதத்திற்கு தயார் செய்ய வேண்டும். இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி அரைமணி நேரம் கழித்து கழுவினால் முகத்தில் பளீச் தென்படும்.
ஒரு பீட்ரூட்டை துருவி மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து, வடிகட்டி இதன் சாறை மட்டும் தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த பீட்ரூட் சாறில் ஒரு டேபிள் ஸ்பூன் கடலை மாவு, ஒரு டேபிள் ஸ்பூன் அதிகம் புளிக்காத கெட்டியான தயிர் கலந்து பேஸ்ட் பதத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டும். இந்தப் பேக்கை இரவு உறங்குவதற்கு முன்பு முகத்தை நன்றாக சுத்தம் செய்துவிட்டு போட்டுக்கொள்ள வேண்டும். கால் மணி நேரத்திற்கு பிறகு லேசான மசாஜ் செய்து சுத்தமான தண்ணீர் கொண்டு முகத்தை அலம்பி விடுங்கள். இதன் பிறகு முகத்தில் எதுவும் போடவே வேண்டாம். தூங்கி எழுந்து பாருங்கள், உங்கள் முகத்தில் மாற்றத்தை உணர முடியும். திடீர் பங்க்ஷன் அல்லது அவசர வெளியூர் பயணம் போன்ற நேரங்களில் இதனை பயன்படுத்துங்கள். முகம் சிவப்பு நிறத்தில் ஜொலிக்கும்.
ஒரு உருளைக்கிழங்கை நன்றாக உரசி அதில் இருக்கும் சாறை தனியாக பிரித்து எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு ஸ்பூன் உருளைக்கிழங்கு சாறுடன் ஒரு ஸ்பூன் தயிரை சேர்த்து நன்றாக கலந்து, இதில் இரண்டு ஸ்பூன் கடலை மாவை சேர்க்க வேண்டும். இதில் ஒரு ஸ்பூன் கிளிசரின் சேர்த்து கெட்டியான பேஸ்ட் தயாரிக்க வேண்டும். இதனை காலையில் வெளியே செல்வதற்கு முன்பு முகத்தில் பூசி 20 நிமிடங்கள் கழித்து கழுவினால் முகம் பிரகாசமாகவும் இளமையாகவும் வைத்திருக்க வேண்டும்.
வெள்ளை பூசணிக்காயின் விதைகளை எடுத்துவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸி ஜாரில் போட்டு நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இரண்டு ஸ்பூன் பூசணி சாறுடன் ஒரு ஸ்பூன் கடலை மாவை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். இத்துடன் சர்க்கரை ஒரு ஸ்பூன் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். முகத்தை சுத்தமான தண்ணீரால் நன்றாக கழுவிய பிறகு இந்த கலவையை முகத்தில் பூச வேண்டும். இந்த கலவை காய்ந்து முகத்தை இறுக்க ஆரம்பித்ததும், முகத்தை கழுவிக் கொள்ளலாம். கடலை மாவு முகத்தில் இருக்கும் அழுக்குகளையும் நீக்க உதவுகிறது. சர்க்கரை இறந்த செல்களை நீக்க உதவுகிறது. பூசணிக்காய் சாறு முகத்தை இறுக செய்யும். ஆகவே, முகம் தளதளவென மின்னத் தொடங்கும். இந்த அழகுக் குறிப்புகளை எல்லாம் பயன்படுத்திப் பாருங்கள், பார்லர் செல்வதற்கு அவசியமே ஏற்படாது.