மீண்டும் திரும்பிவந்த துவாரகா பிரபாகரன்

Image

மாவீரர் நாளில் கொள்கைப் பிரகடனம்

ஈழத்தில் நடைபெற்ற இறுதிப்போரின் போது விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன், அவரது மகன் சார்லஸ் ஆகியோர் போர்க்களத்தில் உயிரிழந்தனர். அவரது இரண்டாவது மகன் பாலசந்திரன் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட புகைப்படங்களும் வெளியானது. இருப்பினும், பிரபாகரனின் மனைவி மதிவதினி, மகள் துவாரகா ஆகியோர் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை.

அவர்கள் இருவரும் இறுதிப்போருக்கு முன்னதாகவே வெளிநாட்டிற்கு தப்பி சென்றிருக்கலாம் என ஈழ ஆதரவாளர்கள் தெரிவித்து வந்த நிலையில், இலங்கை அரசால் உறுதியான தகவலை வெளியிட முடியவில்லை. அண்மையில் உலகத்தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன், பிரபாகரனும் அவரது குடும்பத்தினரும் உயிருடன் இருப்பதாகவும் விரைவில் அவர்கள் பொதுவெளியில் தோன்றுவார்கள் எனவும் தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இதனிடையே இங்கிலாந்தில் உள்ள தமிழர்கள் ஒருங்கிணைப்பு குழு சார்பில் மாவீரர் நாளான நவம்பர் 27ம் தேதி துவாரகா பிரபாகரன் திரையில் தோன்றி மாவீரர் நாள் உரை நிகழ்த்தினார். அப்போதே இவர் துவாரகா இல்லை என்று பலரும் தெரிவித்தார்கள். தமிழகத்தில் யாரும் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்நிலையில், இந்த ஆண்டும் அவர் மாவீரர் நாளில், ‘ஈழத்திற்கான அரசியல் போராட்டம் தொடரும்’ என்று உரை நிகழ்த்தியிருக்கிறார்.

ஆனால் விடுதலைப்புலிகள் ஆதரவாளர்கள் இவரை ஏற்பதாக இல்லை. அவர்கள்,  ‘’தலைவரின் மகள் என்பதற்காக துவாரகா தமிழர்களின் தலைவராகி விடுவார் என்றில்லை. பிரபாகரனின் மகள் என்பதற்காக அவர், தலைவராகி விட முடியாது. அதற்கான தகைமையும், தலைமைத்துவ ஆற்றலும், அர்ப்பணிப்பும், அவசியம். அவ்வாறானதொரு வாரிசு அரசியலை நிலை நிறுத்த தலைவர் பிரபாகரன் முயன்றதும் இல்லை. தனக்குப் பின்னால் என்று தன் பிள்ளைகளை அவர் கைகாட்டவுமில்லை. பிரபாகரனின் அடையாளத்தை வைத்துக் கொண்டு, துவாரகாவை தலைமகள் என்று அறிமுகப்படுத்துவது அபத்தம்.

பிரபாகரனின் மகள் என்பதற்காக அவர், தலைவராகி விட முடியாது. அதற்கான தகைமையும், தலைமைத்துவ ஆற்றலும், அர்ப்பணிப்பும், அவசியம். பிரபாகரனுக்கு இருந்த ஜனவசீகரம், நடையிலும், உரையிலும் காணப்படும் கம்பீரம், பேச்சில் இருக்கும் தெளிவு எல்லாமே, தலைமைத்துவத்துக்கான பண்புகளாக வெளிப்பட்டன. அவற்றில் எதையுமே, துவாரகா என்ற போலி விம்பத்திடம் காண முடியவில்லை. செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒரு உருவத்தினாலோ, தலைமையிலோ அவ்வாறான பண்புகளை ஒருபோதும் வெளிப்படுத்த முடியாது.

உயிர்ப்பற்ற – வெறும் வார்த்தைகளால் தலைமைத்துவத்தைக் கட்டியெழுப்பவும் முடியாது. அதற்கென ஒரு வசீகரம் இருக்க வேண்டும். ஈர்ப்பு வர வேண்டும். பிரபாகரனின் மாவீரர் நாள் உரையும் சரி, அவரது படங்கள் வெளியிடப்படும் போதும் சரி, புலிகள் மிக கவனமாக இருப்பார்கள். தலைமைத்துவ ஆற்றலுக்கு பங்கம் ஏற்படுத்தக் கூடிய விதத்திலான படங்களையோ, வீடியோக்களையோ புலிகள் ஒரு போதும் வெளியிட்டதில்லை. ஆனால் துவாரகா எனக் கூறப்பட்டு வெளியிடப்பட்ட காணொலியில் அத்தகைய எந்த நேர்த்தியும் இல்லை’’ என்று எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

Leave a Comment