உடலே மருத்துவர்
தொலைதூரப் பேருந்து அது. ஜன்னலை நன்றாக திறந்து வைத்ததும் காற்று, ஞானகுருவின் முகத்தில் அறைந்தது.
சிறிது நேரத்தில் ஞானகுருவின் பக்கத்து இருக்கையில் மிகவும் ஒல்லியாக, ஐம்பதைத் தொட்ட ஒருவர் வந்து அமர்ந்தார். அவருடைய சூட்கேஸைக் கொண்டுவந்த நபருடன் ஆங்கிலத்தில் பேசிய தொணியை வைத்து, மருத்துவராக இருக்க வேண்டும் என்று கணித்தார் ஞானகுரு. பஸ் கிளம்பி நகர எல்லையைத் தாண்டும்வரை வேடிக்கை பார்த்ததில் மனம் லயித்துப் போயிருந்தது.
’’நீங்க கோயில் பூசாரியா… ப்ளீஸ் எனக்கு ஜன்னலோர ஸீட்டைத் தரமுடியுமா?’’ என்று பக்கத்து சீட் நபர் கேட்டதும், புருவங்களை மட்டும் உயர்த்தி காரணம் கேட்டார்.
’’பஸ்ல டிராவல் செஞ்சி ரொம்ப வருஷமாச்சு. டிரெயின் டிக்கெட் இல்லைன்னு இதுல ஏறினேன். பஸ் குலுங்கிறதைப் பார்த்தா, வாந்தி வந்திடுமோன்னு பயமா இருக்கு’’ என்றார் கெஞ்சும் குரலுடன்.
’’ஒரு டாக்டர் இப்படி பயப்படுவது ஆச்சரியம்தான்…’’ என்றதும், அவர் முகத்தில் அப்பட்டமாக அதிர்ச்சி தெரிந்தது.
’’எப்படித் தெரியும் உங்களுக்கு, என்னோட ஹாஸ்பிட்டலுக்கு வந்திருக்கிங்களா?’’ என்று கேட்டார்.
’’இல்லை” என்றதும் அவரது அதிர்ச்சி ஆச்சரியமாக மாறியிருந்தது.
’’உங்களை ஏதோ கோயில் பூசாரின்னு நினைச்சுட்டேன்… ஆளைப் பார்த்ததும் இன்னாருன்னு சொல்றீங்கன்னா… நீங்க பெரிய சாமியாரா இருக்கணும், இல்லைன்னா ஜோசியரா?’’
’’நீங்களே கண்டுபிடித்துச் சொல்லுங்கள். நான் யார் என்பது எனக்கே மறந்துவிட்டது’’
’’அப்படின்னா நீங்க நிச்சயம் துறவிதான்..’’ என்றவர் சந்தோஷத்திற்கு மாறியிருந்தார்.
அவரது மெல்லிய கையை நன்றாக அழுத்திப் பிடித்து, ‘‘இனி இந்த பஸ்ஸில் குலுக்கல்கள் இருந்தாலும் உங்கள் உடம்புக்கு எதுவும் நிகழாது, தைரியமாக இருங்கள்… இப்போதே வாந்தி பற்றிய பயம் காணாமல் போய்விட்டதுதானே?’’
’’தேங்க்ஸ்… என்னோட கவனத்தை திசை திருப்பிட்டீங்க… இதுவும் ஒரு வகையான டிரீட்மென்ட்தான்…’’ என்றார். அதன்பிறகு மருத்துவத்தையும், அவரது சாதனைகளையும் சிலாகித்துப் பேசத் தொடங்கினார்.
‘‘சரியான நேரத்துக்கு மட்டும் ஆஸ்பத்திரிக்கு வந்துட்டா, எப்படிப்பட்ட நோயில் இருந்தும் தப்பிச்சுடலாம்…’ என்றவரைத் தடுத்து,
’’அதுசரி, ஜலதோஷம், தலைவலிக்கு நிரந்தரத் தீர்வு கண்டுபிடித்து விட்டீர்களா?’’ என்று கேட்டார்
இந்தக் கேள்வியை அவர் எதிர்பார்க்கவில்லை. கொஞ்சம் யோசித்தவர், ‘‘அதெல்லாம் ரொம்ப சாதாரண விஷயம்… இதயத்துல ஆபரேஷன் பண்ண முடியுது, மூளையை ஓப்பன் செய்ய முடியுது, கிட்னியை ரெக்கவரி செய்யலாம்…’’ என்று அடுக்கினார்.
’’புற்றுநோய் ஏன் வருதுன்னு தெரியுமா?’’ என்று மீண்டும் சாதாரணமாகவே கேட்டார் ஞானகுரு
’’சாமி… மருத்துவர்கள் மீது உங்களுக்கு ஏதும் கோபமோ?’’ என்று கேட்டார்.
’’எனக்கென்ன கோபம்? மருத்துவம் உன்னத நிலைக்கு வந்துவிட்டதாக நீங்கள் சொல்வதைத்தான் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. உங்களுடைய மருந்துகள் எல்லாமே ஏமாற்றுவித்தை…’’ என்றார்.
புரியவில்லை என்பது போன்று புருவம் உயர்த்திப் பார்த்தார்.
’’உடலில் நோய் தொற்றி வருபவர்களுக்கு நீங்கள் படித்த புத்தகத்திலிருந்தும், வாரம் அல்லது மாதம் ஒரு முறை பை நிறைய மருந்துகளை அள்ளிவரும் மருந்துக் கம்பெனிகளின் பிரதிநிதிகள் சொல்வதையும்தானே, மருந்து என்று எழுதித் தருகிறீர்கள். இதற்குப் பெயர்தான் மருத்துவமா?’’
இந்த கேள்வியால் டாக்டருக்கு முகம் சுருங்கியது. அவரது தொழில் குறித்துப் பேசுவதை ரசிக்கவில்லை என்பது தெரிந்தது.
ஆனாலும் விடாமல், ‘‘நோய் தீர்ப்பதில் பத்து சதவிகிதம்கூட மருந்துகளுக்குப் பங்கில்லை என்பது உங்களுக்கும் நன்றாகவே தெரியும். ஏனென்றால் நோய் தீர்ப்பதில் முக்கியமானது பாதிக்கப்பட்டவரின் உடம்பும் மனதும்தான்.
அடுத்தது நோயாளி உட்கொள்ளும் உணவு. அது நோயை எதிர்ப்பதற்குத் தேவையான சக்தியையும் ஆரோக்கியத்தையும் தரும். இதற்கெல்லாம் நிகரானது பாதிக்கப்பட்டவருக்காக துடிக்கும் உறவுகளின் ஆறுதல். இந்தப் பட்டியலில் கடைசியாக இடம்தான் உங்கள் மருந்துகள்… மற்றும் உங்கள் மீது உள்ள நம்பிக்கை’’ என்று சொல்லி முடிக்குமுன்னர், ’’அப்படின்னா மருந்து கொடுக்காமலே நோய் குணமாயிடும்னு சொல்றீங்களா?’’ என்று டாக்டர் கிண்டலுடன் கேட்டார்.
’’மருந்து சாப்பிடும் எல்லோருமே குணமடைந்து விடுவார்கள் என்று நீங்கள் உறுதியாகச் சொல்ல முடிந்தால், மருந்து எடுத்துக் கொள்ளாமலே அனைவரும் குணமடைய முடியும் என்று நானும் சொல்வேன்…’’ என்றதும் சில நிமிடங்கள் இருவருக்கும் இடையில் மௌனத்திரை ஒன்று விழுந்தது.
அந்தத் திரையை டாக்டரே விலக்கினார். ‘‘சுவாமி… நீங்க பேசுறதுக்கு அர்த்தம் என்ன? டாக்டர்கள் என்ன செய்யணும்னு சொல்றீங்க..?’’
’’மூளையில் இருந்து மட்டுமின்றி டாக்டர்களின் இதயத்திலிருந்தும் மருத்துவம் வரவேண்டும். தன்னலம் கருதா அன்னையைப் போல் அக்கறை காட்ட வேண்டும். ஒரு நோயாளி வந்ததும், அவனது குடும்ப சூழ்நிலை, வருமானம், வாழ்வு முறை போன்ற எதையும் கேட்காமல், உடல் அறிகுறிகளை மட்டும் கேட்டு அவசரஅவசரமாக மருந்து சீட்டு எழுதிக் கொடுக்கிறீர்கள். அதற்குப்பின் அவனுக்கு என்ன ஆனது என்பது பற்றி நீங்கள் கவலைப் படுவதில்லை…’’
’’நீங்க சொல்ற மாதிரிப் பார்த்தா, டாக்டர்கள் ஆசிரமம்தான் நடத்தணும் சுவாமி. நாங்க மருந்து கொடுத்தாலே நோய் குணமாகுது. அதனாலதான் நோயாளிகள் நம்பிக்கை வைச்சு, திரும்பத் திரும்ப வர்றாங்க..’’ என்றார்.
’’உங்களிடம் ஏன் திரும்பத் திரும்ப வரவேண்டும்?’’
நான் கேட்ட கேள்வியை நிதானமாக யோசித்தவர், ‘‘இதென்ன சுவாமி அபத்தமா கேக்குறீங்க… மறுபடியும் நோய் வர்றதால் என்கிட்ட வர்றாங்க…’’ என்று இழுத்தார்.
’’அப்படியென்றால் உங்களால் அவருடைய நோயைத் தீர்க்க முடியவில்லை என்றுதானே அர்த்தம். ஒரே ஒரு தலைமுடியைக் கூட மருத்துவத்தால் வளரவைக்க முடியாது என்பதுதானே உண்மை…’’ .
சின்ன யோசனைக்குப் பிறகு, ‘‘நீங்க சொல்றதும் சரிதான். நோயாளி முதல்ல அவன் மீது நம்பிக்கை வைக்கணும். அடுத்ததா மருந்து மேல நம்பிக்கை வைக்கணும். அப்பத்தான் குணமாகும். ஆனாலும் எல்லோரும் பிழைக்க முடியாதுதானே…’’ என்றார்.
’’உண்மைதான். உடல் அதிசயத்தை நுணுக்கமாக ஆராயச்சி செய்ய முடியுமே தவிர, உடம்பைக் கட்டுப்படுத்த முடியாது. எத்தனை கண்டுபிடிப்புகள் நிகழ்ந்தாலும், இறுதியில் மரணத்துக்கு முன்னே மண்டியிடத்தான் வேண்டும். நோயால் உண்டாகும் வேதனையை குறைக்கலாம், உறுப்புகளின் ஆற்றலைக் கூட்டலாம் என்பதுதான் மருத்துவத்தால் செய்யக்கூடியது. அதை அன்போடு செய்யுங்கள். மருந்துகளை விட, மனதினால் நோய் விரைவில் குணமாகும் என்பதை சொல்லிக் கொடுங்கள். சாதாரண காய்ச்சல் என்று வருபவர்களுக்கு மாத்திரை கொடுக்காமல், இரண்டு நாள் ஓய்வெடுத்து நாவைக் கட்டுப்படுத்தினாலே காய்ச்சல் காணாமல் போய்விடும் என்று உண்மை பேசுங்கள்…’’ என்றார் ஞானகுரு
’’அப்படின்னா நாங்க சம்பாதிக்க வேண்டாமா?’’ குரலில் கொஞ்சம் கோபம் எட்டிப் பார்தது.
’’கடவுளுக்கு அடுத்தபடியாக மக்கள் மதிப்பது மருத்துவர்களைத்தான். பிறரிடம் காட்டாத அந்தரங்கத்தையும், பேசாத ரகசியங்களையும் உங்களிடம் கொட்டத் தயாராக இருக்கும் மக்களிடம் அன்பை செலுத்துங்கள் என்று சொல்கிறேனே தவிர, பணம் சம்பாதிக்கவேண்டாம் என்று சொல்லவில்லையே…’’
’’நான் மட்டும் அன்பா இருந்தா போதுமா சாமி… மற்றவன் எல்லாம் சம்பாதிப்பானே…’’ என்று இழுத்தார்.
’’அடுத்தவரைப் பற்றிய கவலை எதற்கு..? உங்களுக்கு அன்பு போதிக்கச் சொல்லி, இயற்கை என்னை அனுப்பியிருக்கிறது. இந்தச் சந்திப்பு எதேச்சையாக நடந்தது என்று நினைக்கிறீர்களா..?” என்றதும்… யோசனையில் ஆழ்ந்தார்.
சட்டென மனம் விட்டு பேசத் தொடங்கினார். ’’சுவாமி… ஓரளவு நல்லாவே சம்பாதிச்சுட்டேன். ஆனாலும் மனசுல சின்னதா ஒரு வெற்றிடம் இருந்துக்கிட்டே இருந்தது. அதை எப்படி நிரப்பமுடியும்னு இதுவரை எனக்குத் தோணவே இல்லை. இப்போ நீங்க சொல்றபடி முயற்சி செஞ்சா அதை கொஞ்சமாவது நிரப்பமுடியும்னு தோணுது…’’ என்றவர் முகத்தில் ஆனந்தம் வந்தது. அவரது சந்தோஷத்தைக் கெடுக்க விரும்பாமல் கண் மூடி தூக்கத்தில் ஆழ்ந்தார் ஞானகுரு.