ஞானகுரு சிந்தனை
மலர்களை ரசித்துக்கொண்டிருந்த ஞானகுருவின் பின்னே வந்துநின்ற மகேந்திரன், ஒரு சந்தேகம் கேட்டார். ‘சுவாமி, எனக்குத் தெரிந்த நண்பர் கடினமான உழைப்பாளி. அவர் தொடங்கிய ஹோட்டல் மிகப்பெரிய வெற்றி கிடைத்துவிட்டது. அவரது கடுமையான உழைப்புக்கும், அனுபவத்திற்கும் கிடைத்த வெற்றி என்று நான் சந்தோஷப்பட்டேன்.
ஆனால் அவரோ, ‘எனக்கு கடவுளின் மிகப்பெரிய ஆசிர்வாதம் கிடைத்துவிட்டது என்று, ஒவ்வொரு கோயிலுக்கும் போய் எக்கச்சக்கமாக பணத்தை உண்டியலில் போட்டு வருகிறார்.. ஏன் இப்படி நடந்துகொள்கிறார்..? இந்த வெற்றி அவரது உழைப்புக்கும் புத்திசாலித்தனத்துக்கும் கிடைத்தது இல்லையா?” என்று கேட்டார்.
‘’இந்த உலகத்தில் எல்லோருக்குமே வெற்றி கிடைக்கவேண்டும் என்ற ஆசை உண்டு. அதே நேரம் தனக்கு வெற்றி கிடைக்காது என்ற அவநம்பிக்கையும் உண்டு. அப்படி ஒரே நேரத்தில் நம்பிக்கையும், அவநம்பிக்கையும் கொண்ட நபர்களுக்கு வெற்றி கிடைக்கும்போது, ’இந்த வெற்றிக்கு நான் தகுதியானவனா?’ என்ற சந்தேகம் வந்துவிடுகிறது. அதேநேரம், இந்த வெற்றி நிலைக்காமல் போய்விட வாய்ப்பு உண்டு என்ற அச்சமும் வந்துவிடுகிறது. அதனால், கிடைத்துவிட்ட வெற்றியைத் தக்கவைக்க ஜோதிடம், கோயில் என்று போய் நம்பிக்கையை வளர்த்துக்கொள்கிறார்கள். அவர்கள்தான் கைகளில் ராசிக்கல் அணிகிறார்கள், பெயர் மாற்றுகிறார்கள். வாஸ்து பார்த்து வீடு கட்டுகிறார்கள்.
பொதுவாக சினிமா கலைஞர்களுக்கும், தொழில் அதிபர்களுக்கும்தான் இப்படி எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம், மாபெரும் வெற்றி கிடைக்கிறது. அதனை, தன்னுடைய உழைப்புக் கிடைத்த வெற்றி என்று அவர்களாலே நம்ப முடிவதில்லை. அதனால், இந்த வெற்றிக்குக் காரணம் இறைவன், குடும்பம் அல்லது டீம் என்று நம்புவார்கள். உண்மையில், அவர்தான் அந்த வெற்றிக்கு முழு காரணமாக இருப்பார். ஆனால், இதற்கு முன்பு ஏகப்பட்ட தோல்விகளை பார்த்திருப்பதால், இப்போதைய வெற்றியை நம்பமுடியாமல் தவிப்பார்.
இப்படிப்பட்ட மனிதர்கள் உலகம் முழுவதும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஏன் இவர்கள் இப்படி நடந்துகொள்கிறார்கள் என்று மருத்துவர்களிடம் கேட்டால், இம்போஸ்டர் சிண்ட்ரோம் என்று அவர்கள் சொல்லக்கூடும். அதாவது, குருட்டு அதிர்ஷ்டத்தால் அல்லது ஏதோ ஒரு மோசடியால் வெற்றி கிடைத்திருக்கிறது என்று நினைப்பார்கள். அதனால், இந்த உண்மை யாருக்கும் தெரிந்துவிடக்கூடாது என்ற அச்சத்தில்தான் கோயில் கோயிலாக ஏறி இறங்குவார்கள்…’’
‘’இவர்கள் என்னதான் செய்யவேண்டும்?’’
‘’இந்த வெற்றிக்குக் காரணம் அவர்தான், இதனை அனுபவிக்கும் தகுதியும் அவருக்கு உண்டு என்பதை நம்ப வேண்டும். அவரது கனவு, அனுபவம், விடா முயற்சியாலே இந்த வெற்றி கிடைத்துள்ளது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். எல்லோருக்கும் எல்லாமும் கிடைத்துவிடாது என்பதையும், இந்த உலகில் எதுவும் காரணமின்றி கிடைப்பதில்லை என்பதையும் புரிந்துகொண்டு, கிடைத்த வெற்றியை ஆனந்தமாக அனுபவிக்க வேண்டும்’’ என்றார்.
‘’எப்படிப்பட்ட வெற்றி என்றாலும் கடவுளுக்கு நன்றி சொல்லலாம்தானே..?”
‘’அவரது நன்றிக்காக எந்த ஒரு கடவுளும் காத்திருக்கவில்லை… அவரது நன்றியால் கடவுளுக்கு ஆகப்போவது எதுவும் இல்லை…’’ என்றபடி தோட்டத்தில் நடை போட்டார் ஞானகுரு.