பேரண்டிங் டிப்ஸ்
குழந்தை இல்லாத வீட்டில் மகிழ்ச்சி இருக்காது, அதேநேரம் குழந்தை அடம்பிடித்தால் தாங்கவும் முடியாது. சாதுவான குழந்தைகள் கூட, திடீரென அடம் பிடித்து நினைப்பதை சாதிக்க விரும்புவார்கள். அந்த நேரத்தில் குழந்தையை சமாளிக்க முடியாமல் பெற்றோர்கள் ரொம்பவும் வருத்தப்படுறாங்க. குழந்தையை வளர்க்கத் தெரியவில்லையோ என்று வேதனைப்படத் தொடங்கிவிடுகிறார்கள். அதற்கெல்லாம் அவசியமே இல்லீங்க. அடம் பிடிக்கும் குழந்தையை சமாளிக்கும் வழிகளைப் பார்ப்போம்.
- நம்பிக்கை ; அடம்பிடிக்கும் பழக்கத்தை குழந்தைகள் மூன்றாவது மாதத்திலே தொடங்கிவிடுகிறார்கள். வேண்டும் அல்லது வேண்டாம் என்பதைச் சொல்வதற்கு அடம் பிடிப்பார்கள். இந்தப் பழக்கமே வளர்ந்த பிறகும் தொடர்கிறது. அடம் பிடிக்கும் பழக்கத்தை மாற்ற முடியும் என்ற நம்பிக்கை முதலில் பெற்றோருக்கு இருக்க வேண்டும்.
- கோபம் ; அன்பைப் புரிந்துகொள்ளாமல் பிள்ளைகள் அடம் பிடிப்பதைக் கண்டு பெற்றோர்களும் கோபப்பட்டு கத்துகிறார்கள், வாக்குவாதம் செய்கிறார்கள். அப்படி செய்யாதீங்க. பிள்ளைகள் அடம் பிடிக்கும் நேரத்தில், ‘நீ அடம் பிடித்தால் எனக்கென்ன?’ என்பது போன்று சாதாரணமாகவும் இயல்பாகவும் கண்டுகொள்ளாமல் இருங்கள். கேட்பதற்கு பதில் சொல்லாதீர்கள். பொறுமையை இழந்துவிடாமல் அமைதியாக இருந்தாலே குழந்தையை ஜெயித்துவிடலாம்.
- அடிக்காதீங்க : அடம் பிடிக்கும் குழந்தைகளை அடிப்பது, அறையில் பூட்டுவது, பூச்சாண்டி காட்டுவது எல்லாமே தவறான வழிமுறை. இதனால் குழந்தைகள் அதிகம் அழுவார்கள், கீழே புரண்டு உருள்வார்கள், சுவற்றில் முட்டிக்கொள்வார்கள். எனவே எந்த ரியாக்ஷனும் காட்டாமல் காதில் பஞ்சு வைத்துக்கொண்டு அமைதியாக உங்கள் வேலையைப் பாருங்கள்.
- பணியாதீர்கள் : நீண்ட நேரமாக அடம் பிடிக்கிறார்கள் என்பதற்காக கேட்டதை வாங்கிக் கொடுத்துவிடாதீர்கள். மிரட்டலுக்குப் பணிந்துவிடுவீர்கள் என்பதைப் புரிந்துகொண்டால், பிள்ளைகள் அதன் பிறகு எல்லா விஷயங்களுக்கும் அடம் பிடிப்பார்கள்.
- திசை திருப்புங்கள் : அடம் பிடிப்பதை திசை திருப்பும் வகையில் குழந்தைக்குப் பிடித்ததை சமைப்பது, தொலைக்காட்சி நிகழ்ச்சி பார்ப்பது, விளையாடுவது போன்ற செயலில் இறங்குங்கள்.
- பாராட்டு : வீட்டுக்கு வரும் உறவினர்கள், நண்பர்களிடம், ‘எங்க பிள்ளை அடம் பிடிக்கவே மாட்டான், ரொம்பவும் சமர்த்து’ என்று சொல்லுங்கள். அவ்வப்போது பிள்ளையிடம், ‘அடம் பிடித்தால் நண்பர்கள் கிடைக்க மாட்டார்கள்’ என்பது போன்று சொல்லிக்கொண்டே இருங்கள்.
கேட்டது எல்லாமே கிடைக்காது என்பது பிள்ளைக்குத் தெளிவாகப் புரிய வையுங்கள். ஏமாற்றத்தை தாங்கிக்கொள்ளும் பிள்ளைகளே எதிர்காலத்தில் தோல்விகளைக் கண்டு அச்சப்படாமல் வெற்றிவாகை சூடுவார்கள்.