• Home
  • அழகு
  • ஹேர் ட்ரையர் போடாதீங்க..!

ஹேர் ட்ரையர் போடாதீங்க..!

Image

அழகிய தலைமுடிக்கு ஆலோசனைகள்

மேகம் போன்று அலையலையாக கூந்தல் வேண்டுமா? விதவிதமாக எண்ணெய் அல்லது அழகு பொருட்களைத் தடவுவது முக்கியம் அல்ல. ஆம், போஷாக்கான உணவுதான் முதல் தேவை. அடுத்து, முடியின்மீது சூரியக்கதிர்கள் நேரடியாகப் படாதவாறு பாதுகாக்க வேண்டும். சூரிய உஷ்ணமானது முடியின் வேர்க்கால்களைத் தாக்கி, முடி உதிர்வதை அதிகரிக்கும். எனவே, வெளியே செல்லும்போது தலைக்கு தொப்பி அல்லது துப்பட்டா கொண்டு சுற்றிக் கொண்டு செல்வது நல்லது. மேலும், உடம்பில் மலச்சிக்கல் உண்டானால், உடல் உஷ்ணம் அதிகமாகி, உடம்பில் பித்தம் அதிகரித்து, தலைமுடி கொட்ட ஆரம்பித்துவிடும். எனவே, மலசிக்கல் இல்லாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். ஆகவே, காட்டன் தலையணை உறையைப் பயன்படுத்தினால், முடி அதிகம் உதிர வாய்ப்புண்டு. ஆகவே, சில்க் தலையணை உறையைப் பயன்படுத்த வேண்டும்.

கறிவேப்பிலை, கீரை, நெல்லிக்காய் முதலியவற்றையும் அடிக்கடி உணவில் தாராளமாய்ச் சேர்த்துக்கொண்டால் தலைமுடி செழிப்பாய் வளரும். இது தவிர, அடிக்கடி ஆயில் மசாஜ், முட்டை மஜாஜ், உருளைக்கிழங்கு மசாஜ், வெங்காயச் சாறு மஜாஜ் செய்யலாம். அதுபோல், மாதம் ஒருமுறை ஒரு டம்ளர் பீரைக் கொண்டு, ஸ்கால்ப்பை நன்கு மசாஜ் செய்யலாம். வினிகரைக் கொண்டும் கூந்தலைப் பராமரிக்கலாம்.

இப்படிச் செய்வதால் முடி நன்கு வளர்ச்சி பெறுவதோடு ஆரோக்கியமாகவும் இருக்கும். தவிர, மாதம் ஒருமுறை ட்ரிம் செய்தும் முடியைப் பாதுகாக்கலாம். அதேநேரத்தில், ஹேர் ட்ரையர் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். அதுபோல், கண்டிஷனர் முடிக்கு நல்லதுதான் என்றாலும், கெமிக்கல் கலந்த கண்டிஷனரைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, இயற்கை கண்டிஷனரான தயிரைப் பயன்படுத்தலாம். மேலும், தினமும் 3 – 4 முறை தலைக்குச் சீப்பைப் பயன்படுத்துவதால்,  மயிர்கால்கள் நன்கு புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

அதே நேரத்தில், முடி ஈரமாக இருக்கும்போது, தலைக்கு சீப்பு பயன்படுத்த வேண்டாம். ஏனெனில் முடி ஈரமாக இருக்கும்போது வலிமையிழந்து இருக்கும். அப்போது சீப்பு பயன்படுத்தினால், முடியானது வேரோடு வந்துவிடும். ஆகவே முடி உலரும் வரை சீப்பு பயன்படுத்தாதீர்கள். குறிப்பாக, முடியின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் பொருட்டு தினம் தலை குளிப்பதைத் தவிர்த்து வாரத்திற்கு இரண்டு முறை தலை குளிக்கலாம். மேலும் வீட்டிலிருந்தே எளிய வகையில் கூந்தலைப் பராமரிக்கக்கூடிய வழிகள் குறித்துப் பார்க்கலாம்…

* முடி வேகமாக வளர தேங்காய் எண்ணெயில் காயவைத்த செம்பருத்திப் பூ மற்றும் ஆலமரத்தின் இளம்வேர்களைப் பொடிசெய்து, தொடர்ந்து பயன்படுத்தி வர முடி கறுப்பாகவும் நீண்டும் வளரும்.

* தேங்காய் எண்ணெய்யில் மருதாணி பூவை ஊறவைத்து, வெயிலில் காயவைத்து, தினமும் தேய்த்து வர வழுக்கைத் தலையில் முடி வளரும்.

* கீழாநெல்லி வேரைச் சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்குத் தடவி வந்தால் வழுக்கை மறையும்.

* வெள்ளை மிளகு அல்லது நல்ல மிளகை, பாலில் அரைத்து தலைக்குத் தடவிக் குளித்து வந்தால் பொடுகு வராது.

* வேப்ப இலை மற்றும் துளசி இலையைப் பால்விட்டு அரைத்து தலையில் தேய்த்து, குளித்துவர பேன் மற்றும் பொடுகுத் தொல்லையிலிருந்து விடுபடலாம்.

* வெந்தயம் மற்றும் குன்றிமணியைப் பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒருவாரத்திற்குப் பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.

* உணவில், முளைக்கீரையை அடிக்கடி சாப்பிட்டு வர நரைமுடி கறுப்பாகும்.

* எண்ணெய்யுடன் நெல்லிக்காயைக் காயவைத்து, பவுடராக்கி, கலந்து தினமும் தேய்த்து வந்தால் இளநரை கறுப்பாகும்.

* அரைத்த வெந்தயத்தைத் தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால், முடி உதிர்வது கட்டுப்படும். மேலும் கறுப்பாகவும் பளபளப்பாகவும் இருக்கும்.

* நெல்லிக்காய்ப் பொடியுடன், நீர் மற்றும் சர்க்கரை சேர்த்து அருந்தி வர, முடி நன்கு வளர்ச்சி பெறும்.

* மருதாணி பொடி, தேங்காய்ப்பால், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து கூந்தலில் தேய்த்து குளித்து வர, வறண்ட தலைமுடி மேன்மையடையும்

* ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை நீரில் ஊறவைத்து, பின்னர் அதை மறுநாள் காலை அரை‌த்து தலையில் தேய்த்து, கடலை மாவுகொண்டு அலச கூந்தல் பொலிவு பெறும்.

 * சாதம் வடித்த கஞ்சியுடன் சிகைக்காய் பவுடரைக் கலந்து தேய்த்து வாரம் இருமுறை குளித்துவர, முடி அடர்த்தியாக வளரும்.

* ஆலிவ் எண்ணெய்யைச் சிறிது சூடாக்கி, தினசரி தேய்த்து 6 மணி நேரம் கழித்து குளித்துவர, முடி பளபளப்பாகவும் அடர்த்தியாகவும் இருக்கும்.

* செம்பருத்திப்பூவை கசக்கிச் சாறு எடுத்து முடி உதிர்ந்து சொட்டையாகியுள்ள இடத்தில் தேய்த்துவர முடி வளர ஆரம்பிக்கும்.

* தாமரை இலைச் சாற்றை நல்லெண்ணெய்யுடன் கலந்து தைலமாக, தலை சொட்டையான இடத்தில் தேய்த்துவர, முடி வளரும்.

* மருதாணி இலையை, தேங்காய் எண்ணெயிலிட்டு காய்ச்சி, தினசரி தலைக்குத் தடவிவர செம்பட்டை நிறம் மாறி முடி கருமையாகும்.

* 1 ஸ்பூன் இஞ்சிச் சாற்றில் சிறிது தேன் கலந்து அதிகாலையில் சாப்பிட்டுவர, பித்த நரை, மற்றும் இளநரை மறையும்.

* பாதாம் எண்ணெய்யினால் தினசரி தலையில் வேர்க்காலில் குறைந்தது 15 நிமிடங்கள் மசாஜ் செய்துவர முடி வளர்ச்சி அதிகமாகும்.

* சாதம் வடித்த கஞ்சியில் வெந்தயப் பொடி மற்றும் பயத்த மாவு ஆகியவற்றை ஊறவைத்து தலைதேய்த்து குளித்தால் முடிக்கு ஆரோக்கியம் கிடைக்கும்.

Leave a Comment