காரணம் இதுதாங்க
குழந்தை கோப்பப்படுகிறது என்றால், அதற்கு என்ன காரணம் தெரியுமா? பெற்றோரின் கவனிப்பின்மையும், விரக்தியுமே காரணம் என்கிறார்கள், குழந்தை மருத்துவர்கள். பொதுவாக, கோபம் கொள்ளும் குழந்தைகளைக் கையாள பெற்றோர்களுக்கு நீண்ட நிமிடம் எடுக்கும். அவர்களுடைய ஆசை தீரும்வரை கோபத்தைக் கட்டுப்படுத்த மாட்டார்கள். அதற்கு முக்கியமாக, பெற்றோர்களுக்குத் பொறுமையும் நீடித்து நிலைக்கும் செயல் திறனும் வேண்டும்.
குழந்தைகளுக்கு கோபம் வந்துவிட்டால் போதும்; அவர்கள் எப்படி வேண்டுமானாலும் அதை வெளிக்காட்டுவார்கள். அமைதியாக அழுவார்கள்; மூர்க்கத்தனமாக நடந்துகொள்வார்கள்; தரையில் உருண்டு புரள்வார்கள் எனப் பலவகைகளில் அவர்கள் கோபத்தைக் காட்டுவார்கள். இதுபோக பெற்றோர்களை அடிக்கலாம், கூச்சலிடலாம், அழலாம் அல்லது கடிக்கக்கூடச் செய்யலாம். குழந்தைகள் இப்படிச் செய்யும் நேரத்தில், பெற்றோர்களுக்கு மன அழுத்தமும் எரிச்சலும் ஏற்படும். இதனைத் தடுக்க, பெற்றோருக்கு நிலையான அக்கறையும் மன ஒருமித்தலும் இருந்தால் போதும். நிச்சயம் குழந்தையின் கோபத்தை மாற்றிவிடலாம். அதற்கு பெற்றோர் செய்ய வேண்டிய எளிய வழிமுறைகள் இதோ…
முதலில், பெற்றோர்கள் குழந்தைக்கு கோபம் வருவதற்கான காரணத்தைக் கண்டறிய வேண்டும். சில நேரம், உங்கள் கவனத்தை ஈர்க்க அவர்கள் தங்களின் கோபத்தை வெளிக்காட்டலாம் அல்லது அவர்கள் தேவைகள் நிராகரிக்கப்படும்போதும் கோபத்தை வெளிக்காட்டலாம். ஆகையால், உங்கள் குழந்தைக்கு கோபத்தை உண்டாக்கும் சூழ்நிலை திரும்ப ஏற்படாமல் பார்த்துக்கொள்வதில் கவனமாய் இருக்க வேண்டும்.
குழந்தையின் சில தேவையை நீங்கள் நிராகரிப்பதற்கான சரியான காரணத்தை அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். அதே நேரம், அவர்களின் அனைத்துத் தேவைகளையும் நீங்கள் நிராகரிக்கக்கூடாது. பொதுவாக, குழந்தைகளிடம் பெற்றோர்கள் போதிய நேரத்தைச் செலவிடாததே அவர்களுடைய கோபத்துக்கு வழிவகுக்கிறது. ஆகையால், உங்கள் குழந்தைகளுடன் போதிய நேரம் செலவழித்து எது சரி, எது தவறு என்பதை அவர்களுக்குப் புரிய வையுங்கள்.
குழந்தைகள் தங்களின் கோபத்தை வெளிப்படுத்தி அமைதியான பிறகு, அவர்களுடன் நாமும் அமைதியாகப் பேச வேண்டும். அவர்களிடம், ‘இப்படிச் செய்வது ஒரு தீயப் பழக்கம்’ என்று புரிய வைக்க வேண்டும். நீங்கள் எடுக்கும் நடவடிக்கைகளால் உடனடி பலன் கிடைக்கும் என்று எதிர்பார்க்காதீர்கள். அதற்கு சிறிது காலம் எடுக்கும். நீங்கள் எடுக்கும் நடவடிக்கைகளில் தொடர்ச்சியான பொறுமையை நீங்கள் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.
உங்கள் குழந்தை கோபத்தை எப்படி வெளிப்படுத்தினாலும் சரி, அவர்களைப் பார்த்து நாமும் கத்தக் கூடாது. அதேபோல், அவர்களை அடிக்கும்போது பயம் என்பதே இல்லாமல் போய்விடும். ஆகையால், குழந்தைகள் கோபப்படும் விஷயத்தில் இவற்றை எல்லாம் கையாள வேண்டியது அவசியம்.