ஆசை வரம்
‘’பிரார்த்தனைக்கு அளப்பரிய சக்தி இருக்கிறது என்கிறார்கள். ஆனால், நான் என்ன பிரார்த்தனை செய்தாலும், அது நடப்பதே இல்லை. ஏன் எனக்கு மட்டும் இப்படி சோதனைகள் நிகழ்கிறது’’ என்று மகேந்திரன் மிகுந்த சோகத்துடன் ஞானகுருவிடம் விளக்கம் கேட்டார்.
‘’ஒவ்வொரு மனிதரின் பிரார்த்தனையும் நிறைவேறத் தொடங்கினால், இந்த உலகத்தின் இயக்கமே பைத்தியக்காரத்தனமாக மாறிவிடும்’’ என்று சிரித்தார் ஞானகுரு.
அந்த பதிலுக்கு அர்த்தம் தெரியாமல் மகேந்திரன் விழிக்கவே, விளக்கம் சொல்லத் தொடங்கினார் ஞானகுரு.
‘’ஒவ்வொரு நபரும் பிரார்த்தனை என்ற பெயரில் தங்கள் ஆசையை குறுக்குவழியில் நிறைவேற்றப் பார்க்கிறார்கள். எனவே, ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு ஆசை இருக்கும். அப்படி பிரார்த்தனை செய்யும் ஒவ்வொரு நபரின் ஆசையும் ஒன்றுக்கொன்று முரணாகவே இருக்கும்.
விவசாயி மழை வேண்டும் என்பான், வியாபாரி மழை பெய்யக் கூடாது என்பான். நோயே வரக்கூடாது என்று ஒருவன் ஆசைப்படுவான். நிறைய நோயாளிகள் வரவேண்டும் என்று மருத்துவன் விரும்புவான். விடுமுறை வேண்டும் என மாணவன் ஆசைப்படுவான். ஞாயிற்றுக் கிழமையும் ஸ்பெஷல் வகுப்பு வேண்டும் என்று பெற்றோர் பிரார்த்தனை செய்வார்கள்.
இத்தனை முரண்பாடுகள் இருக்கும்போது, யாருடைய பிரார்த்தனையை கடவுள் நிறைவேற்றுவார்..? யாராவது ஒருவர் பிரார்த்தனையை நிறைவேற்றினால், இன்னொருவர் ஏமாற்றம் அடைவார் என்பதே உண்மை. ஆகவே, பிரார்த்தனைகள் ஒருபோதும் பலிப்பதில்லை.
அதேநேரம் பிரார்த்தனை செய்தாலும் செய்யாவிட்டாலும், விவசாயி கேட்டாலும், கேட்கா விட்டாலும் மழையும் வெயிலும் அந்தந்த காலத்தில் அடித்துக்கொண்டே இருக்கும். யாருக்காகவும் தன்னை இயற்கை மாற்றிக்கொள்வதில்லை.
நினைப்பது நடக்க வேண்டும் என்ற பிரார்த்தனை நிறைவேறத் தொடங்கினால் என்ன சிக்கல் வரும் என்பதற்கு ஒரு குட்டிக் கதை இருக்கிறது…’’ என்றார் ஞானகுரு.
‘’அது என்ன…” ஆர்வமானார் மகேந்திரன்.
‘’ஒருவன் மிகுந்த பக்தியுடன் தவம் செய்து இறைவனிடம் ஒரு வரம் பெற்றான். அதாவது, ‘நான் நினைப்பதெல்லாம் நடக்க வேண்டும்…’ என்பதை வரமாகப் பெற்றுக்கொண்டான். அதன் பிறகு அவன் வாழ்க்கை மிகச்சிறப்பாக மாறியது. அவன் ஆசைப்பட்டது எல்லாம் நடந்துவந்தன. மிகப் பெரிய அரண்மனையை உருவாக்கி, ஏகப்பட்ட செல்வத்துடன் சொகுசாக வாழ்ந்துவந்தான்.
ஒரு நாள் அரண்மனை தோட்டத்தில் உலவும்போது, ஒரு மிகப்பெரிய ஆலமரத்தின் கீழ் அமர்ந்தான். லேசாக தூக்கம் கண்ணை அசத்தியது.
‘இங்கேயே ஒரு கட்டில் இருந்தால் அப்படியே படுத்துக்கொள்ளலாம்’ என்று நினைத்தான். உடனே அங்கே ஒரு அழகான கட்டில் தோன்றியது. உடனே அதில் ஏறிப் படுத்துக்கொண்டான்.
கால், கைகளை அமுக்கிவிட இரண்டு பெண்கள் இருந்தால் சுகமாக இருக்கும் என்று நினைத்தான். உடனே இரண்டு பெண்கள் தோன்றி, அவனுக்கு சேவகம் செய்யத் தொடங்கினார்கள். மிகுந்த மகிழ்ச்சி அடைந்தவன் படுத்தபடியே மரத்தின் மேலே பார்த்தான். மிகப்பெரிய கிளை ஒன்று காற்றுக்கு அசைந்துகொண்டு இருந்தது. ‘இந்த கிளை முறிந்து என் மீது விழுந்துவிட்டால், நான் செத்துப்போவேனே…’ என்று சிந்தித்தான். அதன்பிறகு என்ன நடந்திருக்கும் என்பதை சொல்லவே வேண்டியதில்லை…’’ என்று சிரித்தார் ஞானகுரு.
‘’அப்படியென்றால் பிரார்த்தனைகள் பலிக்காது என்கிறீர்களா..?’’
‘’கடவுளிடம் பிரார்த்தனை செய்யாதே… உன் மனதிடம் பிரார்த்தனை செய். உன்னுடைய தகுதிகள் என்ன என்பதும், உனக்கு எது தேவை என்பதும் உன் மனசுக்குத் தெரியும். ஆகவே, மனதிடம் உறுதியுடனும் நேர்மையுடனும் கேள். அப்படி நீ கேட்கும்போது உன் பிரார்த்தனை நிச்சயம் நிறைவேறிவிடும்…’’
‘’அப்படி நிறைவேறவில்லை என்றால்..’’
‘’உன் மனதில் போதிய அளவுக்கு நம்பிக்கையை வளர்க்கவில்லை என்று அர்த்தம். எனவே, நம்பிக்கையுடன் உன் ஆசையை மனசிடம் சொல்லிக்கொண்டே இரு… ஒரு நாள் நிச்சயம் கொடுத்துவிடும்…”
தெளிவுக்கு வந்தார் மகேந்திரன்.
..