மரத்தை அழிக்க மனிதனுக்கு உரிமை உண்டா..?

Image

சீமைக்கருவேல மரம்

இந்த உலகிற்கு மனிதர்களே பொறுப்பெடுத்துக் கொள்வது போல் நடந்துவருகிறார்கள். மனிதர்களின் கொடூரத் தாக்குதல் காரணமாகவே சிங்கம், புலி போன்ற மிருகங்கள் எண்ணிக்கை குறைந்து போயின. வீடு கட்டுவதற்காக காட்டை அழித்தான். இப்போது சீமைக்கருவேல மரத்தை அழிக்கும் முயற்சியில் மனிதர்கள் இறங்கியிருக்கிறார்கள்.

எந்த ஒரு உயிரினத்தையும் முற்றாக பூமியில் இருந்து அழித்தொழிக்கும் உரிமை மனிதருக்கு இருக்கிறதா..? இயற்கைக்கு சீமைக்கருவேல மரம் ஆபத்து என்று மனிதன் எப்படி முடிவு எடுக்க முடியும். ஆனால், முடிவு எடுத்து அழிக்கும் வேலையில் இறங்கியிருக்கின்றான்.


 ‘சீமை கருவேல மரங்களால் விவசாயம் பாதிக்கப்படுகிறது; நிலத்தடி நீர் உறிஞ்சப்படுகிறது. ஆகவே, அவற்றை அகற்ற வேண்டும்’ என ஒருசில வருடங்களுக்கு முன்பு, மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கே தொடரப்பட்டது. அது மட்டுமின்றி, அதை அழிப்பதற்காக கோடரி எடுத்தவர்களும் உண்டு; அதேபோல்,   ‘ஜாமீனில் வெளிவரும் குற்றம்சாட்டப்பட்டவர், இருபது நாட்களுக்குள் 100 சீமைக் கருவேல மரங்களை அகற்ற வேண்டும்’ என  நீதிபதி ஒருவர்  உத்தரவு போட்டது.  குறிப்பிடத்தக்கது.

உண்மையி சீமைக்கருவேல மரம் ஆபத்தானதா..?


புரோசோபிஸ் ஜுலிபுளோரா என்பது சீமை கருவேல மரங்களின் அறிவியல் பெயர்.  இவை வறட்சியைத் தாங்குபவையாகவும், விரைவாக இனத்தைப் பெருக்குபவையாகவும் இருப்பதால், எங்கேயும் எப்போதும் எளிதாய் வளர்ந்து நிற்கின்றன. மெக்சிகோ, பெரு, சிலி போன்ற தென் அமெரிக்க நாடுகளே இவற்றின் தாயகம் என்று கூறப்படுகிறது. வேலிக்காத்தான், வேலிக்கருவை, உடைமரம், காட்டுக்கருவை என்ற பெயர்களில் அழைக்கப்படும் இவற்றின் விதைகள், ஒருகாலத்தில் தமிழ்நாடு முழுவதும் விமானம் மூலம் பரப்பப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

ஆனால், 1876ம் ஆண்டே இந்த மரங்கள் ஆங்கிலேயர்களால் அறிமுகப்படுத்தப்பட்டதாக ஆவணங்கள் சொல்கின்றன. ஆங்கிலேயர் அறிமுகப்படுத்தியதால்தானோ, என்னவோ  இந்த மரங்கள் ‘சீமை’ என்ற பெயரைத் தாங்கி நிற்கின்றன. அன்றைய மதராஸ் மாகாணத்தில் இருந்த கடப்பாவில் உள்ள கமலாபுரத்தில், இதன் விதைகள் விதைக்கப்பட்டதாக ஆய்வுகள் கூறுகின்றன. ஆங்கிலேயர்களின் தேவைகளுக்காகவும், இதரப் பயன்பாட்டுக்காகவும் இங்கிருந்த சந்தனம், தேக்கு, வேங்கை முதலிய மரங்கள் அழிக்கப்பட்டதால், அதனை ஈடுகட்டுவதற்காக இவை நடப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.


இந்த மரங்களை அழிப்பதற்கான முதல் காரணம், நம் நாட்டில் உள்ள 25,000 தாவர இனங்களில் 40 சதவிகிதம் அயல்நாட்டைச் சார்ந்தவை; அவற்றில், 15 முதல் 25 சதவிகித இனங்கள் மற்ற இனங்களுக்கும், உயிர்களுக்கும் தொல்லைகொடுப்பவை. இதில்,  சீமை கருவேல மரங்களே முதலில் நிற்பவை. இவை, விவசாய நிலங்களை மட்டுமல்லாது… சிறு புல் பூண்டுள்ள தாவரங்களையும் சிதைக்கக் கூடியவை. சீமை கருவேல மரங்கள், தம்மைக் காத்துக்கொள்வதற்காக  நிலத்தடி நீரை  அதிக அளவில் உறிஞ்சக்கூடியவை. இதனால் இவற்றுக்கு அருகில் தஞ்சமடைந்திருக்கும் மற்ற இனங்களும் மாண்டுவிடுகின்றன. இந்த மரங்கள், 100 மீட்டர் ஆழத்துக்கு வேர்விட்டு, 12 மீட்டர் உயரத்துக்கு வளர்வதாகச் சொல்லப்படுகிறது. தவிர, இதனைச் சுற்றி 55 மீட்டர் அகலப் பரப்புக்கு நீர் எங்கிருந்தாலும் அதை உறிஞ்சிவிடக்கூடியதாகவும் இந்த மரங்கள் இருப்பதாக  ஆய்வாளர்கள் ஆய்ந்து சொல்லியுள்ளனர்.

ஒருமுறை விறகு தேவைக்காக, நாகை மாவட்ட சரணாலயத்தைச் சுற்றி இந்த மரங்கள் நடப்பட்டன. அப்போது இவற்றின் இலைகளை உண்ட, இங்கிருந்த சில விலங்குகள் இனப்பெருக்கமின்றி அழிந்துபோனதாகவும், இந்த மரத்தின் கனிகளை (சுக்ரோஸ் என்ற இனிப்புச் சுவை உடையவை)  விரும்பியுண்ணும் கால்நடைகள் மலடானதாகவும் ஆய்வில் சொல்லப்பட்டது.

அதனால்தான் இந்த மரங்களை முற்றிலும் அழித்துவிட்டால், மண்வளம் கிடைக்கும்; மழை பொழியும் என்று சொல்லப்படுகிறது. இதையடுத்து, ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பரத்பூர் பறவைகள் தேசியப் பூங்காவில் வளர்ந்திருந்த இந்த  மரங்கள்  முற்றிலும் அழிக்கப்பட்டன. இதன்காரணமாக, குறைந்துகொண்டேபோன அந்தப் பூங்காவில் இருந்த பறவைகளின் எண்ணிக்கை, அதன்பிறகு  அதிகரிக்கத் தொடங்கியதாகவும்  ஆய்வில்  சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. அதை, ஐ.நா சபையும் பாராட்டியிருந்தது கவனிக்கத்தக்கது.  

இந்த மரங்களின் அழிவில்தான் நாட்டின் வளம் இருக்கிறது என்று சொல்லும் ஆய்வாளர்கள்,  அதற்காக அவற்றைப் பாதியோடு வெட்டிவிட்டு நிறுத்திவிடக் கூடாது என்கின்றனர்.  வேரோடு பிடுங்கி எறிய வேண்டும் என்று சொல்லும் அவர்கள், அதற்காக ஆசிட்டையோ அல்லது வேறு ஏதாவது ஒன்றை ஊற்றியோ அழிக்கக்கூடாது. அப்படி அழித்தால், மண்வளம்தான் கெட்டுப்போகும் என்று எச்சரிக்கிறார்கள்.  அவர்கள் சொல்வதுபோல் கருவேல மரங்களை அழிப்பது ஒருபுறம் என்றால், மறுபுறம் மண்வளத்தைப் பெருக்க நாட்டு மரங்களை நடுவதும் அவசியம்.

ஆனால், சமீபத்திய சில ஆய்வுகள் கருவேல மரங்கள், உண்மையில் அத்தனை விஷத்தன்மை வாய்ந்தவை அல்ல என்று கூறுகின்றன. தண்ணீர் இல்லாத இடங்களில் வளரும் தன்மை இருப்பதால், அத்தகைய இடங்களில் வசிப்பவர்களுக்கு இது பயன்படுகிறது என்பதால், முழுமையாக அழிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறுகிறார்கள்.

மானுக்கு புலியும் சிங்கமும் ஆபத்தாக இருக்கலாம். அதற்காக காட்டில் அவை வாழவேண்டிய அவசியம் இல்லை என்று கூற முடியாது. எனவே, இயற்கை உருவாக்கியதை மனிதன் அழிக்காமல் இருக்க வேண்டும். அதுவே சரி.  

Leave a Comment