• Home
  • அரசியல்
  • எடப்பாடி பழனிசாமிக்கு இம்புட்டூ அறிவா..?

எடப்பாடி பழனிசாமிக்கு இம்புட்டூ அறிவா..?

Image

10% வாக்கு வில்லங்கம்

இரண்டரைக் கோடி உறுப்பினர்களைக் கொண்ட இயக்கம் அ.தி.மு.க. என்று மேடைக்கு மேடை பெருமை பேசும் எடப்பாடி பழனிசாமி, இப்போது தோல்விக்குக் கூறியிருக்கும் காரணத்தைக் கேட்டு சொந்தக் கட்சியினரே அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.

அ.தி.முக. சார்பில் இன்று நடைபெற்ற ஐ.டி. விங் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி, ‘’கட்சியின் 10 சதவீத வாக்களார்களுக்கு வயதாகிவிட்டதால் வாக்கு சதவீதம் குறைந்துவிட்டது. எனவே இளைஞர்களை ஈர்க்கும் வகையில் சமூகவலைதளத்தில் நாம் பணியாற்ற வேண்டும்’ பேசியிருக்கிரார். 10% பேர் செத்துப் போய்விட்டார்கள் என்ற அர்த்தத்தில் தோல்விக்கு காரணம் சொல்லியிருப்பது அரசியல் வட்டாரத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தோல்விக்கு சரியான காரணம் புரியமுடியாத எடப்பாடி பழனிசாமியால் எப்படி வெற்றியை நோக்கி நகரமுடியும் என்று கேள்வி எழுப்புகிறார்கள்.

பழைய வாக்காளர்கள் இல்லை என்றே வைத்துக்கொள்வோம், புதிய வாக்காளர்கள் யாரும் இணையவே இல்லையா..? தி.மு.க.வினர் மட்டும் எப்படி பழைய வாக்காளர்களைத் தக்க வைக்க முடிகிறது என்று கேள்வி மேல் கேள்வி எழுப்புகிறார்கள். தேர்தல் தோல்விக்குப் பிறகு நடத்திய ஆலோசனையில் இதைத் தான் எடப்பாடி பழனிசாமி கண்டுபிடித்தாரா என்று கிண்டல் செய்கிறார்கள்.

அதேநேரம் எடப்பாடியின் ஆதரவாளர்கள், ‘’எடப்பாடி பழனிசாமி சொல்வது உண்மைதான். அ.தி.மு.க. 10% வாக்குகளை இழந்துள்ளது. அதேநேரம் 10% வாக்குகளையும் பெற்றிருக்கிறது. 30%-ஆக இருக்க வேண்டிய வாக்கு வங்கி, 21%-ஆக இருந்ததற்கு அதுவே காரணம். பா.ஜக.வுடன் கூட்டணி இல்லாதது அதிமுகவுக்கு 10% வாக்குகளை கூடுதலாக கொடுத்துள்ளது. அதேநேரம் நாடாளுமன்றத் தேர்தல் என்கிற போது, பிரதமர் வேட்பாளருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு 10% வாக்குகளை அதிமுக இழந்துள்ளது.

தேர்தல் முடிவுகள் வெளியான நாளில் இருந்து இதை தான் தொடர்ந்து நான் கூறி வருகிறேன். அதிமுக பெற்றிருக்கும் இந்த 10% வாக்குகள் என்பது வன்னியர் சமூகம், முத்தரையர் சமூகம், தேவேந்திர குல வேளாளர், நாடார் மற்றும் சிறுபான்மையின சமூகத்தினரின் வாக்குகளை உள்ளடக்கியது. இழந்த 10% வாக்குகள் முக்குலத்தோர், பறையர் உள்ளிட்ட சமூகங்களின் வாக்குகள். அதில் குறிப்பிட்ட அளவு கவுண்டர் சமூக வாக்குகளும் அடங்கும். முக்குலத்தோர் சமூகத்தின் வாக்குகளை அதிமுக இழப்பதை தவிர்க்க ஆர்.பி உதயகுமார் அவர்கள் இப்போது பணி செய்து வருகிறார். கவுண்டர் சமூக வாக்குகள் சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு வந்துவிடும். அதில் சந்தேகமே இல்லை. பறையர் சமூக வாக்குகளை கவர தான் அதிமுக முயற்சிக்க வேண்டும். அச்சமூகத்திற்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், அதை தோலுரித்துக் காட்ட வேண்டியது அவசியம்..’’ என்கிறார்கள்.

அதேநேரம், இந்த விவகாரம் குறித்து கே.சி.பழனிசாமி, ‘’2114-ல் ஜெயலலிதா அம்மா இருந்த போது திமுக கூட்டணி ஒரு புறம், பாஜக கூட்டணி ஒரு புறம் இருக்க தனித்து நின்று மாபெரும் வெற்றியை பெற்றது. 2016-ல் தனித்து நின்று 45% க்கும் மேல் வாக்கு பெற்று ஆட்சி அமைத்த கட்சி அதிமுக. 2017-ல் எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றதில் இருந்து 2019,2021,2024-ல் நடந்த முக்கிய பொதுத்தேர்தல்கள் மற்றும் உள்ளாட்சி, இடைத்தேர்தல்கள் என தொடர்ந்து 10 தேர்தல்களில் தோல்வி அடைந்துள்ளது. கடைசியாக 10% தொண்டர்கள் இறந்துவிட்டார்கள் என்று அதற்க்கு காரணம் கூறுவது முட்டாள்தனமாக உள்ளது.

ஒருவேளை சில தொண்டர்கள் காலமாகியிருந்தாலும் அவர்களது குடும்பம், வாரிசுகள் இருந்திருப்பார்கள் அல்லவா? அவர்கள் ஏன் உங்களை ஏற்றுக்கொள்ளவில்லை? தொண்டர்கள் காலமாகிவிட்டார் என்பது எல்லாம் சரியான வாதம் அல்ல உங்கள் தலைமை ஏற்கப்படவில்லை. அதிமுகவின் வாக்கு வாங்கி குறைந்துள்ளது என்பதையே நீங்கள் இப்போது தான் ஒப்புகொண்டுளீர்கள். ஆனால் அதற்கு நீங்கள் கூறும் காரணம் வேடிக்கையாக உள்ளது, நீங்கள் தலைமைக்கு தகுதி இல்லை என்பதை நிரூபிக்கும் விதமாக உள்ளது.

அதிமுகவின் தோல்விக்கு நீங்கள் ஏற்படுத்திய பிளவு தான் காரணம், உங்களுக்கு தலைமைக்கு தகுதி இல்லை என்பது தான் காரணம் என்பதை உணர மறுக்கிறீர்கள். ஒன்றுபட்ட அதிமுக மட்டுமே தேர்தலில் வெற்றிபெறும். அப்பொழுது தான் மக்கள் அங்கீகரிப்பார்கள் இது ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் தெரிகிறது உங்களை தவிர. எனவே நீங்கள் திருந்த வேண்டும், திரும்பவும் புதிது புதிதாக தவறான காரணங்களை கண்டுபிடிக்க ஆராய்ச்சி செய்யவேண்டாம்..’’ என்று போட்டுத் தாக்கியிருக்கிறார்.

Leave a Comment