மருத்துவ உண்மை
சின்னப் பிள்ளைகள் பபுள்கம் சாப்பிடுவதைக் கண்டாலே பெரியவர்கள் பதறிப்போய், ‘புபுள்கம்மை மறக்காம துப்பிடு. வயித்துக்குள்ளே போயிடுச்சுன்னா குடலுக்குள் ஒட்டிக்கொள்ளும். ஜீரணமாவதற்கு ஏழெட்டு வருடங்கள் ஆகும்’ என்று பயமுறுத்துவார்கள்.
ஆப்பிள் விதை, ஆரஞ்சு விதையை விழுங்கிவிட்டால் வயிற்றுக்குள் மரம் முளைத்துவிடும் என்பது போன்ற கட்டுக்கதையே பபுள்கம் விழுங்குவதற்கும் பொருந்தும். நாம் சாப்பிடும் உணவு எல்லாமே இரைப்பைக்குள் சேர்ந்ததும் அமிலமும் என்சைம்களும் சேர்ந்து அவற்றை சிதைத்துவிடும். அதேபோல் பபுள்கம்மில் இருக்கும் சர்க்கரை, எண்ணெய் போன்றவை உடனடியாக இரைப்பையில் சிதைந்துவிடும்.
அதேநேரம் வழுவழுப்புத் தன்மையைக் கொடுக்கும் எலாஸ்டோமெர்ஸ், மெழுகு போன்றவை ஜீரணமாகாது என்றாலும் கழிவாக வெளியேறிவிடும். எப்படியென்றாலும் அதிகபட்சம் இரண்டு அல்லது மூன்று நாட்களில் பபுள்கம் முழுமையாக உடலைவிட்டு வெளியேறிவிடும்.
பபுள்கம் மட்டுமல்ல நாணயம், பட்டன் போன்றவையும் ஜீரணமாகாமல் மலம் மூலமாக தானாகவே வெளியேறிவிடும். ஆபத்தான வடிவத்தில் இருக்கும் கடினப் பொருட்களை உட்கொண்டால் மட்டுமே மருத்துவக் கருவிகள் மூலம் அகற்ற வேண்டும். எனவே பபுள்கம் விழுங்கிவிட்டால் பயப்பட வேண்டாம்.