திருச்சி சூர்யா, கல்யாணராமன் பதிலடி
சென்னையில் அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற பா.ஜ.க. கூட்டத்தில் கிட்டத்தட்ட 6 மணி நேரம் சீனியர்கள் ஜூனியர்கள் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து இரண்டு பேர் கட்சியில் இருந்து நீக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பொதுவாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் அடுத்த கட்சிக்குத் தாவ முயல்வார்கள் அல்லது தன்னுடைய கட்சியில் மீண்டும் நுழைவதற்கு ஏதேனும் முயற்சி மேற்கொள்வார்கள். ஆனால், சமீபத்தில் பா.ஜ.க.வில் இருந்து நீக்கப்பட்ட திருச்சி சூர்யாவும், கல்யாணராமனும் வேறு வகையில் பதில் தருகிறார்கள்.
திருச்சி சூர்யா இது குறித்து, ‘’அண்ணன் அண்ணாமலை அவர்களால் ஈர்க்கப்பட்டுதான் நான் தமிழ்நாட்டு பாஜகவில் இணைந்தேன். என் மேல் எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு எனக்கு எந்த வருத்தமும் இல்லை. என் தலைவனை பேசியதற்கு நான் பதில் அளித்தேன், அதற்காக என்மேல் நடவடிக்கை என்றால் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்கிறேன். எந்த நிலையிலும் அண்ணன் குடும்பத்தில் ஒருவனாகவே இருப்பேன். இனியும் தமிழ்நாடு பாஜகவில் பயணிக்கும் எண்ணம் எனக்கு இல்லை. சுயமரியாதை முக்கியம். எதன் பொருட்டும் அதை கைவிட முடியாது. என் மீது அன்பு கொண்டு எனக்கு ஆதரவு கொடுத்த அனைவருக்கும் எனது அன்பான நன்றிகள்’’ என்று தெரிவித்திருக்கிறார்.
பா.ஜ.க.வில் தொடரவேண்டும் என்றா சுயமரியாதை இருக்காது என்று திருச்சி சூர்யா தெரிவித்திருப்பது நேரடியாக அண்ணாமலையை கிண்டல் செய்து தான் என்கிறார்கள்.
அதேபோல் கல்யாணராமன், ‘’பாஜக ஆர்எஸ்எஸ் என்ற தாய் அமைப்பின் அரசியல் உருவாக்கம். பாஜக என்பது வெறும் கட்சியல்ல… அது ஒரு சிந்தனையோட்டம், சித்தாந்தம், பாரத அன்னைக்கான சேவை. இன்று என்னை கட்சியை விட்டு நீக்கியுள்ளதாக தரப்பட்டுள்ள அறிவிக்கை துரதிர்ஷ்டவசமானது. மாநில தலைவர் அண்ணாமலை திமுகவுடன் ரகசிய உறவை உருவாக்கி அதிமுக-பாஜக கூட்டணியை முறித்ததாக சொல்லப்படுவதே எனது அடிப்படை குற்றச்சாட்டு.
அது குறித்து அண்ணாமலையின் தலைமையின் கீழ் செயல்படும் நிர்வாகிகள் முடிவெடுக்க முடியாது என்பது அடிப்படை நீதி. It is against the principles of natural Justice. ஆங்கிலத்தில் “No one can be a judge in his own cause” என்று ஒரு பார்வை உண்டு. இந்த பார்வையை மீறுகிறோம் என்ற அடிப்படை விஷயம் கூட சம்பந்தப்பட்ட நபர்கள் அறியவில்லை என்பது பரிதாபம். இந்த அடிப்படை நீதியை மீறும் செயல் கண்டனத்திற்குரியது. இது குறித்து பாஜக மத்திய தலைமையிடம் எனது கருத்துக்களை பகிர்ந்துள்ளேன். மற்றபடி சமூக-தேசிய நலனிற்காக தொடர்ந்து பணியாற்றுவதே மாகாளி-பராசக்தியின் ஆணை. அது தொடரும்…!!!’’ என்று கூறியிருக்கிறார்.
இப்படி ஆளாளுக்கு எஸ்கேப் ஆனால் எப்படி..?