• Home
  • மனம்
  • தப்புத் தப்பா ஆசை வருதா..?

தப்புத் தப்பா ஆசை வருதா..?

Image

மனசை கட்டிப்போடும் வழிகள்

சினிமா நட்சத்திரங்களைப் பார்த்து ஏங்காதவர்கள் யாருமில்லை. அவர்களின் அழகு, அந்தஸ்து, புகழ் போன்றவை ரசிகர்களுக்கு போதை தருகிறது. கனவு காண வைக்கிறது. அப்படியொரு நட்சத்திரத்தை திருமணம் செய்துகொண்டால் மிகவும் மகிழ்ச்சியாக வாழலாம் என்ற ஆசை வருகிறது. இப்படி ஆசைப்படுவதில் ஆண் ரசிகை, பெண் ரசிகர் என்ற பாகுபாடே கிடையாது. அதேநேரம், அவர்கள் எட்டிப்பிடிக்க முடியாத உயரத்தில் இருக்கிறார்கள் என்ற உண்மையும் ரசிகர்களுக்குத் தெரியும். எனவே, நட்சத்திரம் மீதான ஆசை நிறைவேறாது என்பது ரசிகர்களுக்குத் தெரிந்தே இருக்கும். எனவே ஒரு நடிகர் அல்லது நடிகையை ரொம்பவும் பிடிக்கும் என்று சொல்வதை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை.

நிஜ வாழ்க்கையிலும், திருமணம் முடித்த ஆணுக்கும் பெண்ணுக்கும் மனம் அவ்வப்போது சஞ்சலப்படுவதுண்டு. கணவன், மனைவிக்குள் எவ்விதமான மோதல் அல்லது முரண்பாடு இல்லாத நேரத்திலும் வேறு ஓர் ஆண் அல்லது பெண் மீது ஆர்வம் தோன்றுவது இயற்கைதான். காதலித்து திருமணம் செய்தவர்கள், குழந்தை பெற்றவர்கள், பொறுப்பான பதவிகளில் இருப்பவர்களுக்கும் இதில் விதிவிலக்கு இல்லை.

இத்தனை வயதுக்குப் பிறகு, குழந்தை பெற்றபிறகு இப்படிப்பட்ட கெட்ட எண்ணம் வருவதே தவறு என்று மனதை அடக்க அடக்க… எதிர் பாலினம் மீது ஆர்வம் அதிகமாகுமே தவிர, குறையவே செய்யாது.

அப்படியென்றால் என்னதான் தீர்வு..? தவறு என்று தெரிந்தும் மனதில் தோன்றும் ஆசைகளை எப்படி கட்டிப்போடுவது. உளவியல் மருத்துவர் சொல்லியிருக்கும் புதிய வழியை படித்துப் பாருங்கள்.  

நகரின் பிரபலமான தனியார் கல்லூரி ஒன்றில் நடுத்தர வயது பேராசிரியர் ஒருவர் புதிதாக பணியில் சேர்ந்தார். திருமணம் முடித்து, குழந்தைகளுடன் அந்த நகருக்கு வந்திருக்கிறார். அதற்கு முன்பு அவர் தென் தமிழகத்தில் இருந்த ஒரு சாதாரண கல்லூரியில் பணி புரிந்தவர்.

புதிய கல்லூரியில், அவரது வகுப்பு மாணவிகள் பெரும்பாலோர் மேல்தட்டு வர்க்கத்தினர். எனவே, ஒவ்வொரு மாணவியும் ஸ்டைலாகவும், தனி ஆளுமையுடனும் இருந்தனர். அந்த மாணவிகளின் துடுக்கான பேச்சு, ஸ்டைலான கல்ச்சர், டோன்ட் கேர் பாலிஸி போன்றவை பேராசிரியருக்குப் புதிது. எனவே, ஒவ்வொரு மாணவியும் அவரை ஏதோ ஒரு ரீதியில் அவரது மனதை பாதித்தனர். எனவே, அந்த மாணவிகளிடம் பேசுவதற்கு அதிக ஆர்வம் காட்டினார். ஆனால், அவரது பேச்சு, நடவடிக்கையை மாணவிகள் இயல்பாகவே எடுத்துக்கொண்டனர். சிம்பிளாக பேராசிரியர் தொட்டுப் பேசுவதைக்கூட அவர்கள் கண்டுகொள்ளவில்லை. ஆனால், அந்த தொடுகை பேராசிரியருக்குப் பேரானந்தமாக இருந்தது. நினைத்தாலே இன்பமாக இருந்தது.  

அதேநேரம், அவருக்கு பயமும் வந்தது. எந்த நேரத்திலும் எல்லையை மீறிவிடலாம் என்ற அச்சம் ஏற்பட்டது. எனவே, மாணவிகளை கண்டுகொள்ளாமல் தவிர்க்க நினைத்தாலும், அவரால் அது முடியவில்லை. அவரது கனவில்கூட மாணவிகள் வந்து டூயட் பாடினார்கள்.

நாளுக்கு நாள் இந்த பிரச்னை அதிகமாகவே, உளவியல் மருத்துவரை சந்தித்தார். இரவும் பகலும் மாணவிகளின் நினைப்பு தன் மனதில் வந்து சஞ்சலப்படுத்துவதை சொன்னார்.  ஒரு ஆசிரியர் ஸ்தானத்தில் இருந்துகொண்டு, மாணவிகளை பற்றி  நினைப்பது தவறு என்று தெரிந்தாலும், நினைப்பை தடுக்க முடியவில்லை. அதேநேரம்,  குற்ற உணர்ச்சியுடன் வாழ்வதும் உண்மை என்று சொன்னார்.

பேராசிரியர் சொன்னதை முழுமையாக கேட்டுக்கொண்ட உளவியல் மருத்துவர், ஒரு தீர்வை முன்வைத்தார். அதாவது, அவரது வகுப்பில் படிக்கும் ஒவ்வொரு மாணவியின் பெயரையும், அந்த மாணவி பற்றி என்ன தோன்றுகிறது என்பதையும் ஒரு பேப்பரில் எழுதச்சொன்னார்.  அந்த மாணவியைப் பற்றி நினைக்கும்போது மனதில் என்னவெல்லாம் தோன்றுகிறதோ, அவை எல்லாவற்றையும் எந்த சென்சாரும் இல்லாமல் எழுதச் சொன்னார். அந்த மாணவியுடன் நீங்கள் எப்படி இருக்க ஆசைப்படுகிறீர்கள் என்பதையும் எழுத்தில் பதிவு செய்யுங்கள் என்று சொன்னார்.

பேராசிரியர் திடுக்கிட்டுப் போனார். ‘மாணவிகளை பற்றிய நினைப்பே வரக்கூடாது என்றுதான் உங்களிடம் வந்தேன். ஆனால், நீங்கள் மாணவிகளை பற்றி நினைத்து நினைத்து எழுதச்சொல்கிறீர்களே.. இது எப்படி சரியாக இருக்கும்?” என்று கேட்டார்.

அதற்கு, மனநல ஆலோசகர், ‘கவலைப்படாதீர்கள். நான் சொல்கிறபடி செய்யுங்கள். ஒவ்வொரு மாணவியிடனும் உங்களது கற்பனை எந்த அளவுக்குப் போகிறது என்பதை முதலில் தெரிந்துகொள்ளுங்கள்.  அதன் பின் அதை யதார்த்தத்தோடு பொருத்திப் பார்த்தால் மனம் தெளிவடையும்’ என்றார்.

மனநல ஆலோசகர் அப்படிச் சொன்னதும் ஆசிரியருக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனாலும் மருத்துவர் சொல்வதைக் கேட்க முயன்றார். அப்படி அந்த பேராசிரியர் எழுத தொடங்கினார். எழுத, எழுத பேராசிரியருக்கு பல உண்மைகள் தெரியவந்தன. ஆலோசகரிடம் மனம் திறந்து பேசினார்.

 “நீங்கள் சொன்னீர்கள் என்பதால் என் மனதை அதிகம் சஞ்சலப் படுத்திய பெண்ணைப் பற்றி எழுத ஆரம்பித்தேன். மனதை அதன் போக்கில் போக விட்டேன். அப்போதுதான், நான் நினைப்பது எல்லாம்  வெறும் கற்பனையாக மட்டும்தான் இருக்க முடியுமே தவிர, நிகழ்காலத்தில் எதுவும் நடக்காது என்ற உண்மை எனக்குப் புரிந்தது.

ஒரு வேளை அதிகத் தூண்டுதலில் நான்  எதையாவது செய்வதற்கு முயற்சித்தால், அதற்கான விளைவுகள் எப்படியெல்லாம் இருக்கும் என்பதும் என்  மனதில் தோன்றிவிட்டாது. இப்போது எனக்கு மாணவிகளைப் பற்றிய கற்பனை நின்று போனது. இவை எல்லாமே வீண் சிந்தனை, எதுவுமே உண்மை அல்ல என்பதை புரிந்துகொண்டேன். இனி மாணவிகளைப் பார்த்தாலும், பேசினாலும் தடுமாற்றம் வராது” என்றார் உறுதியுடன்.

உடனே மன நல ஆலோசகர், ‘நீங்கள் ஒரு விஷயத்தை நினைக்கக்கூடாது என்று தடை விதித்தால், அதைத்தான் நினைத்துக்கொண்டே இருப்பீர்கள். எனவே, தடையின்றி நகர்ந்து பார்க்கச் சொன்னேன். உங்களுக்கு உண்மை புரிந்துவிட்டது. அடுத்த தலைமுறைப் பெண்களின் சிந்தனை, செயல்பாடுகளை வேடிக்கை பார்க்க மட்டும் கற்றுக்கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கை வேறு, அவர்கள் வாழ்க்கை வேறு…” என்றார்.

இதைத்தான் ஜே. கிருஷ்ணமூர்த்தி, “மனம் சஞ்சலப்பட்டால் தடுக்காதீர்கள். அதன் போக்கில் போக விடுங்கள். அதன் வீச்சைக் கண்டறியுங்கள். தடுமாற்றங்கள் முழுதுமாகப் புரிந்து கொள்ளப்பட்டால் அது மறைந்துவிடும்” என்று கூறினார்.

சிறு வயதிலிருந்து பெற்றோர், ஆசிரியர்கள் நமக்கு பல்வேறு அறிவுரைகள், வழிகாட்டுதல்களை வழங்குகிறார்கள். சடங்குகள், சம்பிரதாயங்கள், மரபுகளுடன் சேர்ந்து வளர்கிறோம். எனவே நம்மை அறியாமலே நம் வாழ்க்கைப் பதிவுகள்  நமது மனதிலேயே தங்கியிருக்கும். நம்மை அறியாமலே அந்த உணர்வுகளைத்தான் வெளிப்படுத்தி வருகிறோம்.

மூக்குக் கண்ணாடி போட்டிருப்பவருக்கு, ஒரு கட்டத்தில் கண்ணாடி வழி பார்க்கிறோம் என்ற உணர்வே மறந்துவிடும். அப்படித்தான் நம் மனதில் இருக்கும் பதிவுகள் வழியாகத்தான், நல்லது, கெட்டது, நியாயம், அநியாயம் என்பதை நாம் பிரித்துப் பார்க்கிறோம். எனவே, இதுதான் சரி என்று நிச்சயமாக எதுவும் கிடையாது.

ஒருவருக்கு அநியாயமாகத் தெரிவது, ஒருவரது நியாயமாகத் தெரியும். அதனால், மனம் தடுமாறினால், அதன் போக்கில் முழுமையாக செல்ல விடுங்கள். அப்போதுதான், அடுத்து நீங்கள் செய்ய வேண்டியது எதுவென தெளிவாக அறிந்துகொள்ள முடியும்.

Leave a Comment