• Home
  • பணம்
  • நீங்க லக்கி பாஸ்கர் ஆகணுமா..?

நீங்க லக்கி பாஸ்கர் ஆகணுமா..?

Image

பணம் கொட்டும்மந்திரம்

மிகுந்த கவலையுடன் ஞானகுருவை சந்திக்க வந்தார் மகேந்திரன். அவரே பேசுவார் என்று காத்திருந்தார் ஞானகுரு. அதேபோல் பேச்சைத் தொடங்கினார்.

‘’சம்பளம் வாங்கி 10 நாள் கூட ஆகலை, அதுக்குள்ள எல்லாமே காலி. பணத்துக்கு என் மீது என்ன கோபம்னு தெரியலை, இப்படி கையில் நிக்காம ஓடிப் போயிடுது’ என்று வருந்தினார்.

‘’பணம் உன்னிடம் தங்கும் அளவுக்கு நடந்துகொள்..’’

‘’நானா பணத்தை விரட்டுறேன். பணத்துக்குத் தான் என்னைப் பிடிக்க மாட்டேங்குது… கையில் வந்ததும் காணாமல் போய்விடுகிறது’’

‘’பணத்துக்கு உன்னைப் பிடிக்க வேண்டுமென்றால், பணத்துக்கு எதுவெல்லாம் பிடிக்கும், பிடிக்காது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்..?’’

‘’பணத்துக்கு பணம் வைச்சிருக்கிறவங்களைத் தான் பிடிக்குது. மத்தவங்களைப் பணம் விரும்புவதே இல்லை…’’

‘’தன்னை யார் மதிக்கிறார்களோ அவர்களையே பணம் விரும்புகிறது. தன்னை யார் புரிந்துகொள்கிறார்களோ அவர்களிடமே தஞ்சம் அடைகிறது. அதேநேரம், பணம் பற்றி தெரியாதவர்களை அது விரும்புவதே இல்லை. குறிப்பாகத் தன் பொருளாதாரத் தகுதிக்கு மீறி ஆசைப்படும் நபர்களைப் பணத்துக்குப் பிடிக்காது. தேவை இருக்கிறதோ இல்லையோ… கண்டதையும் வாங்குவதற்கு ஆசைப்படும் மனிதர்களை பணத்துக்குப் பிடிக்காது. கடன் வாங்கி ஆடம்பரச்செலவு செய்பவர்களை பணத்துக்குக் கொஞ்சமும் பிடிக்காது.

செலவு செய்வதில் தன்னை கட்டுப்படுத்திக் கொள்ளும் வலிமை இல்லாதவர்களை பணத்துக்குப் பிடிக்காது. அதேபோல் அடுத்தவர் போன்று வாழ்வதற்கு ஆசைப்படும் நபர்களை பணத்துக்குப் பிடிக்கவே பிடிக்காது. எந்த ஒன்று வாங்குவதாக இருந்தாலும் ஒன்றுக்குப் பல முறை யோசிக்காமல் வாங்குபவர்களையும் பணம் எதிரியாகவே பார்க்கும்.

பேராசைக்காரர்களை பணத்துக்குக் கொஞ்சமும் பிடிக்காது. அதனால் தான் அதிக வட்டி, தவறான முதலீடு என்று பேராசையில் விழும் அத்தனை நபர்களும் ஏமாந்து போகிறார்கள்.

என்னென்ன செலவு செய்திருக்கிறோம் என்ற கணக்கு பார்க்காத நபர்களை பணத்துக்குப் பிடிக்காது. பிள்ளை அடம் பிடிக்கிறது, ஆசைப்படுகிறது என்றெல்லாம் செலவு செய்பவர்களை பணத்துக்குப் பிடிக்காது. பிறரிடம் பெருமை காட்டுவதற்காக அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளியில் படிக்க வைப்பது, பிறர் பார்த்து பாராட்ட வேண்டும் என்பதற்காக பார்ட்டி, விழா நடத்துபவர்கள் எல்லாம் பணத்துக்கு எதிரிகள்…’’

‘’ஆனால், நிறைய பணக்காரர்கள்தானே இப்படி பார்ட்டி வைக்கிறார்கள்.. அவர்களிடம் அதிக பணம் சேர்கிறதே?’’

‘’அவர்கள் முதலீடு மூலம் கிடைக்கும் லாபத்தைக் கொண்டாடித் தீர்க்கிறார்கள். தேவைக்கும் அதிகமாக இருக்கும் பணத்தில் பார்ட்டி வைத்து கணக்கு எழுதிக் கொள்கிறார்கள். அதை பார்க்கும் நடுத்தர வர்க்கத்தினர் பெருமைக்காக கடன் வாங்கி பிரமாண்ட கல்யாணம் நடத்துகிறார்கள். இரண்டுக்கும் உள்ள மிகப்பெரிய வித்தியாசத்தைப் புரிந்துகொள்ளாதவர்களை பணத்துக்குப் பிடிக்கவே செய்யாது……’’

‘’ஆனால், நான் சிக்கனமாகத்தான் இருக்கிறேன்…’’

‘’சிக்கனம் என்பதை வாயால் சொல்வது முக்கியமல்ல. செயலில் காட்ட வேண்டும். ஏனென்றால் எல்லா செலவுகளுமே அவசியம் என்ற எண்ணமே நிறைய பேருக்கு உள்ளது. புதிய ஆடை எடுப்பது பண்டிகைக்கு அவசியமாக இருக்கலாம். அதற்கு பிராண்டட் ஐட்டங்களைத் தேடிச் செல்வது பர்ஸைக் காலியாக்கிவிடும். நீ என்ன பிராண்ட் ஆடை போட்டிருக்கிறாய் என்பது அடுத்தவருக்கு அநாவசியம். அதேபோல் தன்னிடம் இருக்கும் பணத்தை எப்படி பெருக்குவது என்ற யோசனையும், அறிவும் இல்லாத நபர்களை பணத்துக்குப் பிடிக்காது..’

‘’பணம் இருந்தால் தானே அதனை பெருக்க முடியும்..? என்னிடம் பணமே இல்லை, என்ன செய்வது..?’’

‘’முதலில் பணத்தை கையில் வைத்து செலவழிக்கத் தொடங்கு. பணத்தை எண்ணிக் கொடுக்கும் நேரத்தில் தான் அந்த செலவு தேவையா, தேவையில்லையா என்பது தெரியவரும். விலை பேரம் பேசுவதற்குத் தோன்றும். கார்டு மூலம் செலவழிக்கும் நபர்களுக்கு பேரம் பேசத் தோன்றாது. விலை கூடுதலா குறைவா என்று பார்க்கத் தோன்றாது. ஏழைகளுக்கும் நடுத்தரவர்க்கத்தினருக்கும் கார்டு என்பதே அநாவசியம். எனவே, சம்பளத்தை பணமாக மாற்றிவிடு..’’

‘’எப்படியென்றாலும் ஒன்று தானே…’’

’கார்டில் பணம் செலவழிப்பதற்கும் பணமாக கையில் இருந்து செலவழிப்பதற்கும் வித்தியாசம் இருப்பதை உணரத் தொடங்குவதே பணத்தை விரும்புவதற்கான முதல் படி. பணம் போதவில்லை என்று புலம்புவதால் எதுவும் மாறப் போவதில்லை. பணம் என்பதும் உழைப்பு என்பதும் ஒன்று தான். உன் உழைப்பு தான் பணமாக மாறுகிறது. பணம் இல்லையென்றால் கூடுதலாக உழைக்க வேண்டும் என்று அர்த்தம். உழைப்பு என்பதால் உடலால் மட்டுமல்ல, மூளையாலும் செய்ய முடியும்.  உன் உழைப்பைக் கொண்டு கூடுதல் பணம் சம்பாதித்து அதனை சேமித்து மூலதனமாக மாற்றுவதற்கு முயற்சி செய். அப்போதுதான் பணத்துக்கு உன்னைப் பிடிக்கும்…’’ என்றார் ஞானகுரு.

யோசனையில் ஆழ்ந்தார் மகேந்திரன்.

Leave a Comment