• Home
  • ஞானகுரு
  • இரண்டாவது குழந்தை கண்டிப்பா பெத்துக்கணுமா..?

இரண்டாவது குழந்தை கண்டிப்பா பெத்துக்கணுமா..?

Image

எத்தனை வருட இடைவெளி நல்லது

மரத்தடியில் அசந்து தூங்கிக்கொண்டிருந்த ஞானகுருவின் அருகில் அமர்ந்தார் மகேந்திரன். கண்களைத் திறக்காமலே, ‘’மகேந்திரா… உங்கள் மனதை அரித்துக்கொண்டிருக்கும் சந்தேகத்தைக் கேட்டுவிடுங்கள்’’ என்றார் கண்களைத் திறக்காமலே.

’’மகனுக்கு கல்யாணமாகி ரெண்டு வயசுல ஒரு பிள்ளை இருக்குது. அடுத்த பிள்ளை இப்பவே பெத்துக்கிட்டா ஈசியா வளர்த்திடலாம்… நாங்க ஆரோக்கியமா இருக்கும்போதே உதவி செய்வோம்னு சொல்றேன். அவன் ஏழெட்டு வருஷம் போகட்டும்னு அசால்ட்டா சொல்றான். அத்தனை வருஷ இடைவெளியில பிள்ளை பெத்துக்கிறது சரியா இருக்குமா..? ரெண்டாவது பிள்ளை பெத்துக்காம சாக்குப்போக்கு சொல்லி தள்ளிப் போடுறானான்னு எனக்குப் புரியலை’’ என்றார் மகேந்திரன்.

’’நீங்கள் கேட்டது ஒரு தவறான கேள்வி. இரண்டாவது பிள்ளை வேண்டுமா இல்லையா என்பது உங்கள் மகனும் அவரது மனைவியும் சேர்ந்து முடிவு எடுக்க வேண்டிய முடிவு. அதில் நீங்கள் தலையிடுவதற்கு எந்த அவசியமும் இல்லை, தேவையும் இல்லை’’ என்றார் ஞானகுரு.

‘’ஆனா… ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரெண்டு பிள்ளை கண்டிப்பா வேண்டும்தானே… அப்பத்தானே ஒரு குடும்பம் முழுமை அடையும்?”

‘’திட்டமிடாமல் பிறந்தவர்களே இரண்டாவது குழந்தையாக பெரும்பாலான வீடுகளில் இருக்கிறார்கள் என்பதே உண்மை. முதல் குழந்தைக்கு மட்டுமே ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள், திட்டமிடுகிறார்கள். இரண்டாவது குழந்தை என்ற முடிவு பெண்ணின் உடல் நலம், குடும்ப பொருளாதார நிலை, எதிர்காலத் திட்டங்கள், வாழ்க்கைச் சூழல் போன்ற பலவற்றையும் யோசித்தே முடிவு எடுக்க வேண்டும்.

முன்பு கடவுள் கொடுக்கிறான் என்று பிள்ளைகளை வதவதவென பெற்றுக்கொண்டே இருந்தார்கள். கருப்பை வாசலை அடைப்பதற்கு வழி கண்டுபிடிக்கப்பட்ட பிறகு இந்த எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து இப்போது ஒரு பிள்ளை போதும் என்ற அளவுக்கு வந்திருக்கிறது. ஒரு பிள்ளை, இரண்டு பிள்ளை என்பது ஒவ்வொரு நபரின் வாழ்க்கைக்கும் ஏற்ப மாறக்கூடியது. ஒரு குழந்தை என்றால் நல்லது இரண்டு குழந்தை என்றால் மிகவும் நல்லது’’ என்றார் ஞானகுரு.

‘’நீங்கள் சொல்வது சரி என்றே வைத்துக்கொள்வோம். இரண்டாவது பிள்ளை பெறுவது என்ற முடிவு எடுத்தவர்கள் உடனடியாக அடுத்த பிள்ளை பெற்றுக்கொள்வதுதானே வளர்ப்பதற்கு எளிதாக இருக்கும்…’’

‘’முதல் பிரசவத்திற்குப் பிறகு தாய் இழந்த இரும்புச் சத்து, கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்களை மீண்டும் பெறுவதற்கு மூன்று வருடங்கள் ஆகிறது. எனவே, குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் இடைவெளி நல்லது.. அதோடு முதல் குழந்தையை கவனித்து வளர்ப்பதற்கும், கல்விக்கு ஆதரவு கொடுப்பதற்கும் சில ஆண்டுகள் தேவை. அதனால் முதல் குழந்தைக்குத் தாயின் நேரடி பராமரிப்புக்குத் தேவைகள் குறைந்த பிறகு அடுத்த குழந்தைக்குத் திட்டமிடுவது நல்லது’’

‘’அப்படியென்றால் ஏழெட்டு வருடங்களுக்குப் பிறகு இரண்டாவது பிள்ளை பெற்றுக்கொண்டால் போதும் என்கிறீர்களா..?’’

‘’முதல் பிரசவத்தின் தன்மை, குழந்தை வளர்ப்பு அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் அடுத்த குழந்தைக்குத் தாயும், தந்தையும் யோசித்துத் திட்டமிட வேண்டும். இரண்டாவது குழந்தைக்கு 7 வயது ஆகிவிட்டால் போதிய பராமரிப்பு கொடுத்த திருப்தி நிச்சயம் இருக்கும். அதோடு, அடுத்த பிள்ளையை வரவேற்பதற்கு மூத்த பிள்ளையையும் பெற்றோர் தயாராக்க முடியும். இந்த வகையில் இரண்டாவது குழந்தையை வளர்க்க அம்மா, அப்பா, மூத்த பிள்ளை என்று மூன்று பேர் இருப்பார்கள். மூத்த பிள்ளைக்கு அடுத்த பிள்ளையின் மீது அன்பு, பொறுப்பு, அக்கறை போன்றவை ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உண்டு. மேலும், அதிக இடைவெளி காரணமாக பொருளாதார பிரச்னைகளும் குறைகின்றன. அதாவது பிள்ளைகள் இரண்டு பேருக்கும் ஒரே நேரத்தில் கல்லூரிக் கட்டணம், திருமணம் போன்ற பெரிய செலவுகள் செய்யவேண்டிய அவசியம் ஏற்படுவதில்லை.

இப்படி தாமதமாக குழந்தை பெறுவதில் சில பிரச்னைகளும் உண்டு. ஏழெட்டு வருடங்களுக்குப் பிறகு, ஆசைப்பட்ட வகையில் உடனடியாக குழந்தை பெற்றுக்கொள்வதற்கு உடல்நிலை ஒப்புக்கொள்ளாது. கர்ப்பம் தரிப்பதற்குத் தாமதம் ஆகலாம். மேலும், தாய் அல்லது தந்தைக்கு 35 வயதுக்கு மேல் நீரிழிவு, ரத்தக்கொதிப்பு போன்ற நோய்கள் தோன்றிவிடுவதால், பிள்ளைக்கும் அந்த பாதிப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு அதிகமாகிறது. சாப்பிடாமல், தூங்காமல் பிள்ளை வளர்ப்பதற்கு இந்த வயதில் பொறுமை இருப்பதில்லை. எனவே, இத்தனை பிரச்னைகளையும் அலசிப்பார்த்து, இனி பிள்ளை வேண்டாம் என்ற முடிவுக்கு வரும் வாய்ப்பு அதிகம். தாமதமாக குழந்தை பெறுவதில் தம்பதிக்கு மட்டும் இல்லாமல் மூத்த பிள்ளைக்கும் பிரச்னை உண்டாகலாம். இரண்டாவது பிள்ளையை எல்லா நேரமும் தூக்கிவைத்து மிகுந்த அக்கறையுடன் கவனிப்பதைக் காணும் மூத்த பிள்ளைக்கு பொறாமை, வெறுப்பு தோன்றலாம்…’’

‘’சின்னப் பிள்ளைக்கும் பொறாமை வருமா..?’’

‘’நிச்சயம் வரும். தன்னை மட்டுமே கொஞ்சிக்கொண்டிருந்த தாயும், தந்தையும் சின்ன பிள்ளையுடன் அதிக நேரம் செலவிடுவதைக் காண்கையில் மூத்த பிள்ளைக்கு வருத்தம் வரும், தனியே இருப்பதாக உணரும். ஆகவே, இந்த காலகட்டத்திற்கு முதல் பிள்ளையை உணர்வுபூர்வமாக முன்கூட்டியே தயார் படுத்த வேண்டும். அதாவது, உனக்குத் துணையாக ஒரு பாப்பா வரப்போகிறது, நீயே பிள்ளையை நன்றாகப் பார்த்துக்கொள்ள வேண்டும், விளையாட்டு காட்ட வேண்டும். நீ தான் பொறுப்பாக அம்மாவுக்கு உதவி செய்ய வேண்டும் என்று மூத்த பிள்ளையை தயார் செய்ய வேண்டும்.

சின்னப் பிள்ளையைக் கொஞ்சும் நேரத்தில் பெரிய பிள்ளையையும் கொஞ்ச வேண்டும். இரண்டு பிள்ளைகளுக்கும் வயது வித்தியாசம் இருப்பதால் இருவருக்கும் சண்டை வருவதற்கு வாய்ப்பு குறைவு… விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை மூத்த பிள்ளைக்கு வந்துவிடும்’’ என்றார் ஞானகுரு.

‘’முடிவா என்ன சொல்ல வர்றீங்க..?’’

‘’தம்பதிகள் மட்டுமே முடிவு செய்ய வேண்டும், நீங்களும் நானும் அல்ல…’’ என்றார் ஞானகுரு.

Leave a Comment