• Home
  • பணம்
  • வீட்டுக்கும் காப்பீடு தேவையா..?

வீட்டுக்கும் காப்பீடு தேவையா..?

Image

முன்னெச்சரிக்கை நலம் தரும்



மனிதனின் அத்தியாவசியத் தேவைகளில் ஒன்று, இருப்பிடம். அதனால் தனக்கான வீட்டை  பார்த்துப்பார்த்து ரசித்து கட்டுபவர்கள் பலர். சிலர், கையில் இருக்கும் பணத்துக்குத் தகுந்தபடி கட்டுவார்கள். ஆனால், பெரும்பாலோர் வங்கியிலிருந்தே கடன் வாங்கியே கட்டுகிறார்கள். அப்படி கட்டும் வீட்டுக்கும் காப்பீடு அவசியம் என்பதை பலர் அறிவதே இல்லை.

இதுகுறித்து பேசும் இன்சூரன்ஸ் பாலிசிதாரர்கள்,  ‘நம்மில்  பலரும் வங்கியில் கடன் வாங்கியே சொந்தமாய் வீடு கட்டுறோம். அப்படி, கடன் வாங்கி வீடு கட்டிக்கொண்டிருக்கும்போது எதிர்பாராதவிதமாக  ஏதேனும் அசம்பாவிதம் நேர்ந்தால், வாங்கிய கடனை அடைப்பது சிரமம். அப்படியான சமயத்தில் நம்மைக் காப்பதுதான் இந்த காப்பீடு. ஆகையால் வீட்டுக்கும், வாங்கிய கடனுக்கும் காப்பீடு எடுத்துக்கொள்வது நல்லது. அதுவும் இந்தக் காலத்தில் வீட்டுக்கான காப்பீடு மிகவும் அவசியம் தேவை.  

கடன் வாங்கியவருக்கு அசம்பாவிதம் ஏற்பட்டால் மட்டுமே காப்பீட்டுப் பணம் கிடைக்கும் என்று நினைத்துவிடக் கூடாது. புயல், மழை, வெள்ளம், நிலநடுக்கம், தீ விபத்து, தீவிரவாதத் தாக்குதல் போன்ற பிரச்னைகளில் வீடு பாதிக்கப்பட்டாலும், வீட்டுக்குக் காப்பீடு எடுத்திருந்தால், அதற்குரிய காப்பீட்டுப் பணம் நிச்சயம் கிடைக்கும்.
வீட்டுக்கான காப்பீட்டுத் தொகையும் குறைவுதான். இது தவிர, நம் சூழ்நிலைக்குத் தகுந்தமாதிரி பிரீமியம்  செலுத்தும் வசதி உள்ளது. ஒரே சமயத்தில் மொத்தமாகக் காப்பீடு எடுத்துக்கொள்ளவும் செய்யலாம். அப்படி மொத்தமாகக் காப்பீடு செலுத்தும்போது இடையில் பிரிமீயம் செலுத்தத் தேவையில்லை. ஒட்டுமொத்தமாக பிரீமியம் செலுத்தும்போது தள்ளுபடியும் கிடைக்கும். அது மட்டுமல்ல, சம்பளதாரர்கள் கட்டும் காப்பீடு பிரீமியத்துக்கு வரிச் சலுகை பெற்றுக்கொள்ளவும் முடியும்.

அதேநேரத்தில், தொடர்ந்து வீட்டுக்கான காப்பீடு பிரீமியம் செலுத்திவரும் நிலையில், வீடு வாங்கியவருக்கு அசம்பாவிதமோ அல்லது வீட்டுக்குப் பாதிப்போ ஏற்படவில்லை, இதனால் நமக்கு காப்பீடு பணம் திரும்பக் கிடைக்குமா என்ற எண்ணம் வரலாம். ஆனால், அதற்கும் இப்போது தீர்வு காணப்பட்டிருக்கிறது. காப்பீடு பணத்தைத் திரும்பப் பெறும் வசதி, திரும்பப் பெற முடியாத வசதி என இரு பிரிவுகளில் இப்போது வீட்டுக்கான காப்பீடுகள் வழங்கப்படுகின்றன. காப்பீடு பணத்தைத் திரும்பப் பெறும் வசதியைத் தேர்வு செய்தால் போதும். வீட்டை வாங்கியவருக்கு அசம்பாவிதமும், வீட்டுக்குப் பாதிப்பும் ஏற்படவில்லையென்றால், காப்பீடு எடுத்த காலத்துக்குப் பிறகு கட்டிய பிரீமியத் தொகையைத் திரும்பப் பெற்றுவிடலாம். அதற்கு வட்டி, போனஸ் தொகையையும் காப்பீட்டு நிறுவனங்கள் கொடுக்கின்றன.
இதில் உள்ள ஒரு பிரச்னை என்னவென்றால், இந்த வசதியில் செலுத்தப்படும் பிரீமியம் தொகை கொஞ்சம் அதிகம். இதற்காக மாதந்தோறும் கணிசமான பணத்தை ஒதுக்க வேண்டியிருக்கும்.

இப்போதெல்லாம் பெரும்பாலான வங்கிகள் மற்றும் வீட்டு வசதி நிறுவனங்கள், கடன் கொடுக்கும்போது வீட்டுக்கும் கடனுக்கும் சேர்த்துக் காப்பீடு எடுத்துவிடுகிறார்கள். சில வங்கிகள், நிறுவனங்கள் அந்தத் தொகையைக் கடனோடு சேர்த்துவிடுவதும் உண்டு. இன்னும் சில வங்கிகள் அதற்கான பிரீமியத்தைத் தனியாக வசூலிக்கவும் செய்கின்றன. ஆகையால், காப்பீடு எடுக்கும்போது அதைப் பற்றி ஒரு முறை தீர விசாரித்துக்கொள்வது நல்லது. எது எப்படி இருந்தாலும், வீட்டுக்கும், வாங்கிய கடனுக்கும் காப்பீடு மிகவும் அவசியம். அதை முறையாக எடுத்துக்கொண்டால் சொந்த வீட்டுக்குப் பங்கம் வந்தாலும் பயமில்லாமல் இருக்கலாம்’ என்கின்றனர்.
காப்பீடு அனைத்துக்கும் நல்லதுதான்.

Leave a Comment