சாதனை என்பது எதுவுமில்லை. இந்த பூமியில் வாழ்வதற்கு ஒவ்வொரு உயிரும் ஒவ்வொரு வகையில் போராடுகிறது. இந்த போராட்டத்தை வெற்றிகரமாகக் கையாள்வதும் ஒரு சாதனை.
அந்த வகையில் 2024ம் ஆண்டின் மகத்தான சாதனையாளர், நீங்கள் தான்.
ஆம், இன்றைய கடுமையான சூழலில் உயிர் வாழ்வதே சாதனை. ஒவ்வொரு நொடியிலும் இந்த உலகின் ஏதேனும் ஒரு மூலையில் இரண்டு பேர் மரணம் அடைகிறார்கள். ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 1.50 லட்சம் மக்கள் ஏதேனும் காரணங்களால் மரணிக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழலில் உயிர் வாழ்தலை விட பெரிய சாதனை என்று எதையும் கருத வேண்டியதில்லை.
சாதனை, வெற்றி போன்ற எல்லாமே மற்ற மனிதர்களுடன் ஒப்பிடுவதற்கான செயல். ஒரு தீவில் தனி மனிதராக மாட்டிக்கொள்பவர் உயிர் வாழத் துடிப்பாரே தவிர, சாதனை புரிய விரும்ப மாட்டார். இதன் அர்த்தம் யாருமே சாதனைக்கு ஆசைப்படக்கூடாது என்பதல்ல.
பிறர் பாராட்ட வேண்டும் அல்லது வரலாற்றில் இடம் பிடிக்க வேண்டும் என்றெல்லாம் சிந்திக்காமல், உங்களுக்கே சாதனை புரிவது மகிழ்ச்சி தருகிறது என்றால் மட்டும் இறங்கலாம். மற்றவர்கள் மகிழ்ச்சியாக வாழ்க்கையைக் கழிப்பதற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பதே போதும்.
நிறைய பேர் பரபரப்பாக வாழ்கிறார்களே தவிர மகிழ்ச்சியாக வாழ்வதில்லை. வாழ்வதற்கு இன்னும் நிறைய காலம் இருக்கிறது என்ற சிந்தனையே, மகிழ்ச்சியாக வாழ்வதற்குத் தடையாக இருக்கிறது. படிக்க வேண்டிய காலம், உழைக்க வேண்டிய காலம், பணம் சேமிக்கும் காலம், பிள்ளைகளை செட்டில் செய்யும் காலம் என்று ஏதேனும் காரணம் சொல்லி சின்னச்சின்ன சந்தோஷங்களைத் தள்ளிப் போடுகிறார்கள்.
கொரோனா உலகை ஆட்டுவித்தது போன்று ஏதோ ஒரு காரணத்தால் இந்த வருடம் உலகம் அழியப்போகிறது என்றால் மனிதர்கள் என்ன செய்வார்கள்..?
முதலில் பயப்படுவார்கள். அதன் பிறகு வாழும் வரை மகிழ்ச்சியுடன் வாழவேண்டும் என்ற முடிவுக்கு வருவார்கள். வீடு கட்டுவது, தொழில் தொடங்குவது, சாதனை புரிவது போன்றவைளை கைவிடுவார்கள். குடும்பத்தினருடன் இணைந்து வாழ்வதுடன் சின்னச்சின்ன சந்தோஷங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். இதுவே, ‘இந்த கணத்தில் வாழுங்கள்’ என்ற புத்தரின் தத்துவம். இந்த ஆண்டு உலகம் அழியப்போகிறது என்ற எண்ணத்துடன் இந்த தத்துவத்தை கடைப்பிடித்து வாழத் தொடங்குங்கள்.
2025ல் உலகம் அழியவில்லை என்றால்..?
மனித குலம் ஒட்டுமொத்தமாக அழிந்தாலும் இந்த உலகம் அழியாது. இந்த உலகம் வெடித்துச் சிதறினாலும் வேறு ஒரு உலகமாக சுற்றிக்கொண்டுதான் இருக்கும். எனவே, அதைப் பற்றிய கவலை மனிதருக்குத் தேவையில்லை. மனிதருக்கு இருப்பது ஒரே ஒரு வாழ்வு. அதை கொண்டாடுங்கள்.
உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுங்கள். உடல் மட்டுமே வாழ்நாள் முழுமையாக உங்களுடன் துணையாக வரக்கூடியது. என்ன காரணத்துக்காகவும் ஆரோக்கியத்தை விட்டுக்கொடுக்காதீர்கள்.
முடிந்து போனவை மற்றும் மாற்ற முடியாதவற்றை எண்ணி கவலைப்படாத அளவுக்கு மனதை எளிமையாக்குங்கள். போதிய பணமும், ஆறுதலாக மனிதர்களும் தேவை என்பதை புரிந்துகொள்ளுங்கள். அவ்வளவு தான் வாழ்க்கை.
கடினமான சூழலும் கடந்து போய்விடும் என்று நம்பிக்கையுடன் புன்னகையுங்கள். அதுவே, மகிழ்ச்சி.
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
எஸ்.கே.முருகன்