மெடிக்கல் மிரக்கிள்
பெரும்பாலான ஹார்ட் அட்டாக் திங்கள் கிழமை ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதோடு டிசம்பர் மாதம் கடைசி வாரத்தில் நிறைய பேர் இதய நோய் அறிகுறிகளுடன் மருத்துவமனைக்கு வருவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
வெளிநாடுகளில் கிறிஸ்துமஸ் விழாவுக்காக டிசம்பர் மாதம் நீண்ட நாட்கள் லீவு விடப்படுகிறது. விடுமுறை தினத்தில் அதிகமாக சாப்பிட்டு, அதிகமாகக் குடித்து, அதிகமாக ஊர் சுற்றுகிறார்கள். இந்த நேரத்தில் கண்ட இடத்திலும் சுகாதாரக் குறைவான உணவுகளை உண்ணுவது ஜீரணக் குழப்பத்தையும் ரத்த அழுத்தத்தையும் அதிகப்படுத்தி இதய நோய் அறிகுறிகளை வெளிக்காட்டுகிறது.
எனவே 45 வயதுக்கு மேற்பட்ட ஆண், 55 வயதுக்கு மேற்பட்ட பெண், இதயநோய் பாரம்பரியம் உள்ளவர்கள், ரத்த அழுத்தம், கட்டுப்பாடு இல்லாத நீரிழிவு, கொழுப்பு சிக்கல் இருப்பவர்கள் இந்த காலகட்டத்தில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். வியர்வை, வாந்தி, கைவலி, தோள்பட்டை வலி, மயக்கம் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு விரைய வேண்டும். ஒவ்வொரு நபருக்கும் ஹார்ட் அட்டாக் அறிகுறிகள் வெவ்வேறு வகையில் இருக்கும் என்பதால் எந்த அறிகுறியையும் அசட்டையாக எடுத்துக்கொள்ளக் கூடாது. மருத்துவமனைக்குச் செல்ல தாமதம் ஆகும் பட்சத்தில் உடனடியாக ஆஸ்பிரின் மாத்திரை போட்டுக்கொண்டு மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்.