யூராலஜி மருத்துவர் மெய்யப்பன் எச்சரிக்கை
மனித உடல் ஆரோக்கியமாகத் திகழ்வதில் சிறுநீரகங்களில் பங்களிப்பு மிகவும் முக்கியம். அந்த வகையில், சிறுநீரகங்களில் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் சிகிச்சைகள் குறித்து சென்னை வடபழனி சூர்யா மருத்துவமனை யூராலஜி நிபுணரான மருத்துவர் மெய்யப்பன் அவர்களிடம் பேசினோம்.

யூராலஜி (சிறுநீரகவியல்) என்றால் என்ன? யூராலஜிக்கும் நெப்ராலஜிக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
சிறுநீரகவியல் என்பது ஆண் மற்றும் பெண்களின் சிறுநீரகங்கள், சிறுநீர்க் குழாய்கள் மற்றும் ஆண்களின் இனப்பெருக்க மண்டலம் போன்றவற்றில் ஏற்படும் குறைகளை தகுந்த சிகிச்சை முறையில் குணமாக்குவது தொடர்பாக ஆராய்ந்து படிக்கும் மருத்துவத் துறையாகும். இத்துறை நிபுணர்கள், யூராலஜிஸ்ட் என அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் சிறுநீரகம் தொடர்பான நோய்களைக் கண்டறிந்து, அதற்கு சிகிச்சை அளித்து குணமாக்கும் பயிற்சி பெற்றிருப்பார்கள். சிறுநீரகவியலில், சிறுநீரகம் , சிறுநீர்க் குழாய், சிறுநீர்ப்பை, சிறுநீர்வடிகுழாய் மற்றும் ஆண் இனப்பெருக்க உறுப்புகள் (பிராஸ்டேட் சுரப்பிகள், ஆணுறுப்பு, விரைப்பை) ஆகியவற்றை முழுமையாகக் கற்கலாம்.
சிறுநீரக சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கு மருந்து, மாத்திரைகள் மூலம் சிகிச்சை அளிப்பது நெப்ராலஜி ஆகும். இதே வியாதிகளுக்கு, அதாவது ஒருவருக்கு சிறுநீரகத்தில் கல் பெரிதாகவோ அல்லது நோய் முற்றியோ இருக்கும்பட்சத்தில் அறுவைச்சிகிச்சை மூலம் சிகிச்சை அளிப்பது யூராலஜி ஆகும். அதைச் செய்பவர்கள்தான் யூராலஜிஸ்ட்.
சிறுநீரகங்களில் எதுமாதிரியான பிரச்சினைகள் உருவாகலாம்? சிகிச்சையளிப்பது எப்படி?
ஆண்குறியில் முன் தோல் மூடிக்கொள்ளலாம். ஆண்குறியில் அடைப்பு ஏற்படலாம். வயதானவர்களுக்கு பிராஸ்டேட் வரலாம். இது, எல்லா ஆண்களுக்கும் வரக்கூடியது. இதனால் சிறுநீர் கழிப்பதில் சிரமம் இருக்கும். இரவில் அடிக்கடி எழுந்துசெல்ல நேரிடும். சிறுநீர் விரைவாக வெளியேறும் அல்லது மெல்லிதாகக்கூட வரலாம். அதுபோல் கிட்னியில், கிட்னியிலிருந்து வரும் குழாயில், சிறுநீர்ப்பையில், சிறுநீர்ப் பாதையில் என எங்கு வேண்டுமானாலும் கல் உருவாகலாம். இதுபோன்ற கல் பிரச்சினை உள்ளவர்களுக்கு முன்பு ஓப்பன் சர்ஜரி செய்தார்கள். அதனால் அவர்கள் மருத்துவமனையில் 10 முதல் 15 நாட்கள் தங்க வேண்டியது இருந்தது. தவிர, வீட்டுக்குச் சென்றபிறகும் ஓய்வெடுக்க வேண்டும். அவர்களுடைய வேலையைத் தொடர்வதிலும் சிக்கல். ஆனால், தற்போது அப்படியில்லை.
என்டோஸ்கோபி முறையில் இன்று அறுவைச்சிகிச்சை செய்யப்படுகிறது. இதன்மூலம் நோயாளி சிறப்பான பயனைப் பெறுவதுடன், அவருடைய வேலைகளையும் உடனே செய்ய முடியும். இன்று, லேசர் மூலம் செய்யப்படும் அறுவைச்சிகிச்சையால் எத்தகைய ரிஸ்க்கான நோயாளிகளுக்கும் (வயதானவர்கள், இருதயக் கோளாறு, சர்க்கரை, பிபி உள்ளவர்கள்) சிசிச்சையளிக்க முடியும். இதன்மூலம் நல்ல தீர்வு காண முடியும்.
சிறுநீரக சம்பந்தப்பட்ட நோய்கள், எத்தகைய வயதுடையவர்களுக்கு அதிகம் வரும்? சிறுநீரக பிரச்சினை வருவதற்கு என்ன காரணம்?
கல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் எத்தகைய வயதில் வேண்டுமானாலும் (சிறு, நடுத்தர, முதியோர்) வரலாம். இது பொதுவான பிரச்சினை. தவிர, வேறு சிறுநீரக சம்பந்தப்பட்ட நோய்கள் 50 வயதுக்கு மேல் பெரிதாகும். 60 வயதுக்குப் பிறகு இன்னும் அதிகரிக்கலாம். குறிப்பாக, இந்த நோய்கள் மூலம் கேன்சர் வரவும் வாய்ப்பிருக்கிறது. அமெரிக்க உள்ளிட்ட நாடுகளை ஒப்பீடு செய்யும்போது, இந்தியாவில் இந்த கேன்சர் வரும் விகிதாச்சாரம் கொஞ்சம் குறைவு.
சிறுநீரகத்தில் கல் பிரச்சினை வருவதற்கு முக்கியக் காரணம், மரபணு. மேலும் நாம் உட்கொள்ளும் உணவுப் பழக்கம் மூலமும் வரும். அதாவது தினந்தோறும் தக்காளி, அசைவம், கீரைகள், முருங்கைக்காய் ஆகியவற்றை அதிகம் உட்கொள்பவர்களுக்கு கல் பிரச்சினை ஏற்படலாம். தண்ணீர் அதிகம் குடிக்காமல் இருப்பவர்களுக்கும் இந்தப் பிரச்சினை வரலாம். அதுபோல் மதுப் பிரியர்களுக்கும் கல் பிரச்சினை வரலாம்.
சிறுநீரகத்தில் கல் இருந்தால் எத்தகைய அறிகுறிகள் இருக்கும்?
பொதுவாக சிறுநீரகத்தில் கல் இருந்தால் ஆணுறுப்பில் வலி இருக்கும். இடுப்பில் வலி வரும். சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் இருக்கும். பிரவுன் கலரில் சிறுநீர் போகும். மேலும், சிறுநீர் கழிக்கும்போது ரத்தம் கலந்து வரும்; சர்க்கரை வியாதி இருந்தாலும் சிறுநீரில் ரத்தம் கலந்து வரலாம். ஏதாவது ஒரு கட்டி, கிட்னி, சிறுநீர்ப் பை மற்றும் நீர்வழிப் பாதையில் இருந்தால்கூட அதனால் ரத்தம் கலந்துவரும். இத்தகைய அறிகுறிகள் இருந்தால், உடனே யூராலஜிஸ்ட்டை அணுக வேண்டியது அவசியம். அதற்கான பிரச்சினைகளை உடனடியாகக் கவனிக்காவிட்டால் அது மிகப்பெரிய விளைவுகளை உருவாக்கலாம். கல் பெரிதாகிவிட்டால், கிட்னியிலிருந்து வரும் சிறுநீர் தடைபடுவதுடன் கிட்னியும் செயலிழந்தும்விடும். சிறுநீரகத்தில் இருக்கும் கற்கள் எத்தகைய தன்மை வாய்ந்தது என (கால்சியம் ஆகஸ்லேட், கால்சியம் கார்பனேட், யூரிக் ஆசிட்) டெஸ்ட் எடுத்து, அதற்கேற்றபடி சிகிச்சை மேற்கொள்வது அவசியம்.
சுன்னத் செய்வதால் கல் பிரச்சினை வருமா? சிறுநீரக நோய்கள் வராமல் தடுக்க எத்தகைய உணவுகளை எடுக்க வேண்டும்?
சுன்னத் செய்வதால் கல் பிரச்சினை வர வாய்ப்பில்லை. சுன்னத் செய்வது ஆரோக்கியத்தைக் கொடுக்கக்கூடியதாகும். சுன்னத் செய்யப்படுவதால், ஆணுறுப்பில் அழுக்குப் படியாது. வயதானவர்களுக்கு கேன்சர் வரும் வாய்ப்பு குறைவு. சிறுநீர் கழிப்பதில் சிரமம் ஏற்படாது. அதனால்தான் அத்தகைய முறையை இஸ்லாமிய அமைப்பினர் மதக் கோட்பாடு அடிப்படையில்வைத்து செய்கிறார்கள்.
சிறுநீரக நோய்களைத் தடுக்க தினந்தோறும் ஒன்றரை முதல் இரண்டு லிட்டர் தண்ணீர் கண்டிப்பாகக் குடிக்க வேண்டும். ரெட் மீட் (அசைவம்) உணவுகளையும் கீரைகளையும் தவிர்க்க வேண்டும். கீரையோ அல்லது அசைவமோ ஆகியவற்றை 10 அல்லது 15 நாட்களுக்கு ஒருமுறை எடுத்துக்கொண்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை. அதேநேரத்தில் தினந்தோறும் எடுத்துக்கொண்டால் விளைவுகள் உருவாகும். மேலும் குளிர்பானம், பால், காலிஃப்ளவர் அதிகம் சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும். அதுபோல் தானியங்களையும் நிறைய சேர்க்கக்கூடாது. தவிர, யூராலஜி மருத்துவர்கள் சொல்லும் ஆலோசனைகளையும் பின்பற்ற வேண்டும்