• Home
  • யாக்கை
  • தசைப்பிடிப்பு இருக்கும்போது தடவிக் கொடுக்காதீங்க

தசைப்பிடிப்பு இருக்கும்போது தடவிக் கொடுக்காதீங்க

Image

பிசியோதெரபி தீர்வுகள்

ஒரே நிலையில் நீண்ட நேரம் அமர்ந்திருப்பது அல்லது நிற்கும் நேரத்தில் தசைப்பிடிப்பு ஏற்பட்டு பலரும் அவதிப்படுவதுண்டு. இந்த தசைப்பிடிப்பு வராமல் தடுப்பதற்கும் வந்த பின் குணமாக்குவதற்கும் வழிகளை காட்டுகிறார் பிசியோதெரபி நிபுணர்.

ஒரு வேலையைத் தீவிரமாக செய்யும் நேரத்தில் அல்லது தீவிரமாக விளையாடும்போது திடுமென உடலில் ஏதேனும் ஓர் இடத்தில் தசைப் பிடிப்பு ஏற்பட்டு கடுமையான வேதனை கொடுப்பதுண்டு. இதனை எல்லா மனிதர்களும் ஏதேனும் ஒரு தருணம் கண்டிப்பாக அனுபவித்திருப்பார்கள். இது ஏன் உண்டாகிறது என்பதைப் பார்க்கும் முன்பு, தசைப்பிடிப்பு என்றால் என்னவென்று அறிந்துகொள்ளலாம்.

மனித உடலில் இருக்கும் தசைகள் எல்லாமே சுருங்கி, விரியும் தன்மை கொண்டவை. இப்படி சுருங்கி, தளரும் தன்மைக்கு மாறாக தசை சுருங்கியே இருப்பதால் வலி ஏற்படுவதையே தசைப்பிடிப்பு என்கிறோம்.

ஏன் வருகிறது தசைப்பிடிப்பு..?

பொதுவாக உடலில் நீர்ச்சத்து, உப்புச்சத்து குறைவதன் காரணமாக தசைப்பிடிப்பு ஏற்படலாம். உடலில் சோடியம், மெக்னீசியம், பொட்டாசியம், கால்சியம் போன்ற எலக்ட்ரோலைட்டுகள் பற்றாக்குறை ஏற்படுவதாலும் தசைப்பிடிப்பு உண்டாகலாம். அதேபோல் வைட்டமின் பி1, வைட்டமின் பி5 மற்றும் வைட்டமின் பி6 போன்ற பல வைட்டமின் குறைபாடுகளும் ஒருசிலருக்கு தசைப்பிடிப்புக்கான காரணமாகிறது.

அதிக சோர்வு அடைதல், உடலில் தாது உப்புகளின் அளவு குறைதல், ஏதேனும் இடத்தில் அடிபடுதல் போன்ற காரணங்களாலும் தசைப்பிடிப்பு ஏற்படலாம். கை அல்லது காலுக்கு ஒரே மாதிரி வேலையை நீண்ட நேரத்துக்குக் கொடுப்பது, நீண்ட நேரம் ஒரே நிலையில் இருப்பதால் ரத்தவோட்டம், ஆக்சிஜன் கொண்டுசெல்வதில் குளறுபடி ஏற்பட்டும் தசைப்பிடிப்பு வரலாம். முறையான வார்ம் அப் செய்யாமல் விளையாடுபவர்களுக்கும், இயல்புக்கு மாறாக உடலைத் திருப்புபவர்களுக்கும் தசைப்பிடிப்பு உண்டாகலாம். ஒரு சிலருக்கு வாழைக்காய், உருளை போன்ற வாயு நிறைந்த உணவுப் பொருட்கள் சாப்பிடுவதாலும், காரமான மசாலா பொருட்கள் சாப்பிடுவதாலும் உடலில் வாயுவை அதிகரித்து தசைப்பிடிப்பு ஏற்படலாம்.

என்ன செய்ய வேண்டும்..?

தசைப்பிடிப்பு ஏற்பட்டதும் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பார்க்கும் முன்பு என்ன செய்யக்கூடாது என்பதை அறிந்துகொள்வோம். நிறைய பேர் தசைப்பிடிப்பு ஏற்பட்டதும் அந்த இடத்தில் அழுத்தம் கொடுப்பதும், தேய்ப்பதும், தடவிவிடுவதும் உண்டு. அதே போல் கை, கால்களை நீட்டுவது, உதறுவது போன்ற செயல்களை செய்வார்கள். இவை எதுவும் சரியானது அல்ல.

தசைப்பிடிப்பு ஏற்பட்டதுமே ஓய்வு நிலைக்குச் செல்ல வேண்டும். குறிப்பாக பிடிப்பு ஏற்பட்ட உறுப்புக்கு எந்த வேலையும் தரக்கூடாது. வெந்நீர் பை, ஐஸ் பேக் போன்றவற்றை மாற்றி மாற்றி வலிக்கும் இடத்தில் வைப்பது சரியான சிகிச்சையாக இருக்கும். இது வலியைக் குறைக்கும். வெந்நீர் பை ஒத்தடம், தண்ணீரில் துணியை நனைத்து ஒத்தடம் கொடுப்பதும் நல்ல பலன் தரும். போதிய ஓய்வு எடுத்துக்கொண்டு ஓரளவு வலி குறைந்ததும் மருத்துவர் அல்லது பிசியோதெரபி நிபுணரை நாடலாம்.

ஒருசிலருக்கு சில நிமிடங்களில், சில மணி நேரங்களில் பிடிப்பு சரியாகிவிடும். சிலருக்கு நாட்கணக்கில் நீடிக்கலாம். எனவே தசைப்பிடிப்பு என்ன காரணத்தினால் தசைப்பிடிப்பு ஏற்பட்டது என்பதை அறிந்துகொள்வதற்காக மருத்துவர் அல்லது பிசியோதெரபி நிபுணரை சந்தித்து சிகிச்சை எடுத்துக்கொள்வது நல்லது. இதன் மூலம் ரத்தவோட்டம் அதிகரிக்கச் செய்து முந்தைய நிலைக்குக் கொண்டுவர முடியும். மீண்டும் இதுபோன்ற தசைப்பிடிப்பு ஏற்படாமல் பாதுகாக்கவும் முடியும்.

தசைப்பிடிப்பினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிசியோதெரபியில் அவரவர் பாதிப்புக்கு ஏற்ற வகையில் சிகிச்சை செய்யப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு எலக்ட்ரோதெரபி கொடுக்கப்பட வேண்டியிருக்கலாம். வெப்பம், ஒளி, மின்காந்த அலைகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி சிகிச்சை கொடுக்கப்படும். இதற்கு, அல்ட்ராசவுண்ட், லேசர், ஷார்ட் வேவ் டயாதெர்மி, அல்ட்ராவயலட் போன்றவை தசைகளில் வெப்பத்தை உருவாக்கி, வலியைச் சரி செய்கின்றன. அதன்பிறகு கை, கால்களை சரியான முறையில் தூக்குவதற்கும் அசைப்பதற்கும் பயிற்சி கொடுக்கப்படும்.

உடலில் நீர்ச்சத்து போதுமான அளவு இருக்கிறதா என்பதைப் பார்த்து, சரியான அளவு நீர் குடிப்பதற்கு பரிந்துரை செய்யப்படும். அதேபோல் எலக்ட்ரோலைட் அளவு சரியாக இருக்கிறதா என்பதையும் பரிசோதனை செய்துகொள்வதன் மூலம் மீண்டும் இந்த பிரச்னை ஏற்படாமல் பாதுகாத்துக்கொள்ள முடியும்.

டிரைவர், கம்ப்யூட்டர் பணியில் இருப்பவர்களுக்கு நீண்ட நேரம் அமர்ந்து பணி செய்ய வேண்டிய சூழல் இருக்கிறது. இவர்களூக்கு தசைப்பிடிப்பு ஏற்படாமல் இருப்பதற்கும், வலி ஏற்படும் ஆரம்ப கட்டத்திலேயே செய்ய வேண்டிய பயிற்சிகளும் பரிந்துரைக்கப்படும். இது, ஒவ்வொரு நபருக்கும் வெவ்வேறாக இருக்கும். தசைப்பிடிப்பு இருக்கும் நேரத்தில் அல்லது வலி இருக்கும்போது எந்த பயிற்சிகளும் மேற்கொள்ளக் கூடாது.

தினமும் குறிப்பிட்ட உடற்பயிற்சிகள் மேற்கொள்வதன் மூலம் தசை மற்றும் எலும்புகள் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும். இவர்களுக்குத் தகுந்த உணவுகளும் பரிந்துரை செய்யப்படும். தசைப்பிடிப்பு தானாக சரியாகிவிடும் என்று அசட்டையாக இருப்பவர்களுக்கு அடிக்கடி இந்த பிரச்னை ஏற்படும் என்பதுடன் பக்கவிளைவுகள் ஏற்படவும் வாய்ப்பு உண்டு. ஆகவே, எந்தவொரு வலியையும் அசட்டை செய்ய வேண்டாம்.

  • ஏடிசி.முருகேசன், ஸ்ரீஓம் பிசியோதெரபி சென்டர், விருதுநகர்.

தொடர்புக்கு : 9994944228

Leave a Comment