- ஜோதிடம் இல்லீங்க மருத்துவம்
ஒரு நபரை நேரில் பார்த்து பேசும் நேரத்திலேயே, அவர் எத்தனை தூரம் ஆரோக்கியமாக இருக்கிறார் என்பதை தெளிவாகச் சொல்லிவிட முடியும். எப்படியென்றால், அவரது உடல் அவயங்களில் சின்னச்சின்ன வித்தியாசங்கள் தென்படுவதுண்டு. உடல் உறுப்புகளில் தென்படும் சின்னச்சின்ன மாற்றங்களும் நோய் அறிகுறிகளே, இதனை எப்படி கண்டறிவது என்பதைக் காணலாம்.
தோல் இளம் மஞ்சளாக மாறுவது கல்லீரல் நோய் என்று பெரியோர்கள் பார்த்தவுடனே கண்டுபிடித்துவிடுவார்கள். கல்லீரல் பாதிப்படையும்போது உடலிலிருக்கும் பித்த நீர் போன்ற மஞ்சள் நிற திரவங்களை வெளியேற்ற முடிவதில்லை. இதனால் தோல் மஞ்சள் நிறத்திற்கு மாறுகிறது. அதிகப்படியான ஆல்கஹாலின் அளவால் இப்படி கல்லீரல் பிரச்சினை ஏற்படுகிறது. குடிப்பழக்கம் இருந்தால், உடனடியாக நிறுத்தி விடுவதே நல்லது. கீழாநெல்லி நல்ல மருந்து என்றாலும் உடனே மருத்துவரை அணுகவேண்டியது அவசியம்.
உடலில் தண்ணீர் இழப்பு அதிகமாகும் நேரத்தில் முகம் வீக்கமடைவதுண்டு. உடலுக்குப் போதுமான தண்ணீர் கிடைக்காமல் போனால், ரத்த செல்கள் விரிவடைந்து முகம் வீக்கமாகத் தெரியும். எனவே, ஒரு நாளைக்கு எட்டு கிளாஸ் தண்ணீராவது அருந்துவது அவசியம். உடலில் நீர்ச்சத்து குறையும்போது வாய் ஈரப்பசையின்றி உலர்ந்து போவதுண்டு. உடலில் அதிகப்படியான நீர் வெளியேறுவதால் இந்த டீஹைடிரேஷன் ஏற்படுகிறது. மேலும் அதிகப்படியாக வியர்ப்பது மற்றும் நீரிழிவு நோயும்கூட வாய் உலர்ந்து போவதற்கு காரணமாகும். நிறைய திரவ ஆகாரம் எடுத்துக் கொள்ளவேண்டும். தினமும் குறைந்தது ஒன்றரைலிட்டர் தண்ணீர் அருந்துவது அவசியம். அதன்கூடவே பழங்களையோ பழச்சாறோ அருந்துதலும் நல்ல பலன் தரும்.
கண்கள் உப்பியிருப்பது சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் பொருட்களை அகற்றும் வேலையைச் செய்பவை. அவை சரிவர வேலை செய்யவில்லை என்றால், உடலில் சேரும் அசுத்த நீர் வெளியேற முடியாமல் போகும். இவை கண்களைச் சுற்றித் தேங்கி விடுவதால் கண்களைச் சுற்றி வீக்கம் போலத் தோன்றும். இவர்கள் உடனடியாக உணவில் சேர்த்துக் கொள்ளப்படும் உப்பின் அளவைக் குறைத்துக் கொள்ளவேண்டும். மேலும் அதிகப்படியான நீர் அருந்துவது சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்ய உதவும்.
அதிகப்படியான வேலை காரணமாக கண் இமைகளில் வலி வரலாம். மேலும் மக்னீசியம் உடலில் குறைவதால் உடல் சோர்வடைந்து கண் இமைகளில் வலி உண்டாகிறது. இப்படிப்பட்ட நிலையில் போதுமான அளவு ஓய்வு எடுத்துக் கொள்ளவேண்டும். அதோடு உணவில் முட்டைக்கோஸ் மற்றும் கீரைகளை அதிக அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
ஏ.சி. நிறைந்த இடங்களில் அதிக நேரத்தைச் செலவிடும் போதும், கண்கள் அதிக வேலையினால் களைப்படையும் போதும் நம் கண்கள் உலர்ந்து மிகுந்த பாதிப்புக்குள்ளாகிறது. இதற்கு குறைந்தது எட்டு மணி நேர இரவுத் தூக்கம் மிகவும் அவசியம். தினமும் கண்களை மேலும்_கீழுமாகவும், பக்கவாட்டின் இருபுறமும் அசைத்தல் போன்ற எளிய உடற்பயிற்சிகளை ஒரு நாளில் இரண்டு முறை செய்யவேண்டும்.
தோலில் தடிப்புகள் ஏற்படுவதற்கு இருதய நோய் காரணமாக இருக்கலாம். குறிப்பாக காதுகளுக்குப் பக்கத்திலிருக்கும் தோலில் ஏற்படுமானால் இருதய கோளாறு உள்ளது என்று தெரிந்து கொள்ளலாம். அதிகப்படியான மன அழுத்தம் ‘ஹார்ட்_அட்டாக்’ வருவதற்கான வாய்ப்பை உருவாக்கும். மனதை பாரமில்லாமல் லேசாக வைத்துக் கொள்ள முயற்சிப்பதும், பிரச்சினைகளை நல்ல முறையில் அணுகுவதும் இதைத் தவிர்க்கும்.
பாதம் கை கால்களில் சில நேரங்களில் சுறுசுறுவென உள்ளே ஏதோ ஓடுவது போலிருத்தலுக்கு சீரான ரத்த ஓட்டமின்மையே காரணமாக இருக்கிறது. ரத்தக் குழாயில் அடைப்பு இருந்தால் உடலின் ரத்த ஓட்டம் சீராக இருக்காது. இந்த அறிகுறி உங்கள் ரத்தமானது பாதம் வரை சீராக ஓடச் செய்யும் முயற்சியே ஆகும். இதற்கு வைட்டமின் நிறைந்த உணவுகளும் கீரைகளும் சாப்பிட வேண்டும்.
நீரிழிவு நோயினால் ரத்தத்திலிருக்கும் செல்களைப் பாதிப்பதோடு, நரம்புகள் செய்யும் வேலைகளையும் தடுத்து விடுகிறது. இதன் விளைவாக சில நேரங்களில் கால்களில் செருப்புக்கள் உராய்ந்து ஏற்படுத்தும் எரிச்சலையோ வலியையோகூட உணர்ந்து கொள்ள முடியாத அளவுக்கு கால் மரத்துப்போவதுண்டு. பிளாக் டீ அல்லது கிரீன் டீ உங்கள் இரத்தத்திலிருக்கும் குளுக்கோஸின் அளவைக் குறைத்து நீரிழிவு நோயைக் கொஞ்சம் கட்டுப்படுத்தும். உடல் பருமனும்கூட டயபடீஸ் வருவதற்கு ஒரு முக்கிய காரணமாகும்.
பாதங்களில் உலர்ந்த வெடிப்புகள் ஏற்படுவதற்கு தைராய்டு காரணமாக இருக்கலாம். இந்த தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்யாதபோது, நம் பாதங்களின் தோல் உலர்ந்துபோகும். பாதங்களை சரிவரபாராமரிக்காமல் இருந்தால் அதிக அளவில் பாதிப்படைந்துவிடும். இதற்கு சுய மருத்துவம் பார்க்காமல் மருத்துவரை சந்தித்து மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
கல்லீரல் பிரச்சினை உள்ளவர்களுக்கு உள்ளங்கை சிவப்பாக இருக்கலாம். நோய்வாய்ப்பட்ட கல்லீரலால், நம் இரத்தத்திலுள்ள ஹார்மோன்களைக் கட்டுப்படுத்த முடியாமல் போகும். அதனால் உங்கள் ரத்தத்தின் நிறம் அதிக சிகப்பாகிவிடும். கல்லீரல் சரியாக வேலை செய்யவில்லை என்பதை, அதிக சிவப்பான உள்ளங்கைகள் தான் சட்டென காட்டிக் கொடுக்கும். காரணம் உடலின் மற்ற பாகங்களைவிட உள்ளங்கையின் தோல் மிகவும் மிருதுவாக இருப்பதுதான். கீழாநெல்லியை வாரத்தில் ஒருதரம் சாப்பிடுவது கல்லீரலைச் சரிப்படுத்தும். உடம்பின் விஷத்தன்மையை மாதம் ஒரு முறையாவது போக்க, ஒரு நாள் பழம் மட்டும் சாப்பிடுங்கள்.
வெளுத்த நகங்கள் என்பதற்கு ரத்த சோகை காரணமாக இருக்கிறது. ரத்தத்திலுள்ள சிகப்பணுக்கள் அளவில் குறையும்போது சின்னச் சின்ன வேலையைச் செய்வதற்கும் உடல் பலமின்றிப் போகும். இரும்புச்சத்து ரத்தத்திலுள்ள சிகப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும். ஈரல், கீரை வகைகள், மற்றும் இறைச்சியை உணவுடன் சேர்த்துக் கொள்ளவேண்டும். அல்லது டாக்டரின் ஆலோசனையின் படி குறிப்பிட்ட நாட்களுக்கு இரும்புச்சத்து மாத்திரைகளோடு பி_12 மாத்திரைகளையும் எடுத்துக் கொள்வது நல்லது.
நகங்களில் குழி விழுகிறது என்றால் சோரியாஸிஸ் நோய் தாக்கியிருக்கிறது என்பதே அர்த்தம். இது ஒரு மோசமான தோல் வியாதி. இதன் மூலம் தோலும் நகங்களும் மிகவும் மென்மையாகி விடும். இந்த வியாதி வந்தால் மென்மையான நகங்களில் குழிகள் வரக்கூடும். இதற்கு மருத்துவர் ஆலோசனையின் பேரில் நீண்ட நாட்கள் மருத்துவம் செய்யவேண்டியது அவசியமாகும்.
.பல் ஈறுகளில் ரத்தம் வருகிறது என்றால் ஈறுகளிலும் அவற்றின் அடியிலிருக்கும் எலும்புகளிலும் தொற்று நோய்க் கிருமிகளின் தாக்குதல் இருக்கிறது என்று அர்த்தம். இதனால் பற்கள் உறுதி இழந்து விழுந்துவிடும். தினமும் பற்களைச் சுத்தமாக துலக்குவதும், பற்காரைகள் வராமல் பாதுகாப்பதும் அவசியம். ஆன்ட்டி பாக்டீரியல் கொண்ட மவுத் வாஷ் கொண்டு வாய் கொப்பளிப்பது நல்லது.
உடலில் ஃபோலிக் ஆசிடின் குறைவு, இரும்புச்சத்து அல்லது வைட்டமின் பி_12ன் குறைவினால் வாய்ப்புண் ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு. மல்டி_விட்டமின்’ மாத்திரைகளைத் தினமும் எடுத்துக் கொள்ளவேண்டும். மேலும் தியானம் மற்றும் யோகா செய்வதால் ஸ்டிரெஸ்ஸைக் குறைக்கலாம். ஹைட்ரஜன் பெராக்ஸைடு கொண்டு வாய் கொப்பளித்து வருவதால் வாய்ப்புண் ஆறும்.