தோல்வியே விலகிப் போ
சாம்பலில் இருந்து உயிர்த்தெழும் தன்மை ஃபீனிக்ஸ் பறவைக்கு உண்டு என்பார்கள். அது கற்பனை பறவை என்றாலும் அதேபோல் எத்தனையோ மனிதர்கள் தங்கள் தோல்விகளில் இருந்து மீண்டு எழுந்து சாதனையாளர்களாக மாறியிருக்கிறார்கள். நம் கண்ணுக்கு முன்னே நிற்கும் கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் அப்படியொரு ஃபீனிக்ஸ் பறவை.
கபில்தேவ், சச்சின் டெண்டுல்கர், மகேந்திரசிங் டோனி, வினோத் காம்ப்ளி போன்று நட்சத்திர வீரர் இல்லையென்றால், அணியின் வெற்றிக்குத் தன்னால் முடிந்த அத்தனை திறனும் காட்டி உதவக்கூடிய அதிரடி வீரர்.
கடந்த 2024 ஐ.பி.எல். பிளே ஆஃப் சுற்றுடன் அவர் ஆட்டத்தில் இருந்து விடைபெற்று விட்டார். அவர் கிரிக்கெட் அணியில் இனி இருக்கப்போவதில்லை என்றாலும் அவரது கம் பேக் எனப்படும் மீட்சி, காலம் முழுக்க பேசப்படும் ஒரு சாதனையாக இருக்கும் என்பது மட்டும் உண்மை.
அப்படி என்ன நடந்தது அவருடைய வாழ்வில்..?
1985ம் ஆண்டு பிறந்தவர் தினேஷ் கார்த்திக். அவரது தந்தை ஒரு தோல்வி அடைந்த கிரிக்கெட் வீரர் என்று சொல்லலாம். அதனால் தன்னைப் போன்று தன்னுடைய பிள்ளையும் கிரிக்கெட் விளையாட ஆசைப்பட்டு தோல்வி அடைந்துவிடக் கூடாது என்று படிப்பில் கவனம் செலுத்துவதற்கு அறிவுறுத்தினார்.
ஆனால், 10 வயது முதல் தினேஷ் கார்த்திக்கின் ஆசை கிரிக்கெட்டாகவே இருந்தது. வேறு வழியின்றி அவரது தந்தையே கோச்சாக இருந்து பயிற்சியளிக்கத் தொடங்கினார். இவரது திறமையைப் பார்த்த அன்றைய கிரிக்கெட் வீரர் ராபின் சிங் இவரை தமிழ்நாடு அண்டர் 14 அணிக்கு பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பராக களம் இறக்கினார். தொடர்ந்து தன்னுடைய திறமையைக் காட்டி ஒவ்வொரு ஆட்டத்திலும் மெருகேறிக்கொண்டே வந்தார். ஆகவே, கிருஷ்ணகுமார் தினேஷ் கார்த்திக் என்ற இளம் விக்கெட் கீப்பர் இந்திய கிரிக்கெட் அணிக்காக 2004ம் ஆண்டு அறிமுகமானார்.
பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் களம் இறங்கினார். அடுத்த இங்கிலாந்து டூரில் அதிக ரன்கள் எடுத்த வீரராக இருந்ததுடன் 21 ஆண்டுகள் கழித்து இந்திய அணி டெஸ்ட் தொடரை இங்கிலாந்தில் வெல்வதற்குக் காரணமாக இருந்தார்.
2007ம் ஆண்டு நடந்த திருமணம் தினேஷ் கார்த்திக் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டது. இத்தனைக்கும் அவரது பால்ய தோழியான நிகிதா வஞ்சாராவைத் தான் திருமணம் செய்துகொண்டார். அந்த நேரத்தில் தமிழக ரஞ்சி கோப்பை அணிக்கு தினேஷ் கார்த்திக் கேப்டனாக இருந்தார்.
எப்போதும் தினேஷ் கார்த்திக்குடன் விளையாட்டு மைதானத்திற்கு வருகை தரும் நிகிதா அங்கு சக வீரரான முரளி விஜய்யை சந்தித்தார். அப்போது வளர்ந்துவரும் இளம் நட்சத்திரமாக இருந்த முரளி விஜய்க்கும் நிகிதாவுக்கும் எப்படியோ காதல் தீ பற்றிக்கொண்டது. இருவரும் பேசவும் பழகவும் தொடங்கினார்கள். எதையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் தினேஷ் கார்த்திக், இவர்களுடைய உறவை சாதாரண நட்பாகவே கருதினார்.
தினேஷ் கார்த்திக்கின் நண்பர்கள், நெருக்கமானவர்கள் என எல்லோருமே முரளி விஜய்க்கும் நிகிதாவுக்கும் இடையில் தவறான உறவு இருக்கிறது என்று சொன்னபோதும் தினேஷ் மட்டும் மனைவி மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார். இந்த குழப்பத்தின் காரணமாக தினேஷ் கார்த்திக்கின் ஆட்டத்திறன் பாதிக்கப்பட்டு இந்திய அணியில் இடம் பிடிக்க முடியாமல் போனது.
2012ம் ஆண்டு நிகிதா கர்ப்பமான தகவல் தெரிந்ததும் தினேஷ் குதூகலமானார். தங்கள் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் கிடைத்துவிட்டது என்று நினைத்தார். ஆனால், அந்த நினைப்பில் கல் எறிவது போன்று, ‘அந்த குழந்தையின் தந்தை முரளி விஜய்’ என்று நிகிதா வெளிப்படையாக அறிவித்தார்.
ஒரேயடியாக தினேஷ் கார்த்திக் உடைந்து போனார். நிகிதாவை விவாகரத்து செய்தார். விவாகரத்து பெற்றதும் நிகிதா முரளி விஜய்யை மணந்துகொண்டார்.
நெருங்கிய நண்பனும், மனைவியும் தன்னை ஏமாற்றிக்கொண்டே உடன் வாழ்ந்ததை தாங்கிக்கொள்ள முடியாமல் மனதளவில் ரொம்பவே பாதிக்கப்பட்டனர். தோல்வி அடைந்த ஒவ்வொரு நபரும் ஆறுதலுக்கு குடியை நாடுவது போல், தினேஷ் கார்த்திக்கும் தன்னுடைய வருத்தத்தையும் சோகத்தையும் மறப்பதற்கு குடிகாரராக மாறினார்.
காலை முதல் இரவு வரை குடிக்கத் தொடங்கியதால் அவரது கிரிக்கெட் வாய்ப்புகள் விலகிப் போயின. தமிழக அணியின் கேப்டன் பதவி பறிக்கப்பட்டு முரளி விஜய் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார். இதை தாங்கிக்கொள்ள முடியாமல் மேலும் குடிக்கத் தொடங்கினார். உடற்பயிற்சி செய்வதை முழுமையாக நிறுத்திவிட்டார்.
இதைக் கண்டு வருத்தமடைந்த அவரது பயிற்சியாளர் தினேஷ் கார்த்திக்கை அந்த சுழலில் இருந்து மீட்பதற்கு பெருமுயற்சி எடுத்துக்கொண்டார். அவரால் மட்டும் அந்த காரியம் முடியக்கூடியதாக இல்லை. அப்போது அதே பயிற்சியாளரிடம் பயிற்சி பெற்றுவந்த ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பல்லிக்கலும் தினேஷ் கார்த்திக் நிலையைப் பார்த்து ரொம்பவே வருத்தமானார். தன்னுடைய பயிற்சியை தியாகம் செய்துவிட்டு தினேஷிற்கு உதவி செய்யத் தொடங்கினார். நிறைய நிறைய பேசினார். தீபிகாவின் தீவிரம் கொஞ்சம் கொஞ்சமாக தினேஷ் கார்த்திக்கை மாற்றத் தொடங்கியது.
இந்த காலகட்டத்தில் முரளி விஜய்யின் விளையாட்டுத் திறன் முழுமையாகப் பாதிக்கப்பட்டு கிரிக்கெட்டிலிருந்து ஒதுக்கப்பட்டார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்தும் முரளி விஜய் ஓரம் கட்டப்பட்டார்.
கொஞ்சம் கொஞ்சமாக குடியில் இருந்து வெளியேறிய தினேஷ் கார்த்திக்கை மீண்டும் வலைப்பயிற்சி செய்வதற்கு வலியுறுத்தினார் தீபிகா. முழு நேரமும் தீவிரமாக தினேஷ், வலைப்பயிற்சி மேற்கொள்ளத் தொடங்கியதை அடுத்து அவரது விளையாட்டு மேம்படத் தொடங்கியது. அடுத்தடுத்து உள்நாட்டு கிரிக்கெட்டில் பெரிய ஸ்கோர் அடிக்கத் தொடங்கினார்.
இதையடுத்து ஐ.பி.எல். போட்டிகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக மாறினார். தீபிகாவுக்கும் தினேஷ் கார்த்திக்கிற்கும் புரிதல் அதிகரிக்கவே, இருவரும் திருமணம் செய்துகொண்டனர். தீபிகா இரட்டைக் குழந்தை பெற்றெடுத்தார். இரண்டு பேருமே விளையாட்டில் இருந்து ஓய்வு பெறும் சூழல் உருவானது.
இத்தனை பிரச்னைகளுக்குப் பிறகு இந்திய அணியில் இடம் கிடைக்காது என்பது தெரிந்தாலும், தினேஷ் தொடர்ந்து தன்னுடைய பயிற்சியைக் கைவிடவே இல்லை. அவரது ஃபிட்னஸ் அவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பைக் கொண்டுவந்தது. ஐ.பி.எல். போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் அணி இவரை ஏலத்தில் எடுத்துக்கொண்டது.
அதேபோல் குழந்தை பெற்றுக்கொண்ட பிறகும் தீபிகாவும் விளையாடத் தொடங்கினார். குழந்தைகள் பிறந்து 6 மாதங்களுக்குப் பிறகு, கிளாஸ்கோவில் நடந்த உலக சாம்பியன்ஷிப்பில் ஜோஷ்னா சின்னப்பாவுடன் இணைந்து மகளிர் இரட்டையர் பட்டத்தை வென்றார்.
2024ம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் அணி பிளே ஆஃப் சுற்று வரையிலும் வந்ததற்கு தினேஷ் கார்த்திக்கும் ஒரு முக்கிய காரணம். பிளே ஆஃப் சுற்றில் தோற்றுப்போன நேரத்தில் 17 ஆண்டுகளாக ஆடிவந்த ஐ.பி.எல். விளையாட்டுக்கு முடிவுரை எழுதியிருக்கிறார் தினேஷ் கார்த்திக். இவர் 257 ஐ.பி.எல். டி20 போட்டிகளில் விளையாடி 4,842 ரன்கள் குவித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதை அவர் நிறுத்தியிருக்கிறார் என்றாலும் ஏற்கனவே கிரிக்கெட் வர்ணனையாளராக தன்னுடைய பணியை தொடங்கியிருக்கிறார். போராடும் மனிதர்களுக்கு ஒருபோதும் தோல்வி இல்லை என்பதற்கு வாழும் உதாரணமாகத் திகழ்கிறார் தினேஷ் கார்த்திக்.
சபாஷ் கார்த்திக்.
பின்குறிப்பு :
இந்த கட்டுரை வெளியாகியிருக்கும் ஞானகுரு மகிழ்ச்சி ஜூன் மாத இதழ் முழுமையாகப் படிப்பதற்கு இந்த லிங்க் தொட்டுச் செல்லுங்கள். அட்டையைத் தொட்டால் இதழ் விரியும். படியுங்கள் பரப்புங்கள்.