100 நாள் மலைப்பாம்பு
தொடந்து 100 நாட்கள் ஏதேனும் ஒரு செயலை செய்துவந்தால், அது பழக்கமாக மாறிவிடுகிறது என்கிறார்கள். அதாவது காலை எழுந்ததும் நேரடியாக பல் துலக்குவதை முதல் வேலையாக பழக்கப்படுத்திக் கொண்டால், அது வாழ்நாள் முழுக்க தொடர்ந்துவிடும். விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அந்த பழக்கத்தில் இருந்து விடுபட முடியாது.
அதனாலே பழக்கத்தை மலைப்பாம்பு என்பார்கள். எளிதில் பிடிக்காது, பிடித்துவிட்டால் அத்தனை சீக்கிரம் விடாது. கெட்ட பழக்கம் மட்டுமின்றி நல்ல பழக்கங்களும் சிக்கல் தரக்கூடியதே. அதாவது, காலை குளித்த பிறகே சாப்பிடுவது என்ற பழக்கத்தில் பிடிவாதமாக இருந்துவிட்டால், சில பயணங்களில் ரொம்பவே சிரமப்பட வேண்டியிருக்கும். குளிக்கவில்லை என்பதால் மிகப்பெரும் அவஸ்தையை அனுபவிக்க நேரிடும்.
இந்திய நாட்டின் தந்தையாகவும், அஹிம்சை நாயகனாகவும் அறியப்படும் மகாத்மா காந்தி ஒருவகையில் பழக்கத்தின் அடிமை என்றும் சொல்லலாம். வாழும் கடைசி காலம் வரையிலும் உணவு உட்கொள்வதில் மிகவும் பிடிவாத பழக்கம் கொண்டவராக இருந்தார். இந்தியாவை விட தென்னாப்பிரிக்காவில் இருந்தபோதும் பழக்கத்தை அவர் விடவே இல்லை. தென்னாப்பிரிக்காவில்தான் காய், கனிகளை அப்படியே உட்கொள்ளும் முறைகளை கற்றுக்கொண்டார். அசைவம் கலந்துவிடக்கூடாது என்பதற்காக தானே சமைக்கவும் கற்றுக்கொண்டார். சைவம் சாப்பிட்டால் மட்டும்தான் உடல் தூய்மையாக இருக்கும் என்று நம்பினார்.
அவர் நம்பியது மட்டுமின்றி, அவரை சார்ந்தவர்களையும் இந்த உணவுப் பழக்கத்திற்கு மாற்ற விரும்பினார் என்பதுதான் வேடிக்கை. நாட்டுக்கு சுதந்திரம் வாங்குவதற்கு போராடிய காந்தி, மற்றவர்கள் மீது தன்னுடைய விருப்பங்களை திணிக்கவும் செய்திருக்கிறார். தினமும் குறிப்பிட்ட அளவு நூல் நூற்க வேண்டும் என்று அவராகவே ஒரு பழக்கத்திற்குள் சிக்கிக்கொண்டார். இந்த நேரத்தில் அவரால் ஆயிரக்கணக்கான மக்களுக்குப் பயன் தரும் எத்தனையோ பணிகளை செய்திருக்கலாம்.
குடில் தூய்மையாக இருப்பதுதான் ஆரோக்கியம் என்று நம்பினார் காந்தி. அதனால் இனிமா எடுத்துக்கொள்வது காந்தியின் வழக்கம். அவரது சீடர்களுக்கும் எனிமா கொடுப்பது காந்தியின் வழக்கம். காந்தி உண்ணாவிரதம் ஆரம்பித்ததும் உணவுப் பழக்கத்தின் ஒரு கட்டம் என்றுதான் சொல்லவேண்டும். தன்னுடைய பழக்கம்தான் சரியானது என்பதை நிலைநாட்டுவதற்கு கடைசி வரை போராடினார் காந்திஜி.
இப்படி பிடிவாதமாக ஏதேனும் ஒரு கொள்கையில், நடவடிக்கையில் இருப்பது நியாயமானது அல்ல. எந்த பழக்கத்திலும் சிக்கிக்கொள்ளாமல் சுதந்திரமாக இருப்பதே சிறப்பு.