இப்படி செய்யலாமா ஸ்டாலின்?
தனுஷ் நடித்த வாத்தி படத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உதவி செய்யும் தனியார் பள்ளி உரிமையாளராக வில்லன் சண்முகக்கனி நடித்திருப்பார். அரசு பள்ளி மாணவர்களை எல்லாம் தனியார் பள்ளிக்கு வரவழைப்பதற்கு சூழ்ச்சி செய்வார். அப்படி ஒரு சூழ்ச்சி இப்போது தமிழகத்தில் நடக்கிறது. இதற்கு ஸ்டாலின் அரசு உதவி செய்கிறது என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சமீபத்தில் 500 அரசு பள்ளிகளை 2025-26ம் கல்வி ஆண்டில் மேம்படுத்துவதற்கு தனியார் பள்ளிகள் உதவி செய்யும் என்று அறிவிப்பு வெளியானது. 500 அரசுப் பள்ளிகளை தத்தெடுக்கப்போவதாக கூறும் தமிழ்நாடு தனியார் பள்ளி சங்கத்தின் பொதுச் செயலாளர் கே ஆர் நந்தகுமார் என்பவர் பாஜக ஆர்எஸ்எஸ் இயக்கத்தைச் சார்ந்தவர். அவர் ஸ்ரீசங்கரா மெட்ரிக் பள்ளியின் தாளாளர். சங்பரிவார்களிடம் அரசுப் பள்ளிகளை தாரை வார்க்க திமுக முடிவும் செய்துள்ளது.
இதன் மூலம் சத்தமில்லாமல் அமலாகிறது தேசிய கல்விக்கொள்கை? PPP பப்ளிக் பிரைவேட் பார்ட்னர்ஷிப் என்பது தேசிய கல்விக் கொள்கை 2020யின் ஒரு அம்சம் என்பதால் இதுதான் பாஜகவை எதிர்க்கும் லட்சணமா என்று அரசு பள்ளி ஆசிரியர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.
தமிழ்நாட்டில் பல்வேறு தனியார் பள்ளி சங்கங்கள் இயங்கி வந்த நிலையில், அதனை ஒருங்கிணைத்து தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சங்கத்தின் தலைவர் அரசகுமார் தலைமையில் நடந்த துவக்க விழாவில், ஒன்பது தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஸ் கலந்துகொண்டு இதற்கான அனுமதி வழங்கியிருக்கிறார்.
அரசு பள்ளிகளை மேம்படுத்த வேண்டும் என்றால் அரசு நிதி வழங்க வேண்டும். அரசு நிதி வழங்க முடியவில்லை என்றால் தனியார் சேவை அமைப்புகளின் உதவியை நாடலாமே தவிர, தனியார் பள்ளிகளை அழைக்கக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மத்திய அரசு பள்ளிக் கல்விக்குரிய தொகையை அனுமதிக்கவில்லை என்று மட்டும் குற்றம் சாட்டும் அமைச்சர் அன்பில் மகேஸ் மற்றும் தி.மு.க ஆதரவாளர்கள் இந்த விவகாரத்தில் அமைதி காக்கிறார்கள்.