என்ன செய்தார் சைதை துரைசாமி – 165
மாநகராட்சிப் பள்ளிகளில் விளிம்புநிலை மக்களின் குழந்தைகளே அதிக எண்ணிக்கையில் படிக்கிறார்கள். எனவே, பெற்றோரின் வேலை இழப்பு, உடல்நலக் குறைவு போன்ற பல்வேறு காரணங்களால் பிள்ளைகள் படிப்பு நிறுத்தப்படுவதுண்டு. இது போன்ற தருணங்களில் பெற்றோருக்கு படிப்பின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறி, பிள்ளைகள் படிப்பைத் தொடர்வதற்கு மேயர் சைதை துரைசாமி மிகவும் அக்கறை காட்டினார். எந்த ஒரு மாணவரும் எந்த ஒரு காரணத்துக்காகவும் படிப்பை இடையில் நிறுத்தக்கூடாது என்பதே அவரது கனவாக இருந்தது.
அதேநேரம், வருவாய் ஈட்டும் பெற்றோரில் ஒருவரை இழக்கும் மாணவர்களால் தொடர்ந்து படிக்க முடியாத சூழல் இருப்பது மேயர் சைதை துரைசாமிக்குத் தெரியவந்தது. குடும்பத் தலைவரின் மரணம் எத்தகைய வேதனை என்பதும் அந்த வருவாய் இழப்பை சமாளிப்பது எளிய செயல் இல்லை என்பதும் மேயர் சைதை துரைசாமிக்கு நன்றாகவே தெரியும். இந்த பொருளாதாரச் சிக்கலுக்குப் பயந்து படிக்காமல் மாணவர்கள் வேலைக்குப் போய்விட்டால், அவர்களுடைய எதிர்காலம் கடுமையாக பாதிக்கப்படும் என்பதால், இதற்கு ஒரு தீர்வு காண்பதற்கு முன்வந்தார் மேயர் சைதை துரைசாமி.
பொருளாதாரமே இங்கு முக்கியக் காரணம் என்பதால், அதனை தீர்க்கும் வகையில் ஒரு திட்டம் வகுத்தார். அதன்படி வருமானம் ஈட்டும் தந்தையை இழக்கும் மாணவர் என்றால், அவரது தாயார் பெயரில் 50 ஆயிரம் ரூபாய் வங்கிக்கணக்கில் காலவரை வைப்புத் தொகை ஏற்படுத்தவும், அதிலிருந்து கிடைக்கும் வட்டித் தொகை மட்டும் மாணவரின் செலவுக்கு வழங்கும் வகையில் ஒரு திட்டம் வகுத்தார்.
வறுமை காரணமாக பிள்ளைகளின் படிப்பு பாழாகக்கூடாது என்ற குறிப்புடன் இந்த திட்டத்தை முதல்வர் ஜெயலலிதாவின் அனுமதிக்கு அனுப்பிவைத்தார். மக்கள் நலன், மாணவர் நலன் தவிர வேறு எதுவும் சைதை துரைசாமியின் சிந்தனையில் உதிக்காது என்பதும் அவர் வகுக்கும் திட்டங்களால் அரசுக்கு நிச்சயம் நல்ல பெயர் கிடைக்கும் என்பது முதல்வருக்குத் தெரியும். எனவே, சைதை துரைசாமியின் 50 ஆயிரம் வைப்புத் தொகைத் திட்டத்துக்கு உடனடியாக அனுமதி கொடுத்தார்.
உடனடியாக இந்தத் திட்டம் நடைமுறைக்குக் கொண்டுவந்ததை அடுத்து, மாநகராட்சிப் பள்ளியில் பெற்றோர் மரணத்தால் பிள்ளைகள் படிப்பை நிறுத்தும் அவலம் தடுத்து நிறுத்தப்பட்டது. அது மட்டுமின்றி, இந்தத் திட்டம் சைதை துரைசாமியின் முயற்சி காரணமாக தமிழகம் முழுக்கவும் விரிவு செய்யப்பட்டது. இதனால் மாணவர்களின் நலன் பாதுகாக்கப்பட்டது.
- நாளை பார்க்கலாம்.