என்ன செய்தார் சைதை துரைசாமி – 417
டெங்கு காய்ச்சல் பற்றிய அச்சத்தை மக்களிடம் இருந்து விரட்டுவதே தன்னுடைய முதல் கடமை என்பதை உணர்ந்து, அதிதீவிரமாக விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டார் மேயர் சைதை துரைசாமி.
‘வீட்டையும் சுற்றுப்புறத்தையும் சுகாதாரமாகப் பராமரித்தாலே டெங்கு நோயில் இருந்து தப்பித்துவிட முடியும்.,,’ என்பதை சென்னை மக்கள் புரிந்துகொள்ளும் வகையில் சுகாதாரப் பணியாளர்களை களம் இறக்கினார். டெங்கு காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு நோட்டீஸ் அச்சடித்து, அதனை தெருத்தெருவாக சென்று வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்தார்.
மற்ற பணியாளர்கள் செய்வது மட்டும் போதாது என்பதை உணர்ந்து மேயர் சைதை துரைசாமியும் தெருத்தெருவாக, வீடுவீடாகச் சென்று விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கி மக்களின் டெங்கு அச்சத்தைக் குறைத்தார்.
அதேநேரம், இந்த நடவடிக்கைகளால் மட்டும் டெங்கு பற்றிய பயத்தை மக்களிடம் இருந்து முழுமையாகப் போக்கிவிட முடியாது என்பதை மேயர் சைதை துரைசாமி உணர்ந்தே இருந்தார். எனவே, டெங்குக்கு நிரந்தரத் தீர்வாக ஒரு மருந்து மக்களுக்குக் கிடைக்கவேண்டும் என்பதில் ஆர்வம் காட்டினார்.
அலோபதி மருத்துவத்தில் மருந்து இல்லை என்றாலும் சித்தவைத்தியத்தில் நிச்சயம் ஒரு தீர்வு இருக்கும் என்று நம்பினார். ஏனென்றால், மேயர் சைதை துரைசாமிக்கு சித்த வைத்தியம், இயற்கை வைத்தியம் மீது அபார நம்பிக்கை உண்டு. நீண்ட காலமாக இயற்கை வைத்தியத்தை கடைபிடித்து வருபவர். எனவே, நம்பிக்கையுடன் ஆலோசனைகள் மேற்கொண்டார். மேயர் சைதை துரைசாமியின் நம்பிக்கைக்கு ஒரு ஒளி கிடைத்தது.
- நாளை பார்க்கலாம்.