• Home
  • யாக்கை
  • உயிரைக் காப்பாற்ற 10 நிமிடம் போதும்

உயிரைக் காப்பாற்ற 10 நிமிடம் போதும்

Image
  • கொஞ்சம் மனசு வைங்க சாரே

எல்லா மனிதர்களுக்கும் ஆரோக்கியமாக வாழவேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால், அதற்காக உடற்பயிற்சி செய்வதற்கு நேரம் ஒதுக்க வேண்டும் என்றால்தான், தடுமாறுகிறார்கள்.

உடற்பயிற்சிக்கு என தனியே நேரம் ஒதுக்கவே வேண்டாம், தினமும் கைகளை வீசி ஒரு நல்ல நடை நடந்தாலே அது போதுமானது என்கிறது பிரிட்டனில் நடந்த ஓர் ஆராய்ச்சி. தினமும் குறைந்தது 11 நிமிடம் ஏதோ ஓர் உடல் சார்ந்த பயிற்சியில் ஈடுபடுவது பத்தில் ஒரு அகால மரணத்தை தடுக்கும் என்கிறது அந்த ஆய்வு.

குறைந்தபட்சமாக வாரத்துக்கு 150 நிமிட உடற் பயிற்சி பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால், பெரும்பாலானவர்கள் அதைக்கூட செய்வதில்லை. எதுவுமே செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை, தினமும் கொஞ்ச நேரம் நடக்கும் பழக்கையாவது கொண்டுவாருங்கள் என்கிறார்கள், மருத்துவர்கள்.

இதயத்துடிப்பை அதிகரிக்கச் செய்யும் ஏதோ ஒரு உடல் சார்ந்த செயல்பாட்டில் வாரத்துக்கு 150 முதல் 300 நிமிடங்களுக்கு ஈடுபடுவது, அல்லது, வாரத்துக்கு 75 முதல் 150 நிமிடங்கள் கடுமையாக மூச்சு வாங்க வைக்கும் தீவிர உடற்பயிற்சியில் ஈடுபடுவது நல்லது.

ஆம், தினமும் கால் மணி நேரம் நடைபயிற்சி செய்வது அத்தனை மகத்தானது. இதய நோய் வருகிற 20 பேரில் ஒருவருக்கு அது தவிர்க்கப்படும் என்றும், புற்றுநோய் ஏற்படுகிற 30 பேரில் ஒருவருக்கு அந்நோய் ஏற்படுவது தவிர்க்கப்படும் என்றும் ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளனர். அந்த கணக்கீட்டின்படி வாரத்துக்கு 75 நிமிடம், அல்லது ஒரு நாளைக்கு 11 நிமிடம் சைக்கிள் ஓட்டுவது, வேகமாக நடப்பது, ஏறுவது, நடனமாடுவது, டென்னிஸ் விளையாடுவது போன்ற நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்.

மேலே குறிப்பிட்ட அளவில் நீங்கள் உடற்பயிற்சியில் ஈடுபடுவது இதய நோயோ, பக்கவாதமோ ஏற்படும் ஆபத்தை 17 சதவீதமும், புற்று நோய் ஏற்படும் ஆபத்தை 7 சதவீதமும் குறைக்க முடியும் என்கிறது ஆய்வு முடிவு. தொடர்ந்து உடற்பயிற்சியில் ஈடுபடுவது உடல் கொழுப்பையும், ரத்த அழுத்தத்தையும் குறைக்கும். அத்துடன் இதை நீண்ட காலம் செய்வது, உடற்தகுதி, தூக்கம், இதய நலம் ஆகியவற்றை மேம்படுத்தும்.

உடற்பயிற்சியில் ஈடுபடுவது கழுத்து, குடல், ரத்தப் புற்றுநோய், லுக்கீமியா ஆகியவை ஏற்படுவதைத் தவிர்ப்பதற்கு கூடுதலாகவும், நுரையீரல், கல்லீரல், பெருங்குடல், மார்பகப் புற்றுநோய்களில் இருந்து காத்துக் கொள்வதற்கு குறைவாகவும் உதவி செய்யும்.

பிரிட்டனின் தேசிய சுகாதார சேவை பரிந்துரைத்தபடி உடற்பயிற்சி செய்வது அனைவருக்கும் எளிதாக இல்லை. வாரத்துக்கு 150 நிமிடம் மிதமான உடற்பயிற்சி செய்வதாக மூன்றில் இரண்டு பங்கு பேர் கூறுகிறார்கள். 10ல் ஒருவருக்கும் குறைவானவர்களே வாரம் 300 நிமிடம் (5 மணி நேரம்) உடற்பயிற்சி செய்கிறார்கள்.

இந்த ஆய்வில் ஈடுபட்ட அனைவரும் பரிந்துரைக்கப்பட்ட முழு அளவான வாரத்துக்கு 150 நிமிட உடற்பயிற்சியை செய்ய முடிந்தால் ஆறில் ஒரு அகால மரணத்தை தவிர்க்க முடியும். சில பழக்கவழக்கங்களை மாற்றியமைத்தாலே இதை செய்யப் போதுமானது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

எடுத்துக்காட்டாக, கடைக்கோ, அலுவலகத்துக்கோ காரில் செல்வதற்குப் பதில் நடந்தோ, சைக்கிளிலோ செல்வது, குழந்தைகளோடு, பேரக்குழந்தைகளோடு உற்சாகமாக விளையாடுவது போன்றவை இந்த உடற்பயிற்சி நேரத்தை நிறைவு செய்வதற்கு உதவி செய்யும் என்கிறார்கள் அவர்கள்.

வாராவாரம் உங்கள் வழக்கமான செயல்பாடுகளில் மகிழ்ச்சியாக செய்யும் செயல்பாடுகளை சேர்த்துக்கொண்டாலே உடல் சார்ந்த செயல்பாடுகளுக்கான நேரம் அதிகரித்துவிடும் என்கிறார்கள் அவர்கள்.

பெரியவர்கள், தங்கள் தசைகளை வலுவூட்டும் உடற்பயிற்சிகளில் வாரம் இரண்டுமுறையாவது ஈடுபடவேண்டும் என்கிறது பிரிட்டனின் தேசிய சுகாதார சேவை. யோகா, பளுதூக்குதல், கடுமையான தோட்டவேலை, கடைக்குப் போய் வரும்போது வலுவான பைகளைத் தூக்குதல் போன்றவையும் இந்தக் கணக்கில் சேரும்.

எனவே, இனிமேல் வெளியே எங்கே செல்வது என்றாலும் கைக்ளை வீசி நடைபோடுங்கள். இந்த பழக்கத்தை குழந்தைகளுக்கும் கற்றுக்கொடுங்கள் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். ஏனென்றால், சின்ன வயதில் இருந்தே வெளியே செல்வதற்கு நடந்து செல்லும் பழக்கம் உருவாகிவிட்டால், அது அவர்களுடைய எதிர்கால ஆரோக்கியத்துக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். தினமும் நடைபயிற்சி செய்பவர்களுக்குத் திடீரென இதய வலி, வலிப்பு போன்றவை வருவது மற்றவர்களைவிட குறைந்த அளவுக்கே இருக்கிறது.

ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் இந்த பயிற்சியை மேற்கொள்ள வேண்டியது அவசியம். அதிகாலை என்றால் மிகவும் நல்லது அதற்கு வாய்ப்பு இல்லை என்றால் மாலை நேரங்களில் நடக்கப் பழகுங்கள்.

எளிதில் கிடைக்கும் ஆரோக்கியத்தை வேண்டாம் என்று சொல்லலாமா..? கொஞ்சம் நடங்க சாரே..