தமிழர்களின் உணவு கலாசாரம்..!
மனிதனின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்று, உணவு. அது, உடல் வலிமை பெற, வளர்ச்சியுற இன்றியமையாததாக இருக்கிறது. ஒரு மனிதனின் முதல் உணவாக இருப்பது தாய்ப்பால். அது, மருந்தாகவும் இருப்பதும்தான் வியப்பு. அதனால்தான், உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என புறநானூறு பாடுகிறது. அப்படிப்பட்ட உணவை அதிகமாய்ச் சாப்பிட்டாலும், குறைவாய்ச் சாப்பிட்டாலும் பிரச்னைதான்.
உணவு என்பது ஒரு மனிதனுக்கு மட்டும் தொடர்புடையது அல்ல, அது அரசை சார்ந்தது. ஆம், ஒவ்வோர் உயிருக்கும் உணவு தரவேண்டிய கடமை, அரசுக்கு உண்டு. அதனால்தான் பாரதி, ‘தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்’ என்று பாடினார்.
உணவு என்பதில், தானியங்களுக்குத்தான் முன்னுரிமை வழங்கப்படுகிறது. ஆசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் அரிசியும், ஐரோப்பிய, அமெரிக்க, ஆஸ்திரேலியா நாடுகளில் கோதுமையும் கோலோச்சுகின்றன. இதுதவிர, தாவர உணவையும், மாமிச உணவையும் மக்கள் எடுத்துக்கொள்கின்றனர்.
ஆனால், நம் முன்னோர்கள் அறுசுவை (காரம், கசப்பு, உவர்ப்பு, துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு) உணவை உண்டு, ஆரோக்கியத்துடன் நெடுநாட்கள் வாழ்ந்தனர். பசித்தும் செரித்தும் அளவாக உண்பார்க்கு வாத, பித்த, சிலேட்டுமம் முந்நாடிகளும் முறையாய் இயங்கும். அதற்கு, காலநிலைக்கு ஏற்ப உண்ணுதல் அவசியம். அதற்காக, ‘பழந்தமிழர் ஒரே விதமான உணவை உண்டனர்’ என்று சொல்ல முடியாது. ‘அவரவர் பொருளாதாரத்திற்கும், வாழ்விடங்களுக்கும் ஏற்பவே உணவு வகைகளைச் சேர்த்தனர்’ என்கிறார், எழுத்தாளர் மாத்தளை சோமு. தினமும் பகலில் கீரை உண்டனர் என்கிறார், அவர்.
மேலும், சங்க இலக்கிய நூல்களில் தமிழர்கள் சாப்பிட்ட உணவுகளையும், உணவுக்காக பண்டம் (பண்டமாற்று முறை ) மாற்றிய இறைச்சிகளையும் தன்னுடைய வியக்கவைக்கும் தமிழர் அறிவியல் நூலில் அவர் பட்டியலிடுகிறார். சோற்றிலே அறச்சோறு, பெருஞ்சோறு, எச்சோறு, நெய்ச்சோறு, புளியங்கூழல் எனப் பலவற்றை தமிழர்கள் சாப்பிட்டதாக வகைப்படுத்துகிறார். அதுமட்டுமின்றி, உணவு உட்கொள்ளும் முறையைக்கூட தமிழர்கள் 12 வகையாக வகுத்திருக்கின்றனர்.
அருந்தல் (மிகச்சிறிய அளவில் உட்கொள்ளுதல்), உண்ணல் (பசிதீர உண்ணுதல்), உறிஞ்சல் (நீரியிற்பண்டத்தை ஈர்த்தல்), குடித்தல் (நீரியல் உணவை பருகுதல்), தின்றல் (தின்பண்டங்கள் சாப்பிடுதல்), துய்த்தல் (சுவைத்து மகிழ்ந்து உண்ணுதல்), நக்கல் (நாக்கினால் துலாவுதல்), நுங்கல் (முழுவதையும் ஒரே வாயில் உட்கொள்ளுதல்), பருகல் (நீரியிற்பண்டத்தைச் சிறுக் குடித்தல்), மாந்தல் (பெருவேட்கையுடன் சாப்பிடுதல்), மெல்லல் (பல்லால் கடித்துச் சுவைத்தல்), விழுங்கல் (தொண்டை வழி உண்ணல்) என உண்ணும் முறையில்கூட இலக்கணங்களை வகுத்திருப்பதாக அவர் குறிப்பிடுகிறார்.
நீராவியினால் சுடப்படுகிற இட்லி, பிட்டு, மோதகம், கொழுக்கட்டை, அப்பம், இடியாப்பம் போன்ற சிற்றுண்டிப் பலகாரங்கள் அனைத்தும் சுவையோடு கூடிய சுகாதாரமானவை என்று தமிழர்கள் குறிப்பிடுவதாகச் சொல்லும் மாத்தளை சோமு, அதில் மருத்துவக் குணங்கள் இருந்ததாலேயே தமிழர்கள் அவற்றைப் பயன்படுத்தியுள்ளனர் என்று ஆய்வு செய்து தகவலை வெளியிட்டிருக்கிறார். உதாரணத்துக்கு இட்லியில் இருக்கும் உளுந்தும், மோதகத்தில் இருக்கும் பாசிப்பயிறும் குளுமையானது. வெப்பத்தைத் தணிக்கக்கூடியது. ஆகையால் இதைக் கருத்தில் கொண்டே இத்தகைய உணவுகளைச் சமைத்திருக்கின்றனர்; சாப்பிட்டு இருக்கின்றனர்.
மொத்தத்தில், ஒரு தமிழரின் உணவு விருந்தை எடுத்தால் முதலில் சோற்றோடு சாம்பார், புளிக்குழம்பு, ரசம், பாயசம், மோர் என வரிசைப்படுத்தியதில் மருத்துவ உண்மை இருக்கிறது. பல்வேறு ருசி, குணம் உள்ளிட்டவற்றை சமப்படுத்தவே இந்த முறையை தமிழர் கண்டுள்ளனர்’ என்று அடித்துக் கூறுகிறார், மாத்தளை சோமு. அதிலும் ரசம் என்பது தமிழர் விருந்து முறையில் முக்கியமானது.
நம் தமிழர்கள் உணவு உட்கொண்டது மட்டுமின்றி, விருந்தோம்பலிலும், பசித்தோருக்கு உணவு இடுவதிலும் முன்னோடிகளாய் இருந்திருக்கின்றனர். அந்த பழக்கவழக்கம் இன்றும் நம் ஊரில் தொன்றுதொட்டு வந்தாலும், இன்றைய தலைமுறையினர் பலர் மேலைநாட்டு உணவுகளுக்கே அடிமையாகி இருக்கின்றனர். அதன் விளைவு நோயால் பாதிக்கப்படுகின்றனர்.
உண்மையில் வெளிநாட்டு உணவால் முதலில் நோயை வாங்கும் இன்றைய தலைமுறையினருக்கு, அதைக் குணப்படுத்துவதற்கான மருந்துகளையும் வெளிநாட்டில் இருந்தே வாங்க வேண்டியதாகி இருக்கிறது. இதை ஒரு வியாபாரமாகவே பார்க்கும் மேலை நாடுகளால், கார்ப்பரேட் நிறுவனங்களால், நாம் அதற்கு அடிமையாவதுடன், நம் தமிழர் உண்ட உணவுகளையும், பாரம்பரியத்தையும் இழந்துவருகிறோம் என்பதுதான் வேதனையான விஷயம்.