முழுமையான போலீஸ் ஸ்டோரி
அரசியல் படுகொலை என்று தமிழகத்தையே கதிகலங்கச் செய்த ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட வழக்கை 90 நாட்களுக்குள் முடித்துக் காட்டி அசத்தியிருக்கிறது தமிழக காவல் துறை. 5000 பக்கம் கொண்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் ஆம்ஸ்ட்ராங் என்பவர் அரசியல்வாதியல்ல மட்டுமல்ல, லோக்கல் தாதா என்று அப்பட்டமாகத் தெரியவர, அவருக்குக் குரல் கொடுத்தவர்கள் வாயடைத்து நிற்கிறார்கள்.
இந்து நாளிதழ் வெளியிட்டுள்ள கொலை வழக்கின் முழு விபரம் இங்கே. திருவள்ளூரில் இருந்து சென்னைக்கு குடிபெயர்ந்த ஒரு குடும்பத்தின் ஒன்பதாவது பிள்ளை ஆம்ஸ்ட்ராங். ரயில்வே துறையில் வேலைக்கு சேரும் ஆர்வத்தில் சிறு வயதில் பாக்சிங் கற்றுக் கொண்டார். 2006ல் கவுன்சிலரான ஆம்ஸ்ட்ராங் திருப்பதியில் சட்டப் படிப்பு முடித்து வழக்கறிஞராக தொழில் செய்தார். 2007ல் பகுஜன் சமாஜ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். சில வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டு சரித்திர பதிவேடு குற்றவாளியாக காவல்துறையால் கருதப்பட்டவர், காலப்போக்கில் எல்லா வழக்குகளில் இருந்தும் தன்னை விடுவித்துக் கொண்டார். சமூக செல்வாக்கோடு சேர்ந்து எதிரிகளும் வளர்ந்தனர்
பெரியவர் என்று ஆம்ஸ்ட்ராங்கால் அழைக்கப்பட்ட வியாசர்பாடி நாகேந்திரன் ஒரு காலத்தில் வட சென்னையைக் கலக்கிய தாதா. 1997ல் நடந்த ஸ்டான்லி சண்முகம் கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு 25 ஆண்டுகளாக வேலூர் சிறையில் கழித்து வரும் நாகேந்திரன் அங்கிருந்த படியே ஸ்கெட்ச் போட்டு கொலை செய்வதில் வல்லவராகக் கருதப் படுகிறார். 2015ல் ஆம்ஸ்ட்ராங்கின் வலது கரமான தென்னரசுவைக் கொலை செய்த ஆற்காடு சுரேஷின் மூளையாகச் செயல்பட்டதாகக் கூறி சி.பி.சிஐடியால் கைது செய்யப்பட்டார் நாகேந்திரன்.
நாகேந்திரனின் மகன் அஸ்வத்தாமன் ஒரு வழக்கறிஞர் மட்டுமல்ல, காங்கிரஸ் கட்சியில் வளர்ந்து வந்ததோடு ரியல் எஸ்டேட் கட்டப் பஞ்சாயத்திலும் ஈடுபட்டு வந்தார். சேகர் என்பவர் சோழவரத்தில் 150 ஏக்கரில் பிளாட் போட்டு விற்பனை செய்ய முயன்றபோது அவரை மிரட்டி 10 ஏக்கரைப் பிடுங்க முயற்சித்தார். ஆம்ஸ்ட்ராங். இதில் தலையிட்டு சேகரை அஸ்வத்தாமன் மீது புகார் கொடுக்க வைத்தார். அப்போது போன் மூலம் ஆம்ஸ்ட்ராங்கைத் தொடர்பு கொண்ட நாகேந்திரன் கேட்டுக் கொண்டதின் பெயரில் புகாரை வாபஸ் பெற வைத்தார் ஆம்ஸ்ட்ராங்.
2024 நாடாளுமன்றத்தேர்தலில் திருவள்ளூர் (தனி) தொகுதியில் வேட்பாளராகக் களம் இறங்க நினைத்த அஸ்வத்தாமன் இதனால் பின் வாங்கும் நிலை ஏற்பட்டது. தன் அரசியல் கனவில் மண்ணள்ளிப் போட்டதற்கு ஆம்ஸ்ட்ராங்கைப் பழி வாங்க எந்த எல்லைக்கும் போக தந்தை – மகன் தயாரானார்.
சென்னைக் காவல் துறையின் ‘Most Wanted’ கிரிமினலான சம்பவ செந்திலுக்கும் ஆம்ஸ்டாங்கிற்குமானப் பகை 2005ல் தொடங்கியது. கீழ்ப்பாக்கத்தில் செந்திலின் தாயாருக்குச் சொந்தமான வீட்டில் கேபிள் டிவி தொழில் நடத்தி வந்த ஆம்ஸின் கூட்டாளிகள் வீட்டை காலி செய்வதற்காக 12 லட்சம் பணத்தை செந்திலிடம் மிரட்டிப் பிடுங்கினர்.
செந்திலுக்கும், நாகேந்திரனுக்கும் ஆம்ஸ்ட்ராங்குடன் தனித்தனியாக பகை இருந்தாலும் அவர்களை ஒன்றிணைத்தது ராஜா என்னும் விசாரணைக் கைதி. சிலை கடத்தல் வழக்கில் கைதான ராஜா சிறையில் நாகேந்திரனுடன் சில காலம் பழகிநண்பரனார். இந்த நட்பு தான் நாகேந்திரன் சிறையிலிருந்து போடும் ஸ்கெட்ச்களை வெளியிலிருந்து கூலிப்படை துணையோடு செந்தில் முடிக்கக் காரணமாக அமைந்தது. ஆம்ஸ்ட்ராங் கொலையும் இப்படி தான் நடந்தது எனக் காவல்துறை கருதுகிறது.
தென்னரசுவின் கொலைக்குப் பழி வாங்க ஆக.18, 2023 அன்று ஆற்காடு சுரேஷை ஒற்றைக்கண் ஜெயபால் கொலை செய்த போது அருகில் ஒரு காரில் தான் ஆம்ஸ்ட்ராங் இருந்ததாக ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலுவும் கூட்டாளிகளும் நம்பினர். எனவே, வழக்கறிஞர் அருள் உள்ளிட்ட ஏழு பேருடன் இணைந்து ஆம்ஸ்ட்ராங்கைத் தீர்த்துக் கட்ட முடிவு கட்டினார் பொன்னை பாலு. ஆம்ஸ்ட்ராங்கைக் கொலை செய்ய ஒரு கும்பல் திரிகிறது என்ற தகவல் அஸ்வத்தாமன் நாகேந்திரனின் காதுகளை எட்டியது.
ஏப்ரல் 9, 2024 அன்று வியாசர்பாடியில் உள்ள அஸ்வத்தாமனின் வீட்டில் ஆற்காடு சுரேஷின் உறவினரான வழக்கறிஞர் அருள் (எதிரி.எண்.3) உள்ளிட்ட குழு ஆம்ஸ்ட்ராங் கொலைக்கான திட்டத்தை விவாதித்தது. சிறையில் இருக்கும் தந்தையுடன் கலந்தோசிக்க நாள் குறித்தார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கல்லீரல் சிகிச்சைக்காக நாகேந்திரன் வருவது வழக்கம். அப்படி ஏப்ரல் 20 அன்று வந்து வேலூர் சிறைக்குத் திரும்பும் வழியில் வாலாஜாவில் உள்ள உணவகத்தில் வண்டி நின்றது. வண்டியைத் தொடர்ந்து சென்ற அஸ்வத்தாமன் உணவகத்தில் தந்தையுடன் இணைந்து அருளுடன் போனில் பேசினர். இன்னும் 3 மாதத்திற்குள் கொலைக்குத் தேவையான நிதி தரப்படும் என உறுதி அளித்தனர்.
அவர்கள் பதிலுக்கு கேட்டது ஒன்றே ஒன்று தான். “என்ன நடந்தாலும் எங்கள் பெயரை வெளியில் சொல்லக் கூடாது. இது ஒரு பழிக்குப் பழி கொலை என்ற தோற்றத்தை ஏற்படுத்த வேண்டும். ஆம்ஸ்ட்ராங் உடன் முன் பகை இருந்த சம்பவ செந்திலுக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. வெளிநாட்டில் இருந்து இண்டர்நெட் கால் மூலமாக அருளைத் தொடர்பு கொண்டு பேசினார் சம்பவ செந்தில். இதற்கு உதவியாக இருந்தது த.ம.கா வழக்கறிஞர் ஹரிஹரன். நாட்டு வெடிகுண்டுகளும், பணமும் தருவதாகஉறுதியளிக்கப்பட்டது.
பேசியது போலவே மொட்டை கிருஷ்ணன் என்பவர் மூலம் 4 லட்ச ரூபாய் கைமாறியது. வெட்டும் போது ஆம்ஸ்ட்ராங் தப்பிக்க நினைத்தால் பயன்படுத்த வாங்கிய குண்டுகளை சம்பவ இடத்தில் போலீஸ் கைப்பற்றியது. ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடி 10 சவரன் வளையல்களை அருளிடம் கொடுத்து உதவினார். இவை 3.56 லட்சத்திற்கு திருநின்றவூரில் உள்ள அடகுக் கடையில் வைக்கப்பட்டன. சுரேஷின் காதலியான புளியந்தோப்பு அஞ்சலை (முன்னாள் பாஜக + கஞ்சா வியாபாரி)யும் இந்த கொலைச் சதிக்குஉதவியதாகக் கூறப்படுகிறது. பலரை மிரட்டி கந்து வட்டித் தொழிலும் செய்து வந்த அஞ்சலை சுரேஷின் மரணத்திற்கு பிறகு எதிர்ப்புகளைச் சமாளிக்க முடியாமல் அவதிப்பட்டதால் இதைச் செய்தார் என்று காவல்துறை கருதுகிறது. மறைந்த ரவுடி தோட்டம் சேகரின் மூன்றாவது மனைவியான வழக்கறிஞர் மலர்க்கொடி
வெறும் பழிக்குப் பழி கொலையாகத் தோற்றமளித்த சம்பவத்தை 17 தனிப்படைகள் அமைத்து, தொழில்நுட்ப உதவியுடன் நேர்த்தியான வகையில் விசாரணையை நடத்தி குறிப்பிட்ட நாட்களுக்குள் குற்றப்பத்திரிக்கையைத் தாக்கல் செய்தது சென்னை பெருநகர காவல்துறை. ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்யப் பயன்படுத்திய ஆயுதங்களின் பயணம் ஒரு சினிமா ஸ்க்ரிப்டை மிஞ்சிவிடும். கொலையாளிகள் சம்பவ இடத்தில் விட்டுச் சென்ற நாட்டு வெடிகுண்டுகள் சம்பவ செந்திலின் கூட்டாளி புதூர் அப்புவால் வாங்கப்பட்டு ஒரு கருப்பு நிற லன்ச் பாக்சில் கோடம்பாக்கத்தில் உள்ள ஒரு கோடவுனில் வைக்கப்பட்டன.
அங்கிருந்து பைக் மூலம் ஓமந்தூரார் அரசு மருத்துவமனை பார்க்கிங்கிற்கு எடுத்துச் செல்லப்பட்டன. துப்புரவுத் தொழிலாளி ஒருவர் ஓட்டிச் சென்ற அந்த பைக்கின் நம்பர் பிளேட்டில் சந்தனம் தடவப்பட்டது. எந்த கேட்டில் போனால் செக்யூரிட்டையைத் தவிர்க்கலாம் எனஇன்னொரு குற்றவாளி போனில் தகவல் தெரிவித்தார். மருத்துவமனை வளாகத்தில் ஹரிஹரனும், மொட்டை கிருஷ்ணனும் லன்ச் பாக்ஸைப் பெற்றுக் கொண்டு உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்குச் சென்றனர். அங்கிருந்து “3 மணிக்கு உயர்நீதிமன்றத்தில் கேஸ் கட்டைப் பெற்றுக் கொள்ளவும்” என்று அருளுக்கு மெசேஜ் அனுப்பினார்.
3 மணிக்கு பொலீரோ ஜீப்பில் வந்த அருள் நாட்டு வெடிகுண்டு உள்ளிட்ட ஆயுதங்களைப் பெற்றுக் கொண்டார். அவை அங்கிருந்து கொடுங்கையூரில் உள்ள கிரேஸ் பவுண்டேஷன் என்ற போதை மறுவாழ்வு மையத்தில் (மூடப்பட்டது) வைக்கப்பட்டன. அந்த மையமே அவர்கள் பகலில் சந்திக்கும் இடமாகப் பயன்படுத்தப்பட்டது. இரவில் தங்க 6 ஆயிரம் ரூபாய் வாடகையில் ஒரு வீடு எடுக்கப்பட்டது. இது தவிர திருநின்றவூரில் ஆற்காடு சுரேஷ் நடத்தி வந்த ஒரு சூதாட்ட மையத்தில் இருந்த கத்தி, அரிவாள் போன்றவற்றை ஒரு குற்றவாளி அருளிடம் ஒப்படைத்தார். அவை, திருநின்றவூரில் உள்ள பவானி அம்மன்கோவில் பின்புறம் மறைத்து வைக்கப்பட்டு பின்னர் கொடுங்கையூர் போதை மறுவாழ்வு மையத்திற்கு கொண்டு வரப்பட்டது.
ஆம்ஸ்ட்ராங் நடமாட்டங்கள் கண்காணிப்பு: பொன்னை பாலு, அருள், மணிவண்ணன் உள்ளிட்ட ஆறு பேர் ஆம்ஸ் நடமாட்டங்களைக் கண்காணிக்கத் தொடங்கினர். ஆம்ஸ்ட்ராங் கட்டி வந்த வீட்டிற்கு அருகில் குடியிருந்த பிரதீப் என்ற இளைஞர் வேவு பார்க்க பணிக்கப்பட்டார். போலியான பெயர்களில் சிம் கார்டுகள் வாங்கி அதில் ஒன்றை பிரதீப்பிற்கு கொடுத்தனர். சம்பவம் நடந்த ஜூலை 5 அன்று பாலுவிற்கு போன் செய்த பிரதீப் “இன்று காலை வந்து சென்று விட்டார். மாலை மீண்டும் வருவார்” எனத் தகவல் சொன்னார். உணவு டெலிவரி செய்யும் ஊழியர்களின் யூனிபார்மில் வேவு பார்த்து வந்த கொலையாளிகள், சம்பவ தினத்தன்றும் அதே சீருடையில் வந்தனர். சின்ன சந்துகள் நிறைந்த அந்த பகுதியில் உள்ளே நுழையவும் வெளியேறவும் உள்ள எல்லா வழிகளையும் கொலையாளிகள் ஏற்கனவே ஸ்கெட்ச் போட்டு வைத்திருந்தனர்
ஸ்கெட்ச் போட்டபடியே திட்டத்தை வெற்றிகரமாக நிகழ்த்திய கொலையாளிகள் போன்களை கொசஸ்தலையார் ஆற்றல் வீசி எறிந்தனர் (இவை ஜூலை 20 அன்று தீயணைப்பு படை உதவியுடன் ஆற்றிலிருந்து மீட்கப்பட்டு குஜராத்தில் உள்ள தடயவியல் பரிசோதனை மையத்திற்கு அனுப்பபட்டு அவற்றிலிருந்து மின்னணு சாட்சியங்கள் கைப்பற்றப்பட்டன. அவற்றின் உதவியுடன் குற்றச் செயலில் தொடர்புடையவர்கள் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டனர். எதிரிகள் மீதி கொலை, குற்றச்சதி, வெடி பொருட்கள் தடைச் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிகை எழும்பூர் 5வது மேஜிஸ்டிரேட் முன்பு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மெகா விசாரணையை சட்டம் அனுமதிக்கும் 90 நாட்களுக்குள் சென்னை காவல்துறை சாதித்திருக்கிறது.
கூடிய விரைவில் செஷன்ஸ் நீதிமன்றத்திற்கு இந்த விசாரணை மாற்றப்படும். இன்னும் பிடிபடாத செந்தில், கிருஷ்ணகுமார், அப்பு ஆகியோர் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்படுகிறது. தலைநகரை உலுக்கிய இந்த வழக்கில் விரைவில் நீதி கிடைக்கும் என நம்புகிறோம்