சர்வரோக நிவாரணி கறிவேப்பிலை

Image

தூக்கி கீழே போடாதீங்க

இந்தக் கட்டுரையை முழுமையாக படிக்கும் நபர்கள், சாப்பிடும் முறையில் நிச்சயம் ஒரு மாற்றம் வரும் என்று உறுதியாகக் கூறலாம். ஆம், இதுவரை சாப்பாட்டு தட்டில் கறிவேப்பிலையைப் பார்த்தவுடன், ஓரமாக தூக்கிப் போடுபவராக இருப்பவர்கள், இனி அப்படிச் செய்ய மாட்டார்கள்.  

சமையல் வாசனைக்கு மட்டுமே கறிவேப்பிலை பயன்படுகிறது என்று பலரும் நினைக்கிறார்கள். உண்மையில், அது சர்வரோக நிவாரணி ஆகும். ஆம்,. பச்சையாக சாப்பிட்டால் கசப்பது போல் இருக்கும் கறிவேப்பிலையை,  இளம் சூடான எண்ணெயில் போடும் போது தான் அதன் சுவையும், மணமும் அதிகரிக்கும். பல மருத்துவ குணங்களைக் கொண்டது தான் கறிவேப்பிலை. இதன் நன்மைகள் முழுவதும் தெரியதாவர்கள் தான், கறிவேப்பிலையைத் தூக்கி குப்பையில் போடுவார்கள். இனி, அதன் மருத்துவக் குணங்களைப் பார்க்கலாம்.  

புற்றுநோய்க்கு எதிரி

கறிவேப்பிலை புற்றுநோயை ஆரம்ப கட்டத்திலேயே  கொல்லும் ஆற்றல் உடையது என்பதை அண்மையில் ஆஸ்திரேலிய உணவியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர். ஆம், நியூட்ரிசன் சைன்டிஸ்ட் ஆப் சிசைய்ரோ என்பது ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம். மசாலாப் பொருட்கள் நல்ல வாசனை உடையது மட்டுமல்ல அது பல மருத்துவ குணங்களை கொண்டது என்பதை அந்நிறுவனம் கண்டறிந்துள்ளது.

இந்நிறுவன தலைமை ஆராய்ச்சியாளர் லனேகோபியாக் கறிவேப்பிலை சிறந்த ஆண்டி ஆக்ஸிடென்டாக இயங்குகிறது என்கிறார். இது புற்றுநோய்,இதய நோய்களை குறைக்கும் ஆற்றல் கொண்டது. மேலும் கறிவேப்பிலையால் ஞாபக சக்தி எளிதில் கிடைக்கிறது என்கிறார் .

சாதாரணமாக 100 கிராம் கறிவேப்பிலையை அரைத்து சாற்றை எடுத்து 100கிராம் தேங்காய் எண்ணையில் கலந்து இதமான சூட்டில் ஈரப்பதம் நீங்கும் வரை காய்ச்சி தினசரி தலைக்கு தேய்த்து வந்தால் உடல் உஷ்ணம் மங்கும். பரம்பரை நரை வராது. கண்பார்வை குறைவு ஏற்படாது. கறிவேப்பிலையை அரைத்து சாப்பிட்டால் நுரையீரல், இருதய சம்பந்தப்பட்ட ரத்த சம்பந்தப்பட்ட நோய்கள் வருவது குறையும் என்றும் கூறுகிறார்.

அதே போன்று நீரிழிவு நோயாளிகள் காலையில் 10 கறிவேப்பிலை இலையையும்,மாலையில் 10 இலையையும் பறித்த உடனேயே வாயில் போட்டு மென்று சாற்றை விழுங்கி வந்தால் மாத்திரை சாப்பிடும் அளவை பாதியாக குறைத்து விடலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

கறிவேப்பிலை  நன்மைகள்:

  • இதில் நார்சத்து, வைட்டமின், மினரல் ஆகியவை அடங்கியுள்ளன.
  • கறிவேப்பிலை செரிமானத்திற்கு மிகவும் உதவும்.
  • இளநரையை தடுக்கும் ஆற்றலும், தலைமுடியை வளரவைக்கும் தன்மையும் உண்டு.
  • தினசரி வெறும் வயிற்றில் கறிவேப்பிலை இலையை 3 மாதங்கள் சாப்பிட்டு வந்தால் உடல் பருமனாவது குறைக்கப்படும்..
  • சிறுநீரில் சர்க்கரை வெளியேறுவதும் முற்றிலும் தடை செய்யப்படும்.
  • கறிவேப்பிலை ரத்தத்தில் இருக்கும் கொழுப்பை குறைக்கவும், அறிவை பெருக்கவும் உதவுகிறது.
  • கறிவேப்பிலையை பச்சையாகவே மென்று தின்றால் குரல் இனிமையாகும். சளியும் குறையும்.
  • மலச்சிக்கலை தவிர்த்து, தேவையான பசியைத் தூண்டும் வேலையையும் கறிவேப்பிலை செய்கிறது. பித்தத்தைத் தணித்து உடல் சூட்டை ஆற்றும்.
  • கறிவேப்பிலைக் கீரை மனதுக்கு உற்சாகத்தையும் கொடுக்க வல்லது.
  • குமட்டல், சீதபேதியால் உண்டான வயிற்று உளைச்சல், நாட்பட்ட காய்ச்சல் ஆகியவற்றைக் கறிவேப்பிலை குணப்படுத்தும்.
  • பித்த மிகுதியால் உண்டாகும் பைத்தியத்தைக் குணப்படுத்த கறிவேப்பிலை உதவுகின்றது.
  • வாந்தி, நாக்கு ருசியற்றுப் போதல், வயிற்றோட்டம், சாப்பிட்டவுடன் மலங்கழிக்கும் உணர்வு, பசியற்ற நிலை, சளி ஆகியவற்றைக் கறிவேப்பிலை குணப்படுத்தும்.
  • கண்கள் ஒளி பெறவும், முடி நரைக்காமலிருக்கவும், மேனி எழில் பெறவும் கறிவேப்பிலை உதவுகின்றது.
  • கறிவேப்பிலைச் சாறு இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களைப் பலப்படுத்துகிறது. பத்திய உணவு சாப்பிடுபவர்கள் கறிவேப்பிலைத் துவையலை சேர்த்துக்கொள்வது நல்லது.

இத்தனை மருத்துவ குணங்கள் இருப்பதால்தான், எந்த உணவானாலும் கடைசியாக அவற்றை தாளிக்கும் தருணத்தில்,ஒன்றிரண்டு கறிவேப்பிலைகளை கிள்ளிப் போட்டு இறக்கி வைப்பதை நம் முன்னோர்கள் கடமையாக வைத்திருந்தார்கள்.  

கறிவேப்பிலையை ஏன் தாளிக்கிறோம்..?!

கறிவேப்பிலையை எண்ணெயுடன் சேர்த்து (Lipophilic) சாப்பிடும்போது அதன் வேதிப்பொருட்கள் முழுமையாக உடலைச் சென்றடையும். கறிவேப்பிலையைத் தாளிதம் செய்யும்போது மிக லேசாக எண்ணெயில் வதக்க வேண்டும். இல்லை எனில் இதில் உள்ள பீட்டா கரோட்டின் ஆவியாகி பலன் இல்லாமல் போய்விடும்.

‘கறிவேப்பிலையையும் கடுகையும் ஒன்றாகச் சேர்த்து தாளிப்பதினால் நன்மை உண்டா?’ என்பதுகுறித்து திருவனந்தபுரத்தில் உள்ள கேரளா பல்கலைக்கழக மருத்துவக் குழுவினர் ஆய்வு செய்தனர். இதில் கறிவேப்பிலையும் கடுகும் இணைந்து உடலில் உள்ள திசுக்களை அழிவில் இருந்து பாதுகாப்பதாகவும் நச்சுத் தன்மையை ஏற்படுத்தும் ஃப்ரீ ராடிக்கல்ஸ் (Free radicals) உருவாவதைத் தடுப்பதாகவும் கண்டுபிடித்து உள்ளனர். உடல் எடையை அதிகரிக்க விரும்புபவர்கள் கறிவேப்பிலையும் பொட்டுக்கடலையும் சம பங்கு கலந்து, பொடியாக்கிப் பசு நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து சாப்பிட்டுவரலாம்

இன்னொரு வகையில் கறிவேப்பிலைச் சட்னி உடலுக்கு நன்மை தரக்கூடியது.

கறிவேப்பிலையுடன் சிறிது உளுந்து மற்றும் வெந்தயத்தை வறுத்து மிக்ஸியில் போட்டு அரைத்து, மிளகாய் மற்றும் தேவையான உப்பைச் சேர்த்து சட்னியாக செய்து இட்லி, தோசை போன்றவற்றுக்கு தொட்டு சாப்பிடலாம்.கறிவேப்பிலை சட்னி சுவையைத் தருவதுடன் உடல் எடையை சீராக வைப்பதிலும் முக்கியப் பங்காற்றுகிறது.

கறிவேப்பிலையையும், பச்சைக் கொத்தமல்லியையும் சேர்த்தும் இதுபோன்று துவையல் அரைத்து சாப்பிடலாம். கறிவேப்பிலையைப் போலவே, மல்லி இலையும் ஜீரண சக்திக்கு முக்கியப் பங்காற்றக்கூடியது.

Leave a Comment