டீன் பிள்ளைகளுக்கு முகப்பரு வில்லன்

Image
  • டாக்டர் எஸ்.கே.ராமசுப்பிரமணியம்

எல்லோருடைய முகமும் கண்ணாடி போன்று பளபளவென மின்னுவதாகவும், தன்னுடைய முகம் மட்டும் முகப்பரு எனும் மோசமான வில்லனால் கோரமாக காட்சியளிப்பதாகவும் அத்தனை டீன் ஏஜ் பிள்ளைகளும் கவலைப்படுகிறார்கள். இதற்கு ஹோமியோபதியில் எளிய தீர்வு சொல்கிறார் மருத்துவர்.

இன்றைய டீன் ஏஜ் பெண் பிள்ளைகள் மட்டுமின்றி பையன்களும் முகப்பருவுக்கு அளவுக்கு மீறி முக்கியத்துவம் கொடுத்து ரொம்பவே கவலைப்படுகிறார்கள். சின்னதாக முகப்பரு தோன்றியதும் தன்னுடைய அழகு கெட்டுவிட்டதாக நினைக்கிறார்கள். எல்லோரும் தன்னுடைய முகத்தைப் பார்த்து சிரிப்பதாக நினைத்து தாழ்வு மனப்பான்மை அடைகிறார்கள். மற்றவர்களுடன் கலந்து பேசுவதற்கு கூச்சப்பட்டு விலகுகிறார்கள்.

சோப்பை மாற்றி, ஷாம்பூவை மாற்றி, முகத்தில் பல்வேறு க்ரீம்களைத் தடவி, அவ்வப்போது தொட்டுப் பார்த்து சின்னதாக இருக்கும் பருவை பெரிதாக மாற்றி, தழும்பாக்கி விடுகிறார்கள்.

பரு ஏன் உருவாகிறது என்பதை டீன் ஏஜ் வயதினர் நன்கு புரிந்துகொள்ள வேண்டும். சருமத்திற்குக் கீழே செபேசியஸ் எனப்படும் சுரப்பிகள் ஒரு வகையான சீபத்தை சுரக்கின்றன. இதுவே சருமத்தை வறட்சி அடையாமல் பாதுகாக்கும் எண்ணெய் பசை. டீன் வயதினருக்கு ஆண்ட்ரோஜன் சுரப்பு தொடங்கும் நேரத்தில், அது சீபத்தையும் அதிகமாகச் சுரக்கச்செய்கிறது. இதனால் முகத்தில் எண்ணெய்ப் பசை அதிகம் சுரக்கிறது. இதில் தூசுக்கள், அழுக்கு படியும்போதும் பாக்டீரியா பாக்டீரியா தொற்று ஏற்படுவதாலும் சீழ் பிடிக்கிறது.

இதனால் பருக்கள் மட்டுமின்றி மருக்கள், தோல் சிவத்தல், முடிச்சுகள், கரும்புள்ளிகள் போன்ற பிரச்னைகளும் உண்டாகிறது. கிட்டத்தட்ட 93 சதவீத டீன் வயதினருக்கு ஹார்மோன் சுரப்பு காரணமாகவே முகப்பருக்கள் தோன்றுகின்றன. இவர்களில் சுமார் 9 சதவீதம் பேர் தோல் நோயினாலும் பாதிக்கப்படுகிறார்கள்.

ஆங்கில மருத்துவத்தில் உடலின் வெளிப்பகுதியில் ஏற்படும் மாற்றங்களுக்கு மட்டுமே மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. ஆனால், ஹோமியோபதி சீரம் சுரப்பு மற்றும் ஆண்ட்ரோஜன் சுரப்புகளை சரியான விகிதத்தில் சுரக்கச் செய்து முகப்பரு வருவதைக் கட்டுப்படுத்த முடியும்.

பொதுவாக முகப்பருவை தொந்தரவு செய்யாமல் இருந்தால் தானாகவே சில நாட்களில் மறைந்துவிடும். ஆனால், முகப்பருவை பார்த்ததும் பயந்து அடிக்கடி தொட்டுப் பார்க்கும் உணர்வு தோன்றுவதால் அது பெரிதாகி வலி, நமைச்சல், அரிப்பு, எரிச்சல் உண்டாகிறது.

பொதுவாக எரிச்சல் இல்லாத பருக்களுக்கு தீவிர சிகிச்சை தேவைப்படுவதில்லை. அதேநேரம் நாட்பட்ட பருக்கள் கொப்புளமாக அல்லது புண்ணாக மாறி வலியும் வேதனையும் இருந்தால் தீவிர மருத்துவ சிகிச்சை அவசியம்.

ஹோமியோபதியில் ஒவ்வொரு நபருக்கும் ஏற்பட்டிருக்கும் பாதிப்புக்கு ஏற்ற வகையில் சொரினம், பல்சதிலா, கால்கேரியா கார்ப், சல்பர், அர்னிகா போன்ற பல்வேறு மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. மூன்று வார காலத்தில் தீர்வு காண முடியும்.

பொதுவாக ஹார்மோன் சுரப்பு பருக்களுக்கு முக்கியமான காரணம் என்றாலும் அதிகப்படியான இனிப்பு எடுத்துக்கொள்பவர்கள், பாட்டில் குளிர்பானம் அருந்துபவர்கள், பால் உணவுகள் மற்றும் எண்ணெய்யில் பொறித்த உணவு நிறைய சாப்பிடுபவர்கள் மிக அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். தைராய்டு குளறுபடி, மாதவிடாய் குளறுபடி உள்ளவர்களுக்கும் பருக்கள் உருவாகின்றன.

இந்த பிரச்னைகளுக்கு ஹோமியோபதி மருந்துகளும் தேவைப்பட்டால் மேற்பூச்சு க்ரீம்களும் மருத்துவர்கள் வழங்குவார்கள். இவற்றை மட்டும் போட்டுக்கொண்டாலே போதும். முகப்பரு இருப்பவர்கள் அடிக்கடி முகத்தைக் கழுவ வேண்டும் என்பது அவசியம் இல்லை. அடிக்கடி கழுவுவதன் காரணமாக முகப்பருவின் நிலை மோசமடையவே செய்யும். 

பருக்களில் இருக்கும் சீழை அகற்றிவிட்டால் குணமாகிவிடும் என்று சிலர் பருவை நசுக்குவதும் மோசமான பின் விளைவையே உருவாக்கும். அதுபோல் தவறான சன்ஸ்க்ரீன் போடுவதும் முகப்பருவுக்கு ஒரு காரணமாக இருப்பதுண்டு. எனவே, தோலுக்கு ஏற்ற சன்ஸ்க்ரீனை தேர்ந்தெடுத்து பயன்படுத்த வேண்டும். அதேநேரம் முகத்திற்கு போதிய அளவு தூய்மையான காற்றும், சூரிய ஒளியும் தேவை. இளம் வெயில் முகத்திற்கு நன்மை செய்கிறது.

முகப்பருக்கள் வராமல் தடுப்பதற்கு எந்த மருந்தும் கிடையாது என்றாலும் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுபவர்களுக்கு முகப்பரு வருவது குறைவாகவே இருக்கிறது. எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய வகையில் தானியங்கள், பழங்கள்,​ காய்கறிகள்,​ கீரை வகைகளை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும். தினமும் இரண்டு லிட்டருக்குக் குறையாமல் தண்ணீர் குடிக்க வேண்டும். நார்ச்சத்து நிறைந்த பொருட்கள் சாப்பிட வேண்டும். ஏனென்றால், அஜீரணக் குறைபாடு மற்றும் மலச்சிக்கலும் அழையாத விருந்தாளியாக முகப்பருவை வரவழைக்கக் கூடியவை.

கொழுப்பு நிறைந்த அசைவ உணவுகளையும், நெய், வெண்ணெய், கேக், ஐஸ்கிரீம், சாக்லேட், பாலாடை போன்றவற்றையும் தவிர்ப்பது நல்லது. பாட்டில் குளிர் பானங்களை முழுமையாகத் தவிர்ப்பது நல்லது.

முகப்பரு இருப்பதும் ஒரு அழகு என்று அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்துடன் இந்த பிரச்னையை அணுகுவது நல்லது. முகப்பரு எப்படி வந்ததோ அப்படியே போய்விடும். எனவே, நம்பிக்கையுடன் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.

மருந்துகள் எடுத்துக்கொண்ட அடுத்த சில தினங்களிலே பருக்கள் மறைய வேண்டும் என்று கனவு காணாமல், குறிப்பிட்ட காலம் காத்திருக்க வேண்டும். தொடர்ந்து மருந்து உட்கொள்வது, நல்ல ஆரோக்கிய உணவுகளை உட்கொள்வது, மனதை லேசாக வைத்துக்கொள்வது போன்ற அனைத்தும் பருக்களை விரட்டும் வழியே ஆகும்.

தொடர்புக்கு : 9841108754