பித்ருக்களை தூக்கி குப்பையில் போடு..!

Image
  • மந்திரங்கள் அல்ல மாயை

ஞானகுருவை சந்திக்க வந்தார் மகேந்திரன். ‘’குருவே, இன்று நான் பித்ருகளுக்கு குறிப்பாக தாய்க்கு மகன் அளிக்க வேண்டிய 16 பிண்டங்கள் பற்றியும், அப்போது சொல்லப்படும் ஸ்லோகங்களின் அர்த்தத்தையும் கேட்டேன். என்னையும் அறியாமல் கண்ணில் நீர் வந்துவிட்டது. ஆனால், நீங்கள் என்னவென்றால், செத்தவர்களைப் பற்றி கவலைப்படாதே, இருப்பவர்களை மட்டும் பார்த்தால் போதும் என்கிறீர்கள். பெற்ற தாய்க்கு இப்படி மரியாதை செய்வதில் என்ன தவறு?’’ கோபமாகவே கேட்டார்.

‘’மகேந்திரா… நீ இப்போது செய்யும் வேலைக்கு ஒவ்வொரு மாதமும் சம்பளம் வாங்குகிறாய். அப்படி இல்லாமல், இந்த பிறவியில் எனக்கு வேலை செய்,  அடுத்த பிறவியில் சம்பளம் தருகிறேன் என்று சொன்னால் சம்மதிப்பாயா..?’’ ஞானகுரு கேட்டார்.

’’அது எப்படி முடியும்..? எனக்கு இப்போதைய வாழ்வுக்கு ஆதாரம் வேண்டும் என்றுதானே வேலை செய்கிறேன்…’’

‘’அப்படித்தான் உயிருடன் இருக்கும் பெற்றோருக்கு எப்படியெல்லாம் உதவ முடியுமோ, அப்படியெல்லாம் உதவி செய்யலாம். அது தவறில்லை. ஆனால், பெரும்பாலான மனிதர்களுக்கு, முதிய வயதில் பெற்றோர் உயிருடன் இருப்பது சுமையாகத்தான் தெரிகிறது. அவர்களே செத்த பிறகு பிள்ளைக்கு ஞானம் வந்துவிடுகிறது. உடனே பெற்றோரை போற்றுவது போன்று, பித்ருகளுக்கு பிண்டம் வைக்கிறேன், உதவி செய்கிறேன் என்று நடிக்கிறார்கள். இதனால், பித்ரு பூஜை செய்யும் பிராமணனைத் தவிர வேறு யாருக்கும் எந்த நன்மையும் கிடையாது. எனவே, செத்துப் போன பித்ருக்களை குப்பையில் போட்டுவிடு… உன் பெற்றோர் போன்ற வயதில் உள்ளவர்களுக்கு உன்னால் முடிந்த வரையிலும் ஆதரவாக இரு… சின்னச்சின்ன உதவிகள் செய். அதுதான் செத்துப்போன பெற்றோருக்கு நீ செய்ய வேண்டிய கடமை..’’ என்றார் ஞானகுரு.

‘’நீங்கள் சொல்வதும் சரியாகத்தான் இருக்கிறது. ஆனாலும், எனக்காக தாய்க்கு மகன் அளிக்கும் 16 பிண்டங்களுக்கான மந்திரங்களையும் சொல்லட்டுமா… அவற்றை மாத்ரு ஷோடஸி என்கிறார்கள்…’’ என்றதும் புன்னகைத்து அனுமதி கொடுத்தார் ஞானகுரு.

1. கர்பஸ்ய உத்கமநே துகம் விஷமே பூமி வர்த்மநி |

 தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

”கொஞ்சமா நஞ்சமா  நான்  உன்னை  படுத்தியது.  ஒரு பத்து மாத காலம்  எப்படியெல்லாம் உன்னை உதைத்திருக்கிறேன். என்னையும் சுமந்தபடி மேடும் பள்ளமுமாக  நீ அலைந்தாயே. நான் கொடுத்த கஷ்டத்தை துளி கூட  நீ  பொருட்படுத்த வில்லை. என்னை திட்டவில்லையே. சந்தோஷமாக  என்னை உள்ளே அடக்கிய  உன் வயிறை எண்ணற்ற முறை ஆசையாக  தடவி கொடுத்தாயே.   இதோ நான் செய்த பாவங்களுக்காக  உனக்கு இந்த முதல் பிண்டம். பரிகாரமாக ஏற்றுக்கொள்வாயா?

2.   மாஸி மாஸி க்ருதம் கஷ்டம் வேதநா ப்ரஸவே ததா |

  தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

”ஏன்  சோர்ந்து போயிருக்கிறாய். உன் பிள்ளை உள்ளே  படுத்துகிறானா? பிரசவ காலம்  கஷ்டமானது தான்.  மாசா மாசம் நான் வளர வளர  உனக்கு  துன்பத்தை தானே  அதிகமாக  கொடுத்துக் கொண்டே வந்தேன்.  இந்தா அதற்கு பரிகாரமாக  நான்  இடும் இந்த இரண்டாவது பிண்டம். ஏற்றுக்கொள் அம்மா.

3.     பத்ப்யாம் ப்ரஜாயதே புத்ரோ ஜநந்யா: பரிவேதநம் |

  தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

அம்மா,  நான்  அளித்த வேதனையில் நீ  பல்லைக்  கடித்துக்கொண்டு  பொறுத்துக்கொண்ட தாங்கமுடியாத  துன்பம்  நான் உன்னை வயிற்ருக்குள் இருந்தபோது உதைத்தது தானே.  அதற்காக ப்ராயச்தித்தமாக  இந்த 3வது  ஸ்பெஷல்  பிண்டம் உனக்கு. என் தாயே. 

4.     ஸம்பூர்ணே தசமே மாஸி சாத்யந்தம் மாத்ருபீடநம் |

  தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

”அம்மா,  இந்த 4 வது பிண்டம்  உனது பூரண கர்ப காலத்தில் நீ என்னால் பட்ட  வேதனைக்காக  — ஒரு பரிசு —  என்றே  ஏற்றுக்கொள். என்னைப் பொருத்தவரை  எனது பிராயச்சித்தம் என்று நான்  இடுகிறேன். 

5.     சைதில்யே ப்ரஸவே ப்ராப்தே மாத விந்ததி துஷ்க்ருதம் |

 தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் |

”ஏண்டி  மூச்சு  விடறது கஷ்டமாக இருக்கா. கொஞ்ச காலம் தான்  பொறுத்துக்கோ” .என்று  உன்  உறவுகள், நட்புகள் கேட்குமே. அவ்வாறே  மனமுவந்து நான்  விளைத்த துன்பத்தை, வேதனையை  நீ தாங்கினாயே. அதற்கு பரிகாரம் தான்  இப்போது என் கையில் நான் தாங்கும் இந்த  ஐந்தாவது பிண்டம். ஏற்றுக்கொள் என் அருமைத் தாயே.”

6.   ‘ பிபேச்ச கடுத்ரவ்யாணி க்வாதாநி விவிதா நி ச|

  தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

”குழந்தை வயித்திலே இருக்கும்போது இதெல்லாம் எனக்கு வேண்டாம்.  அப்புறமா  சாப்பிடறேன்”  என்று  உனக்கு பிடித்ததை எல்லாம் கூட வேண்டாமே என்று உதறினாயே. எனக்காகவே பத்தியம் இருந்தாயல்லவா. நான்  நோயற்று வளர, வாழ  எத்தனை  தியாகம் செய்தாய். நான் உனக்கு செய்த பாவத்திற்கு தான்  இந்த ஆறாவது பிண்டம். அம்மா  இதற்கு மேல் என்னால் என்ன செய்ய முடியும் சொல்?’

7.    அக்நிநா சோஷயேத்தேஹம்  தரிராத்ரோ போஷணேந |

  தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

”நான்  குவா குவா  என்று பேசி  பிறந்து சில நாட்கள் தான் ஆகிறது. அப்போது  நீ  பசியை அடக்கி  வெறும் வயிற்றோடு  எத்தனை நாள் சரியான  ஆகாரம் இன்றி தூக்கமின்றி வாடினாய். எனக்கு மட்டும்  பால் நேரம் தவறாமல்  கிடைத்ததே.  அந்த  துன்பத்தை நான் உனக்கு கொடுத்ததற்கு பரிகாரம் தான் இந்த  7வது பிண்டம்..\

8.     ராத்ரௌ மூத்ரபுரீஷாப்யாம் க்லிந்ந: ஸ்யாந்மாத்ரு கர்பட |

  தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

இப்போது நினைத்தாலும்  சிரிப்பு வருகிறது. கண்ணில் நீரும் சுரக்கிறது. எத்தனை இரவுகள் அசந்து தூங்கும் உன் புடவையை  ஈரம் பண்ணியிருக்கிறேன். படவா என்று செல்லமாக தானே  சிரித்துக்கொண்டே  வேறு துணி எனக்கும்  மாற்றினாய். இதற்கு நான்  உனக்கு இடும் கைம்மாறு தான் இந்த  8 வது பிண்டம். இதையாவது ஈரமில்லாமல் தருகிறேனே. \

9.  ”தயா விஹ்வலே புத்ரே மாதா ஹ்யந்தம் ப்ரயச்ச தி |

 தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

”நான்  சுகவாசி.  எனக்கு  எப்போது தாகம், பசி,  தூக்கம்,  எதுவுமே தெரியாது.நீ  தான் இருந்தாயே, பார்த்து பார்த்து அவ்வப்போது, எனக்காக  நீ  இதெல்லாம் செய்தாயே.  இந்த  பெரிய மனது பண்ணி என்னை  வளர்த்த  உனக்கு நான் எவ்வளவு துன்பம் தந்திருக்கிறேன். அதற்காக பிராயச் சித்தமாக இந்த  9வது பிண்டம். 

.

10.   திவாராத்ரௌ ஸதா மாதா ததாதி நிர்பரம் ஸ்தநம் |

 தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

”ஒரு சின்ன செல்ல  தட்டு  என்  மொட்டை மண்டையில்.  ”கடிக்காதேடா..” .  நான்  பால் மட்டுமா  உறிஞ்சினேன்.  என்  சிறு பல்லால் உன்னை கடித்தேனே. வலித்ததல்லவா உனக்கு.  இந்தா  அதற்காக  ப்ளீஸ்  இந்த பிண்டத்தை ஏற்றுக்கொள் அம்மா

11.  மாகே மாஸி நிதாகே சசிரேத்யந்த து கிதா |

  தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

”வெளியே  பனி,  குழந்தைக்கு ஆகாது.  இந்த  விசிறியை  எடு. குழந்தைக்கு உள்ளே வியர்க்கும். வாடைக்காத்து.  ஜன்னலை மூடு. எனக்கு  காத்து வேண்டாம். குழந்தையைப் போர்த்தவேண்டும். கம்பளி கொண்டுவா. குழந்தைக்கு குளிருமே.”  காலத்திற்கேற்றவாறு என்னை  கருத்தில் கொண்டு  காத்த  என் தாயே, நான் பிரதியுபகாரமாக கொடுப்பதெல்லாம் இந்த  சிறு பிண்டம், 11வதாக  எடுத்துக்கொள்.’

12.   புத்ரே வ்யாதி ஸமாயுக்தே மாதா ஹா க்ரந்த காரிணி

  தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

எத்தனை இரவுகள்,  எத்தனை மன வியாகூலம்.  குழந்தை நெற்றி எல்லாம் சுடறதே, சுவாசம் கஷ்டமாயிருக்கே. சளி  உபாதையாக இருக்கிறதே என்று  வருந்தி,   நாமக் கட்டி, மஞ்சள், விபூதி, பத்து எல்லாம் தடவி  மடியில் போட்டு  ஆட்டி, தட்டி,  என்னை வளர்த்தாயே,    கண்விழித்து உன் உடல்  . அதற்காகத்தான் இந்த  12வது பிண்டம் தருகிறேன்.

13.   யமத்வாரே மஹாகோரே மாதா சோசதி ஸந்ததம் |

 தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

நான்  இந்த பூலோகத்தில் இப்போது கார், பங்களா வசதிகளோடு  கை நிறைய காசோடு .   ஆனால்  இதெல்லாம் அனுபவிக்காமல்  நீ  யமலோகம்  நடந்து சென்று  கொண்டிருக்கிறாயே.  என் கார்  அங்கு வராதே.  வழியெல்லாம் எத்தனை இடையூறு. அவை எதுவுமே  உனக்கு  துன்பம் தராமல் இருக்க நான்  தர முடிந்தது இந்த 13வது பிண்டம் தான்  அம்மா. 

14.    யாவத்புத்ரோ ந பவதி தாவந்மாதுச்ச சோசநம் |

 தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

நான் இப்போது, பெரிய  டாக்டர், எஞ்சினீயர், வக்கீல், ஜட்ஜ், ஹெட்மாஸ்டர், கம்ப்யூடர் ஸ்பெஷலிஸ்ட் — நீ இல்லாவிட்டால்  நானே  எது.? ஏது?  ஆதார காரணமே, என் தாயே,  இந்த 14வது பிண்டம் தான்  அதற்கு பரியுபகாரமாக உனக்கு என்னால்  தர முடிந்தது. 

15.   ஸ்வல்ப ஆஹாரஸ்ய கரணீ யாவத் புத்ரச்ச பாலக: |

  தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

திருப்பி திருப்பி சொல்கிறேனே.  நான்  வளரத்தானே  நீ  உன்னை வருத்திக்கொண்டாய்.  நீ வேண்டியதை திரஸ்கரித்தாய். நான் புத்தகத்தில் தான்  ‘தன்னலமற்ற’ தியாகம் என்று படிக்கிறேன்.  நீ  அதை  பிரத்யக்ஷமாக புரிந்து அனுபவித்தவள்.  எனக்காக நீ கிடந்த  பட்டினி, பத்தியம்  எல்லாவற்றிற்கும் உனக்கு  நான் தரும் பிரதிஉபகாரம் இந்த  15வது பிண்டம்  ஒன்றே. 

16.    காத்ரபங்கா பவேந்மாதா ம்ருத்யு ஏவ ந ஸம்சய |

  தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

நான்  சுய கார்யப் புலி. சுயநல விஷமி. உன்னில் நான்  உருவாகி, கருவாகி, சிறுவனாகி, பெரியவனாகி, இப்போது உன் மரண வேதனையை சற்றே உணர்ந்தவனாக கண்ணில் நீரோடு  தரும் இந்த 16வது கடைசி கடைசி பிண்டத்தை ஏற்றுக்கொள் என் தாயே.  தெய்வமே.  என்னை மன்னித்து ஆசிர்வதி.

  • என்று முடித்தார் மகேந்திரன்.

‘’இப்படியெல்லாம் உணர்வுபூர்வமாக மனிதனை ஏமாற்றினால்தான் நிறைய பணம் தருகிறான். சரி, இந்த மந்திரங்களையும் தூக்கி குப்பையில் போடு’’ என்றபடி நகர்ந்தார் ஞானகுரு.