என்ன செய்தார் சைதை துரைசாமி – 287
அசுர வளர்ச்சி அடைந்துவரும் சென்னை போன்ற மாநகரங்களில், முகம் சுளிக்கவைக்கும் மிகப்பெரிய சவாலாக கழிவறைகள் இருப்பது மேயர் சைதை துரைசாமிக்குத் தெரியவந்தது. நெருக்கடியான குடியிருப்புகள் காரணமாக அந்த பகுதியில் புதிதாக பொதுக்கழிவறை கட்டுவதற்கு சாத்தியமில்லாத சூழல் நிலவியது.
கழிவறை அத்தியாவசியத் தேவை என்றாலும் கூலித் தொழிலாளர்கள், கட்டுமானப் பணியாளர்கள் அதிகம் பணியாற்றும் இடங்களில் கூட, அதனை உரிமையாளர்கள் ஏற்படுத்திக் கொடுப்பதில்லை. அதனால் ஆணும், பெண்ணும் திறந்தவெளியை கழிவறையாகப் பயன்படுத்தும் சூழல் உருவாகிறது. இதனால் ஏற்படும் தொற்றுநோய் ஆபத்து குறித்த விழிப்புணர்வும் மக்களிடம் இல்லை.
சகல இடங்களையும் பொதுக்கழிவறை போன்று பயன்படுத்துவதால் மழைநீர்க் கால்வாய் மற்றும் குடிநீர்க் குழாய்களில் இந்தக் கழிவுகள் கலக்கும் அபாயம் உண்டாகிறது. இதனால் குழந்தைகளுக்கு சத்துக்குறைபாடு மற்றும் தொற்றுநோய் தாக்கம் போன்ற பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. அதிக எண்ணிக்கையில் மக்கள் கூடும் சந்தை, பஸ் நிலையம், கோயில், பீச் போன்ற இடங்களில் மிகவும் குறைந்த எண்ணிக்கையில்தான் கழிவறைகள் பயன்பாட்டில் இருக்கின்றன. அந்த குறைந்த எண்ணிக்கையிலான கழிவறைகளும் முறையாகப் பராமரிக்கப்படாத காரணத்தால், அவற்றைப் பயன்படுத்த மக்கள் முன்வருவதில்லை.
பெருக்கத்துக்கு ஏற்ப முன்பிருந்தே ஒவ்வொரு ஆண்டும் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால், இத்தகைய அவலம் சென்னைக்கு நேர்ந்திருக்காது. ஆனால், இப்போது கழிவறை பிரச்னை உச்சத்தில் இருந்தாலும், சட்டென இதனை முழுமையாக முடிவுக்குக் கொண்டுவர முடியாது என்பதை தெளிவாக மேயர் சைதை துரைசாமி அறிந்துகொண்டார். இனி எடுக்கும் நடவடிக்கைகள் எல்லாம் நீண்ட காலம் பயன் தருவதாகவும், எதிர்காலத்துக்கும் ஏற்ப இருக்க வேண்டும் என்று முடிவெடுத்தார்.
அந்த வகையில், முதல் கட்டமாக கழிவறை இல்லாத வீடுகள் கட்டுவதற்கு அனுமதி கொடுப்பதற்கு மேயர் சைதை துரைசாமி முழுமையாக முற்றுப்புள்ளி வைத்தார். அதேநேரம், இது போதிய தீர்வு அல்ல என்பதையும் அறிந்தே இருந்தார் மேயர் சைதை துரைசாமி.
- நாளை பார்க்கலாம்.