குரக்களி பிடிப்பு வலி

Image

கெண்டைக்காலில் திடீர் சிக்கல்

இரண்டு சக்கர வாகனத்தில் காலை தூக்கிப் போடும் நேரத்தில், அதிக வெயிட் தூக்கும் நேரத்தில் திடீரென கெண்டைக்கால் சதை இழுத்துப் பிடிப்பதுண்டு. சில நிமிடங்களுக்கு கடுமையான வலி இருக்கும். அதேபோல் தொடை, கைகள், நெஞ்சு, விலா எலும்புகளிலும் சதைப்பிடிப்பு ஏற்படடுவதற்கு வாய்ப்பு உண்டு. பெரும்பாலான நபர்களுக்கு இரவு தூக்கத்திலிருந்து எழும்போது, இந்த பிடிப்பு தோன்றுகிறது. குரக்களி என்று சொல்லப்படும் இந்த சதைப்பிடிப்பை ஆங்கிலத்தில் கிராம்ப்ஸ் என்கிறார்கள்.

கெண்டைக்கால் வலி

கெண்டைக்காலில் பிடிப்பு ஏற்படும் நேரத்தில், அந்த பகுதி சதை கல் போன்று கடினமாகிவிடும். இதனால் தோன்றும் கடுமையான வலி எந்த சிகிச்சையும் எடுத்துக்கொள்ளாமலே சில நிமிடங்களில் குறைந்துவிடும் என்றாலும், மீண்டும் இந்த வலி தோன்றலாம் என்ற அச்சம் பெரும் தொந்தரவாக இருக்கும். 

யாருக்கு வருகிறது?

பொதுவாக நீண்ட நேரம் நின்றுகொண்டு பணியாற்றுபவர்களுக்கு சதைபிடிப்பு உருவாகிறது. நீண்ட நேரம் நிற்பவர்கள் தங்கள் வசதிக்காக ஒற்றைக்காலில் நிற்பது, ஏதேனும் ஒன்றை தாங்கிக்கொண்டு நிற்பதால் சதை சுருங்கி விரிவதில் ஏற்படும் சிக்கலால் பிடிப்பு உண்டாகிறது.  உடலில் சோடியம், மெக்னீசியம் பற்றாக்குறை காரணமாக இந்த பிரச்னை உருவாகிறது. உடலில் நீர் பற்றாக்குறை, ரத்தவோட்டம் குறைபாடு காரணமாகவும் தோன்றலாம். நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்பவர்கள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் மது அருந்துபவர்களுக்கு சதைப்பிடிப்பு அதிகம் உண்டாகிறது.

தீர்வு என்ன?

போதுமான அளவு தண்ணீர் குடிப்பதும் நீர்ச்சத்து உள்ள காய்கறிகள், பழங்களை அதிகம் எடுத்துக்கொள்வதும் இதற்கான தீர்வு ஆகும். தினமும் குறைந்த நேரமாவது எக்சர்சைஸ் செய்வது நல்லது. எப்சம் உப்பு கரைத்த நீரில் இரவு நேரத்தில் குளியல் போடலாம். எப்ச உப்பில் உள்ள மெக்னீசியம் சல்பேட் கிராம்ஸ் குறைபாட்டை நீக்குகிறது. படுக்கையில் அமர்ந்து கால்களுக்கு எண்ணெய் போட்டு மென்மையாக மசாஜ் செய்வதும் நல்ல பலன் கொடுக்கிறது. மீண்டும் மீண்டும் சதை பிடிப்பு வந்தால் அவசியம் மருத்துவரை சந்திக்க வேண்டும்.

Leave a Comment