எஸ்.கே.முருகன் – ஞானகுரு கவுன்சிலிங்
ஒன்பதாம் வகுப்பு படிக்கும் தனலட்சுமியுடன் அவரது தாயும் தந்தையும் வந்தார்கள். மாநிறத்துக்கும் கொஞ்சம் கீழே இருந்த தனலட்சுமி பற்களுக்கு கிளிப் போட்டிருந்தார். தலைமுடியை பறக்க விட்டிருந்தார். கண்கள் அங்கும் இங்குமாக அலைபாய்ந்தது.
தந்தை பேசத் தொடங்கினார். ‘’சார், நான் பிரைவேட் கம்பெனியில் மேனேஜரா இருக்கேன். காலையில் போனா ராத்திரிக்குத் தான் வருவேன். என் மனைவி விஷாலாட்சி வீட்ல தான் இருக்காங்க. இவளுக்கு ஒரு தம்பி ஆறாவது வகுப்பு படிக்கிறான்.

போன வருஷம் எட்டாம் வகுப்பு போன நேரத்தில், ‘கிளாஸ் ஃபர்ஸ்ட்’ எடுத்தா செல்போன் வாங்கித்தருவீங்களான்னு தனலட்சுமி கேட்டாள். அதுவரைக்கும் அஞ்சு இல்லைன்னா ஆறாவது ராங்க் இருப்பா. நான் சரின்னு சொன்னேன். ராத்திரி, பகலா படிச்சு ஃபர்ஸ்ட் ராங்க் எடுத்துட்டா. எங்களுக்கும் ரொம்பவும் சந்தோஷம். அதனால ஒரு நல்ல செல்போன் வாங்கிக்குடுத்தேன்.
அதுக்குப் பிறகு எப்ப பார்த்தாலும் செல்போனும் கையுமா இருக்கிறா. நாங்க கண்டிச்சாலும் கேட்கிறதில்லை. நல்லா படிக்கி்றேனான்னு மட்டும் பாருங்கன்னு சொல்றா, ஃபேஸ்புக், இன்ஸ்டாக்ராம்னு எல்லாத்துலேயும் நிறைய பேர்கிட்டே சாட் பண்றா. அதுக்கு கண்டிச்சதுக்கு சண்டை போட்டுட்டு வீட்டை விட்டுப் போயிட்டா…’’ என்று தயக்கத்துடன் நிறுத்தினார்.
‘’கோவிச்சுட்டு சொந்தக்காரங்க வீட்டுக்குப் போயிட்டாங்களா..?
தனலட்சுமியின் தந்தை பேசுவதற்குத் தயங்கவே, அவரது தாயார் பேசினார்.
’’ஸ்கூல் பேக்ல புத்தகத்துக்குப் பதிலா நாலைஞ்சு டிரெஸ், அவளுக்கு நாங்க வாங்கி வைச்சிருக்கிற நகையில பத்துப் பவுன் எடுத்துக்கிட்டு அவளோட ஸ்கூல் ஃப்ரெண்ட் வீட்டுக்குப் போயிட்டா…’’
‘’அப்படின்னா..?’’
‘’லவ் பண்றேன்னு சொல்லி அவங்க வீட்டுக்குப் போயிட்டா… அவங்க வீட்ல காச்மூச்சுன்னு சத்தம் போட்டாங்க, நாங்க போய் கூட்டிட்டு வந்தோம்…’’
நான் எதிர்பார்க்காத தகவல் இது. தனலட்சுமியைப் பார்த்தேன். எந்த சலனமும் இல்லாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்.
‘’வீட்டை விட்டு கிளம்புறதுன்னா அடிச்சீங்களா..?’
‘’அன்னைக்கு நான் மாத்திரை போட்டுட்டு பத்து மணிக்கு படுத்துட்டேன். பாத்ரூம் போறதுக்கு எந்திரிச்சப்போ நைட் 1 மணி இருக்கும். தனலட்சுமி லைட் அணைச்சுட்டு சொல்போன்ல இருந்தா. கோபத்துல போனை புடுங்கி பீரோவுல பூட்டினேன். அந்த ராத்திரி நேரத்துல காட்டுத்தனமா கத்துனா, கத்தாதேன்னு அடிச்சேன். அதுக்கும் அவ அடங்காம ரொம்பவும் கத்துனா. இவரும் முழிச்சு வந்துட்டாரு. அந்த நேரத்துல பிரச்னை வேணாம்னு போனை திருப்பிக் குடுத்துட்டார். இந்த மாதிரி அடங்காப்பிடாரி வீட்டுக்கு வேணாம், வெளியே விரட்டுங்கன்னு சொன்னேன்.
அடுத்த நாள் காலையில் தனலட்சுமி, ‘எனக்கு மரியாதை இல்லாத வீட்ல நான் இருக்க மாட்டேன். எனக்கும் ஆளுங்க இருக்காங்க…’ன்னு சொன்னா. உடனே நான், ‘ரொம்ப சந்தோஷம். அங்கேயே போயிடு. நாங்க தலை முழுகிடுறோம்’னு சொன்னேன். வழக்கம் போல ஸ்கூல் பேக், டிஃபன் பாக்ஸ் எடுத்துட்டுப் போனா.
சாயங்காலம் ஸ்கூல்ல இருந்து திரும்பி வரலை. அவளுக்குப் போன் செஞ்சேன். ரிங் போச்சு. அவ எடுக்கவே இல்லை. இவரை போன் செஞ்சு வரச்சொன்னேன். அவர் போன் செஞ்சும் அவ எடுக்கல. அவ ஃப்ரெண்ட்ஸ் போன் செஞ்சும் எடுக்கலை. வேற ஏதோ பிரச்னைன்னு பயந்து போலீஸ் ஸ்டேஷனுக்குப் போக நினைச்சோம்.
அப்பத்தான் மூர்த்திங்கிற பையன் வீட்ல இருந்து அவங்க அப்பா போன் செஞ்சார். ‘என்ன மாதிரி பிள்ளை பெத்து வைச்சிருக்கீங்க. இந்த வயசுல எங்க வீட்டுக்கு வந்து பிரச்னை பண்ணிக்கிட்டு இருக்கிறா… நீங்க வந்து கூட்டிட்டுப் போகலைன்னா நாங்க போலீஸ் ஸ்டேஷன்ல ஒப்படைச்சுடுவோம்னு சொன்னாங்க. உடனே ஓடிப் போய் கூட்டிட்டு வந்துட்டோம். ரொம்பவும் அசிங்கம் அசிங்கமா எங்களைத் திட்டிட்டாங்க…’’ என்றவரின் கண்கள் கலங்கியது. தந்தையும் உணர்ச்சி ததும்ப அமர்ந்திருந்தார். அவர்களை வெளியே அனுப்பிவிட்டு தனலட்சுமியிடம் பேசினேன்.
‘’இவங்க சொல்றது உண்மையா தனலட்சுமி?’’
‘’தன்ஸ்ன்னு கூப்பிடுங்க. தனலட்சுமிங்கிற பேர் டிரெண்டிங்கா இல்லை, இந்த பேர்ல தான் இன்ஸ்டா வைச்சிருக்கேன்…’’ என்றாள்.
‘’குட்… தன்ஸ்ன்னே கூப்பிடுறேன். எதுக்கு அந்த பையன் வீட்டுக்குப் போனீங்க?’’
‘’மூர்த்தி ஸ்கூல் சீனியர். +2 கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கிறான். ராத்திரி அவன்கிட்டே, ‘எங்க வீட்ல ரொம்பவும் கொடுமைப்படுத்துறாங்க’ன்னு சொன்னேன். அப்போ அவன் தான், ‘நீ கிளம்பி வந்துடு. நாம ஏதாவது ஊர்ல போய் பிழைச்சுக்கலாம்’னு சொன்னான். அதனால நாலைஞ்சு டிரெஸ், கொஞ்சம் ஜ்வல்ஸ் எடுத்துட்டு பஸ் ஸ்டாண்ட் போயிட்டேன். ஆனா, அவன் ஸ்கூலுக்குப் போயிட்டான்.
அவனுக்குப் போன் செஞ்சேன். ’விளையாட்டுக்குச் சொன்னேன். எங்க வீட்ல ஒத்துக்க மாட்டாங்கன்’னு சொன்னான். ஸ்கூல் விடுற வரைக்கும் லைப்ரரியில இருந்தேன். ஈவ்னிங் போன் செஞ்சேன். அப்பவும் அவன் எடுக்கலை. அதனால நேர அவங்க வீட்டுக்குப் போயிட்டேன். அவங்க அப்பாவும் அம்மாவும் ரொம்பவும் பேட்.. அதனால எங்க அப்பாகிட்டே சொல்லிட்டாங்க’’ என்றார்.
‘’நீங்க செஞ்சது சரின்னு நினைக்கிறீங்களா..? நல்லா படிக்கிற பொண்ணா இருக்கீங்க’’
‘’நான் படிப்ப்புல மட்டுமில்ல, லவ் பண்றதுலேயும் கில்லி. என்னைப் பத்தி என் வீட்ல இருக்கிறவங்களுக்கு எதுவும் புரியலை. என்னை பிளாக் பியூட்டின்னு பசங்க கனவு காண்றாங்க. என்னை திட்டிக்கிட்டே இருந்தா நான் வேற என்ன செய்ய முடியும்? மூர்த்தி செஞ்சது தான் தப்பு. இப்போ கணேஷ் கூட பேசிட்டு இருக்கேன். வீட்ல ஏதாச்சும் பிரச்னைன்னா சொல்லு, ஓடிப்போயிடலாம்னு சொல்லியிருக்கான். ஹைதராபாத்ல அவங்க அத்தை வீடு இருக்குதாம்…’’
‘’கணேஷ் என்ன வேலை செய்றாரு..?’’
‘’அவனும் எங்க ஸ்கூல் தான். +1 படிக்கிறான். ஆனா, வசதியான வீட்டுப் பையன்…’’
‘’இப்போ நீங்க மைனர். யாரையும் கல்யாணம் செஞ்சுக்க முடியாது. கணேஷ் கூட எப்படி உங்களால வாழ முடியும்? ரெண்டு பேருக்கும் படிப்பு இல்லை, வேலை இல்லை, பிறகு எப்படி வாழ்வீங்க…’’
‘’அதான் அவன் பணக்கார வீட்டுப் பையன்னு சொன்னேனே… நிறைய காசு வைச்சிருக்காங்க…’’
‘’கணேஷை எங்கே சந்திச்சுப் பேசுனீங்க?’’
‘’நேர்ல ஸ்கூல்ல பார்த்து சிரிச்சுப்போம் அவ்வளவுதான். போன்ல பேசுனா அம்மாவுக்கு காது கேட்ரும், பாம்புக் காது. அதனால சாட்ல பேசுவோம். அவன் கூட பேசுனா நேரம் போறதே தெரியாது…’’
‘’அப்படின்னா எப்ப படிப்பீங்க…’’
‘’ஸ்கூல்ல நல்லா கவனிப்பேன். வீட்ல அரை மணி நேரம் படிச்சா போதும். ஈஸியா நல்ல மார்க் வந்துடும்’’ என்று சிரித்தாள்.
‘’இந்த வயசுல படிப்பு மட்டும் தான் முக்கியம். உங்களுக்கு இருக்கிற திறமைக்கு ஸ்டேட் லெவல் மார்க் வாங்கலாம். நல்ல காலேஜ்ல படிச்சு, ஒரு வேலைக்குப் போன பிறகு இந்த மாதிரி ரிலேசன்ஷிப் வைச்சுக்கலாமே…’’
‘’எங்க அப்பா மாதிரியே பேசுறீங்க… லைஃபை என்ஜாய் பண்ணி வாழணும். படிச்சு முடிச்சு வேலைக்குப் போனப்புறம் லவ் பண்றதுன்னா பாதி கிழவி ஆயிடுவேன். நான் ஒண்ணும் இப்போ கணேஷ் கூட ஓடிப்போக மாட்டேன். என்னை சீண்டிக்கிட்டே இருந்தாங்கன்னா நான் வேற என்ன செய்யமுடியும்?’’
’’பசங்க தைரியமா பேசுவாங்க… ஆனா கல்யாணம்னா பயந்து போயிடுவாங்க… ஜாலியா ஊர் சுத்த ரெடியா இருப்பாங்க, வீட்ல அறிமுகம் செஞ்சுவைக்கச் சொன்னா பேக் அடிச்சுடுவாங்க. அவங்களுக்கு உங்களை மாதிரி பொண்ணுங்க கூட ஊர் சுத்தணும், ஆனா… யாரையும் நிமிர்ந்து பார்க்காத பொண்ணை கல்யாணம் முடிக்க நினைப்பாங்க…. அதனாலே இப்போ இந்த சிந்தனையே வேண்டாமே…’’
‘’நீங்க பூமர் அங்கிளா… காலம் ஃபாஸ்டா மாறிடுச்சு. நான் கணேஷை மட்டுமில்ல, ஒரே நேரத்துல நாலைஞ்சு பசங்க கூட ரிலேசன்ஷிப்ல இருக்கேன்… அது கணேஷுக்குத் தெரியும். ஆனாலும், அவன் என்னை கட்டுப்படுத்த மாட்டான். எனக்காக எதுவும் செய்வான்..’’ என்றாள் உறுதியுடன்.
மிகவும் ஆழமான காதல் நம்பிக்கையில் இருக்கிறாள் தனலெட்சுமி என்பது புரிந்தது. சினிமாவில் பார்ப்பதையும், கற்பனை செய்வதை எல்லாம் நிஜம் என்று நம்புகிறாள். சமூகவலைதளத்தில் பெண்ணுரிமைக்கு ஆதரவு தரும் நபர்கள் நிஜத்தில் அப்படி இருக்க மாட்டார்கள் என்பதை எல்லாம் தனலெட்சுமி புரிந்துகொள்ளும் நிலையில் இல்லை என்பது புரிந்தது. கவுன்சிலிங் என்ற வகையில் இவளுடன் பேசுவது எந்த வகையிலும் பயன் தராது என்பது தெளிவாகத் தெரிந்தது.
அதனால், ‘’சரிம்மா… நீ வெளியே இருந்துட்டு அம்மா, அப்பாவை மட்டும் உள்ளே வரச்சொல்லு’’ என்றேன்
உள்ளே வந்தவர்களிடம், ‘’தனலட்சுமியிடம் இப்படியொரு மாற்றத்தை எப்போது உங்களால் பார்க்க முடிந்தது?’’ என்று கேட்டேன்.
‘’செல்போன் வாங்கிக் கொடுத்த பிறகு…’’ என்றார் தந்தை.
‘’ஏழாம் வகுப்புல வயசுக்கு வந்ததுல இருந்து என கூட மல்லுக் கட்டிக்கிட்டுத்தான் இருக்கிறா. என்னை மட்டும் கருப்பா பெத்துட்டேன்னு சண்டை போடுவா. கண்ட கண்ட க்ரீம் வாங்கிக் குடுக்கச் சொல்வா. பியூட்டி பார்லருக்குப் போகணும்னு அழுவா. அழகாயிட்டேன்னு சொல்லிக்கிட்டே இருப்பா, நிறைய பசங்க என்னை பார்க்கிறாங்கன்னு சொல்லுவா… நான் இவ்வளவு தூரத்துக்குப் போகும்னு நினைக்கலை’’.
நிதானமாகப் பேசினேன். ‘’மனதில் குழப்பத்துடன் இருப்பவர்கள், நல்லபடியாக மாற நினைப்பவர்கள், முடிவு எடுக்கத் தடுமாறுபவர்களுக்கு மட்டுமே கவுன்சிலிங் மூலம் தீர்வு காண முடியும். தனலட்சுமி பழைய தவறுக்காக வருந்தவில்லை, பெற்றோரின் கவலை, பாசம், அன்பு எல்லாம் அவளை கொஞ்சமும் பாதிக்கவே இல்லை. அவர் வேறு ஒரு கற்பனை உலகத்தில் வாழ்கிறார்.
விமானங்கள் பறப்பதற்காகப் படைக்கப்பட்டவை என்றாலும் அவை தரையில் தான் நிற்க வேண்டும். ஆனால், தனலட்சுமி தரைக்கு வராமல் கற்பனை உலகத்திலே வாழ ஆசைப்படுகிறார். எனவே நிஜ உலகத்திற்கு அவர் வரவேண்டும் என்றால் மருந்துகளும், ஹார்மோன் சிகிச்சையும் தேவைப்படலாம். எனவே, ஒரு மனநல மருத்துவரிடம் அழைத்துச்சென்று தாமதிக்கமல் சிகிச்சையைத் தொடங்குங்கள். நீங்கள் தாமதிக்கும் ஒவ்வொரு நாளும் அவர் மோசமான மனநிலைக்குப் போய்க்கொண்டே இருப்பார்’’ என்று விடை கொடுத்தேன்.
இப்போது மருத்துவ சிகிச்சையில் இருக்கிறார் தனலட்சுமி. விரைவில் விமானம் தரையில் இறங்கட்டும்..