என்ன செய்தார் சைதை துரைசாமி – 329
முழுமையாகப் படித்துப் பார்க்காமல் கையெழுத்துப் போடுவதில்லை என்பதாலே மேயர் சைதை துரைசாமி அவரிடம் வந்த கோப்பினை முழுமையாகப் படித்துப் பார்த்தார். எம்.எம்.டி.ஏ. காலனியில் பழுதடைந்த திருமண மண்டபம் அமைந்திருக்கும் இடத்தை வீட்டு வசதி வாரியத்திடம் இருந்து வாங்குவதற்கு மாநகராட்சி 2.95 கோடி ரூபாய் செலுத்துவதற்கு அனுமதியளிக்கும் கோப்பு அது.
அந்த திருமண மண்டபம் அமைந்திருக்கும் இடம் குறித்து மேயர் சைதை துரைசாமி ஆய்வு செய்தார். அப்போது அவரே எதிர்பார்க்காத ஓர் உண்மை தெரியவந்தது. அதாவது அந்த எம்.எம்.டி.ஏ. காலனி இடத்தின் உண்மையான உரிமை சென்னை மாநகராட்சிக்குத் தான் இருக்கிறது என்பது தெரியவந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு எவ்வித பண பரிமாற்றமும் இல்லாமல் வீட்டு வசதி வாரிய பயன்பாட்டுக்கு மட்டுமே மாநகராட்சி கொடுத்திருக்கிறது.
எனவே, இந்த இடத்தைத் திரும்பப் பெறுவதற்கு பெருநகர சென்னை மாநகராட்சி எந்த காரணத்துக்காகவ்ம் வீட்டு வசதி வாரியத்துக்குப் பணம் கொடுக்கத் தேவையில்லை என்பதை மிகத் தெளிவாகத் தெரிந்துகொண்டார். இத்தனை ஆண்டுகளாக மாநகராட்சியின் இடத்தை வீட்டு வசதி வாரியம் பயன்படுத்தியதற்கு, அங்கிருந்து பணம் பெற வேண்டும் என்பதையும் மேயர் சைதை துரைசாமி உறுதி செய்தார்.
இதையடுத்து, வீட்டு வசதி வாரியத்திடமிருந்து சென்னை மாநகராட்சிக்கு சில கோடிகள் பணம் பெறப்பட்டது. அதோடு அந்த 4 கிரவுண்ட் இடத்திற்கு தடையின்மைச் சான்று வாங்கி, அங்கு மாநகராட்சி திருமண மண்டபம் கட்டுவதற்கும் மேயர் சைதை துரைசாமி நடவடிக்கை எடுத்தார். அன்று மேயர் சைதை துரைசாமி ஆய்வு செய்யாமல் கையெழுத்துப் போட்டிருந்தால் மாநகராட்சிக்கு மிகப்பெரும் இழப்பீடு ஏற்பட்டிருக்கும்.
அரசுத் துறை என்றாலும் சிறப்பாகவும் தெளிவாகவும் எப்படி நிர்வாகம் செய்ய வேண்டும் என்பதை மேயர் சைதை துரைசாமி இந்த நிகழ்வு மூலம் அதிகாரிகளுக்குப் பாடமே நடத்திக் காட்டினார். அதனாலே அதிகாரிகள் மேயர் சைதை துரைசாமியின் நிர்வாகத் திறனை இன்றளவும் புகழ்ந்துவருகிறார்கள்.
- நாளை பார்க்கலாம்.