என்ன செய்தார் சைதை துரைசாமி – 363
கூவம் சீரமைப்பு என்றதும் எப்போதும் போன்று ஆற்றில் மிதக்கும் குப்பைகளை அகற்றுவது, ஆற்றை தூர் எடுப்பது என்பது போன்ற பணிகளே நடக்கும் என்று எதிர்பார்த்தவர்கள் ஆச்சர்யப்படும் வகையில் புரட்சித்தலைவி ஜெயலலிதா அறிவித்திருக்கும் திட்டத்தின் ஆழம் குறித்து மாமன்றத்தில் தெளிவாகவும் விரிவாகவும் பேசினார் மேயர் சைதை துரைசாமி.
கூவத்தை சுத்தப்படுத்துவதற்கு பொதுப்பணித்துறை, சென்னை மாநகராட்சி நகராட்சி நிர்வாக ஆணையரகம், ஊரக வளர்ச்சி இயக்குநரகம், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம், சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை மற்றும் தமிழ்நாடு குடிசைமாற்று வாரியம் ஆகிய ஏழு அரசு துறை மற்றும் நிறுவனங்கள் இணைந்து செயல்படும் என்ற மேயர் சைதை துரைசாமியின் அறிவிப்பு பெரும் வரவேற்பைப் பெற்றது.
தொடர்ந்து பேசிய மேயர் சைதை துரைசாமி, ‘’கூவம் நதி சுற்றுச் சூழல் சீரமைப்புத் திட்டப் பணிகள், எட்டாண்டு கால அவகாசத்தில், மூன்று கட்டங்களாக செயல்படுத்தப்படும். இந்த செயல் திட்டத்தின்படி 1934 கோடியே 84 இலட்சம் ரூபாய் மொத்த மதிப்பீட்டில், முதற்கட்டமாக முதல் மூன்று ஆண்டுகளில் குறுகிய காலத்திட்டமாக 60 துணைத் திட்டங்களை நிறைவேற்றவும், இரண்டாம் கட்டமாக நான்கு முதல் எட்டு ஆண்டுகளில் ஏழு துணைத் திட்டங்களை செயல்படுத்தவும், தொடர்ந்து பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளவும் மாண்புமிகு அம்மா அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள்.
புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழிகாட்டுதலின்படி, கூவம் நதியில் கழிவு நீர் கலக்காதபடி தடுக்க தக்க மாற்று ஏற்பாடுகள் செய்தல், திடக்கழிவு மேலாண்மை மேற்கொள்ளுதல், நதியின் நீராதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் வெள்ள நீர்க் கொள்ளளவை மேம்படுத்தி பராமரித்தல், கூவம் நதிக் கரையில் வாழும் மக்களுக்கு மறுவாழ்வு அளித்தல், அவர்களை மறுகுடியமர்த்த திட்டமிட்டுச் செயலாற்றுதல், பல்லுயிர் பெருக்கத்தை மீட்டு சுற்றுச் சூழலை மேம்படுத்துதல், நகர்ப்புறங்களில் நதிகளின் கரையோரங்களில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளுதல் ஆகிய பணிகள் சிறப்புற மேற்கொள்ளும் வகையில், திட்டங்கள் தீட்டி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது’’ என்று மிகத் தெளிவாகப் பேசினார் மேயர் சைதை துரைசாமி.
- நாளை பார்க்கலாம்.