மணமக்களை இப்படி வாழ்த்துங்கள்

Image

லட்சியத் தம்பதியருக்கு 10 டிப்ஸ்

திருமண பந்தத்தில் நுழையும் அனைவரும் நீண்ட காலம் சேர்ந்திருக்க வேண்டும், லட்சிய தம்பதியராக வாழவேண்டும் என்றே ஆசைப்படுகிறார்கள். லட்சியம் இருக்கிறதே தவிர, அதற்கான செயல்திட்டம் அவர்களிடம் இல்லை. ஆகவே, இலக்கை அடையமுடியாமல் தோற்றுப் போகிறார்கள்.

எனவே, திருமணம் செய்யும் தம்பதியருக்கு சில ரகசியங்களை கட்டாய்ம் சொல்லித்தர வேண்டும். இந்த ரகசியங்களை அறிந்துகொண்டால், இதன்படி வாழ்ந்தால் நிச்சயம் லட்சிய தம்பதியராக மாற முடியும். இதோ அந்த பத்து டிப்ஸ்

  1. உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பதிலும், அழகைப் பேணுவதிலும் இருவரும் என்றென்றும் அக்கறை செலுத்துங்கள். திருமணம் ஆகிவிட்டதே என்ற அலட்சியத்தினால் பெண் குண்டாவதும், ஆண் தொப்பை போடுவதும் திருமண பந்தத்திற்கு பங்கம் விளைவிப்பவை.
  2. இன்று புதிதாகப் பிறந்ததாக எண்ணிக்கொள்ளுங்கள். பழைய வாழ்க்கையை, பழைய உறவுகளை, பழைய நட்புகளை குறைத்துக்கொண்டு, புதிய பந்தத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடும்க்கள். கடந்தகாலத் தவறுகளை மறந்துவிட்டு, புதிய வாழ்க்கைக்கு உண்மையாக இருங்கள்.
  3. இரண்டு பக்க உறவுகளையும், நண்பர்களையும்  ஒரே கண்ணோட்டத்தில் அணுகுங்கள். யாரையும் உயர்த்திப் பிடிக்கவும் வேண்டாம், யாரையும் மட்டம் தட்டுவதும் வேண்டாம்,
  4. கணவன், மனைவிக்கும் சின்னச்சின்ன ஊடல்கள் நிகழ்வது சகஜம்தான். சந்தேகம் என்பதை நுழையவிடாதீர்கள். கருத்துவேறுபாடு வரும்போது தம்பதியர் இருவரும் பேசித் தீர்த்துக்கொள்ளுங்கள். எந்த காரணம் கொண்டும் யாருடைய உறவையும், நட்பையும் சமரசம் பேசுவதற்கு அழைக்காதீர்கள்.
  5. ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுங்கள். வேலைகளை பங்கு போட்டு செய்யுங்கள். யாரும், யாருக்கும் அடிமையாக இல்லாமல், நட்புடன் பழகுங்கள். வெளியே எங்கு போவதாக இருந்தாலும் தம்பதி சமேதராகச் செல்லுங்கள். பொது இடங்களில் உங்கள் துணையைப் பற்றி குற்றம், குறையைக் கூறாதீர்கள்.
  6. இருவரும் வேலைக்குச் செல்பவராக இருந்தாலும் சரி, ஒருவர் வேலைக்குச் செல்பவராக இருந்தாலும் சரி, அன்றன்று அலுவலகத்தில் அல்லது வீட்டில் என்ன நடந்தது என்பது குறித்து, குறைந்தது அரை மணி நேரம் பேசுங்கள்.
  7. பணத்தை இருவரும் சேர்ந்தே கையாளுங்கள். பிறருக்கு பண உதவி செய்வது, கடன் கொடுப்பது அல்லது கடன் வாங்குவது போன்ற எல்லாமே இருவருக்கும் தெரிந்தே நடக்க வேண்டும். ஒருவருக்குப் பிடிக்காத விஷயங்களை அடுத்தவர் நிச்சயம் செய்ய வேண்டாம்.
  8. இருவரும் அவரவர் விருப்பங்களுடன் வாழுங்கள். யாருக்காகவும் யாரும் மாறவேண்டும் என்ற கட்டாயத்தை ஏற்படுத்த வேண்டாம். திருமணத்திற்கு முன்பு சில தீய பழக்கங்களில் விழுந்திருந்தால், அதிலிருந்து மீண்டு வருவதற்கு அவகாசம் கொடுத்து காத்திருங்கள். ஒரே நாளில் எந்த மாற்றமும் நிகழாது என்பதை புரிந்துகொள்ளுங்கள்.
  9. தினமும் ஒரு முறையாவது ஒருவரையொருவர் பாராட்டுங்கள். இன்று இட்லிக்கு வைத்த சட்னியின் சுவை அபாரம் என்றோ, ஊதா கலர் சட்டையில் பிரமாதமாக இருக்கிறீர்கள் என்றோ சின்னச்சின்ன விஷயங்களுக்கும் பாராட்டுங்கள்.
  10. வேலை, பதவி உயர்வு, வீடு, கார் போன்ற எந்த ஒரு எதிர்காலத் திட்டத்துக்காகவும் தாம்பத்திய உறவை தள்ளிப்போடாதீர்கள். 30 வயதுக்கு மேல் குழந்தை பிறப்பு பல்வேறு சங்கடங்களைத் தரக்கூடும் என்பதால், விரைவில் குழந்தை பெற்றுக்கொள்ளுங்கள். அதுதான், அடுத்த தலைமுறைக்கு நீங்கள் செய்யவேண்டிய முக்கியமான முதல் கடமை.

Leave a Comment