என்ன செய்தார் சைதை துரைசாமி – 211
கலங்கரை விளக்கம் தொடங்கி பட்டினப்பாக்கம் வரையிலான இணைப்பு சாலை மேம்பாட்டுக்கு அந்த பகுதி மீனவ மக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்கள். அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அவர்கள் தயாராக இல்லை. எனவே, தானே நேரடியாக மீனவ மக்களிடம் பேசுவதற்கு மேயர் சைதை துரைசாமி முன்வந்தார். இந்த முயற்சி வெற்றி பெறாது என்றே அதிகாரிகள் கருதினார்கள். மீனவ மக்களுக்கும் நான் மேயர் என்பதால் அவர்களுடைய குறையைக் கேட்டு நிவர்த்தி செய்ய வேண்டும் என்ற அக்கறையுடன் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது, ‘’நான் மேயராக உங்கள் குறையை முதலில் கேட்கிறேன். அவற்றை எல்லாம் நிவர்த்தி செய்த பிறகே கடற்கரையை அழகுபடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று உறுதி கொடுத்தார். இதை பெரும்பாலான மக்கள் ஏற்றுக்கொண்டாலும் நிறைய பேர் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.
‘’அரசியல்வாதிகள் பேச்சை நாங்கள் நம்பவே மாட்டோம். ஏதாவது சொல்லி ஏமாற்றி எங்கள் இருப்பிடங்களை அகற்றிவிடுவீர்கள்’’ என்று சொன்னார்கள். அப்படி பேசியவர்களுக்கும் நம்பிக்கை கொடுத்தார். அத்தனை பேருக்கும் போதிய அடிப்படை வசதிகளுடன் கூடிய அடுக்குமாடி வீடுகள் வழங்கப்படும் என்று உறுதி கொடுத்தார். அதே போன்று மீன் விற்பனை செய்வதற்கு நான்கு ஏக்கர் பரப்பளவில் நவீன மீன் அங்காடி அமைக்கப்படும். மழை, வெயில், புயல் என எல்லா நேரங்களிலும் நவீன மீன் அங்காடி செயல்படும் என்று உறுதியளித்தார். மீண்டும் மீண்டும் பல கட்டமாக நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகே மேயர் சைதை துரைசாமி மீது முழு நம்பிக்கை வைத்தார்கள்.
அதன்படி, அனைவருக்கும் அடுக்குமாடி வீடுகள் வழங்கப்பட்டன. குடிசைகள் அகற்றப்பட்டு 47 கோடி ரூபாய் செலவில் இணைப்பு பாதை மேம்படுத்தப்பட்டது.. இன்று கடற்கரை சாலையில் போக்குவரத்து நெரிசல் குறைப்பதற்கு அந்த இணைப்பு சாலை பெரும் பங்கு வகிக்கிறது என்றால், அதற்கு மேயர் சைதை துரைசாமி மேற்கொண்ட நடவடிக்கைகளே காரணம். அந்த பகுதியில் குடிசைகளை அகற்றவே முடியாது என்று நினைத்த அதிகாரிகளும் பொதுமக்களும் வியக்கும் வகையில் சாதித்துக் காட்டி கடற்கரையை அழகுபடுத்தினார் மேயர் சைதை துரைசாமி.
- நாளை பார்க்கலாம்.