நூற்றாண்டு விழா காணும் தோழர் நல்லகண்ணு பற்றி சொல்வதற்கு ஆயிரம் விஷயங்கள் இருக்கின்றன. ஆனால், சுருங்கச்சொல்வதே சிறப்பு என்பதால் அவரைப் பற்றி பத்தே பத்து தகவல்கள்.
- பொதுவுடமைத் தத்துவத்தின் அடையாளம் என்று தோழர் நல்லகண்ணுவை சொல்கிறார்கள். உண்மையில் அவர் போராட்டத்தின் அடையாளம். ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராட்டம். விவசாயக் குடிகளுக்கு ஆதரவாகப் போராட்டம், சாதி ஒழிப்புப் போராட்டம், ஆலய நுழைவுப் போராட்டம், சமூகநீதிப் போராட்டம், தலித் மக்களுக்குப் போராட்டம், தொழிலாளர்களுக்கப் போராட்டம், வறுமைக்கு எதிராகப் போராட்டம், ஆட்சியாளர்களுக்கு எதிராகப் போராட்டம், மணல் கொள்ளைக்குப் போராட்டம், உழைப்பு சுரண்டலுக்குப் போராட்டம், சிறுபான்மையினர் பாதுகாப்புக்குப் போராட்டம் என்று இவர் நடத்தாத போராட்டமே இல்லை. இவரை பிடித்து சிறையில் போட்டால், அங்கேயும் போய் கைதிகள் உரிமைக்குப் போராட்டம் நடத்தியவர்.
- தமிழகத்தில் மாவீரர் ஜீவாவின் நீட்சியாக வாழ்ந்துகொண்டிருப்பவர். மார்க்ஸ், அம்பேத்கர், பெரியார் ஆகியோரின் கூட்டுத்தத்துவம்.
- அரசியல்வாதி என்றாலே சொகுசு கார், ஆடம்பர வீடு என்ற அடையாளத்தை அடித்து நொறுக்கிவிட்டு எளிமையான வாழ்க்கை, டீயே உணவு, சைக்கிள் பயணம் என்று புதிய இலக்கணம் படைத்தவர். தனக்கென எந்த சொத்தும் வாங்காமல் நேர்மையின் மறு உருவம். இன்றைய இளைஞர்களுக்கு அரசியல் மீது நம்பிக்கை வருவதற்கு இவரே காரணம்.
- விடுதலைப் போராட்டத் தியாகிகளுக்கான பென்ஷனை, ‘நாட்டுக்கு நான் என் கடமையைத் தான் செய்தேன்’ என்று மறுத்தவர். சிறையும் இவரது வீடு என்பது போல் கிட்டத்தட்ட 9 ஆண்டுகளை சிறையில் கழித்திருக்கிறார்.
- எத்தனையோ போராட்டங்களில் மகத்தான வெற்றி பெற்ற பிறகும் போதும் என்று ஒதுங்கிவிடாமல் வாழ்க்கை முழுக்கவே போராடிக் கொண்டே இருக்க வேண்டும், போராட்டமே வாழ்க்கை என்று வாழ்ந்து வழி காட்டி வருபவர் தோழர் நல்லகண்ணு,
- ஓய்வு என்றால் இலக்கியம் தான். என்னைப் போலவே பாரதியின் அடிமை. நாட்டுப்புறப் பாடல் தொடங்கி நவீன இலக்கியம் வரையிலும் தேடித்தேடி வாசிப்பவர், எழுதுபவர். யாரையும் காயப்படுத்தாமல் விமர்சனம் செய்யும் தேர்ந்த விமர்சகர்.
- தாமிரபரணியில் அணை கட்டுவதற்காகவும் பாப்பாபட்டி, கீரிப்பட்டியில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்காகவும் இவர் நடத்திய உண்ணாவிரதப் போராட்டம் தமிழகத்தையே உலுக்கியது.
- தமிழரான சிங்காரவேலர் தலைமையில் அமைக்கப்பட்ட இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் நூற்றாண்டு விழா நடைபெறும் அதே ஆண்டில் ஆர்.நல்லகண்ணு பிறந்தார் என்பதும் அவருக்கும் நூற்றாண்டு விழா நடைபெறுகிறது என்பதும் வரலாற்று சம்பவம்.
- 1958 ஆம் ஆண்டில் தனது 33வது வயதில் ரஞ்சிதம் என்பவருடன் இல்லற வாழ்வில் அடியெடுத்து வைத்தார். மத வேற்றுமைகளைக் கடந்து இப்புரட்சித் திருமணம் நடைபெற்றது. இவர்களின் மூத்த மகள் காசி பாரதி தலைமையாசிரியராகப் பணி புரிந்து ஓய்வு பெற்றார். இரண்டாவது மகள் மருத்துவர் ஆண்டாள் மருத்துவக் கல்லூரிப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார்.
- மூன்று தேர்தல்களில் போட்டியிட்டு, மூன்றிலுமே தோற்கடிக்கப்பட்டவர் நல்லகண்ணு. 1967 மற்றும் 1977 சட்ட மன்றத் தேர்தல்களில் அம்பாசமுத்திரத்திலும், 1999 மக்களவைத் தேர்தலில் கோவையிலும் தோல்வி அடைந்தார். இது தான் ஜனநாயகம் என்பதை ஏற்றுக்கொண்டவர். இவர் நினைத்திருந்தால் மாநிலங்களவை உறுப்பினராக மாறியிருக்க முடியும். அதனை இவர் ஏற்கவில்லை.