சிக்கல் நம்மிடமே பிறக்கிறது.
மனிதர்கள் வாழ்க்கையில் பிரச்னைகள், சிக்கல்கள், தோல்விகள், ஏமாற்றங்கள் வருவது சகஜம். அப்படி சிக்கல் இல்லை என்றாலும் மனிதர்கள் அதனை எப்படியாவது உருவாக்கிக் கொள்வார்கள் என்பது தான் கரப்பான் பூச்சி கோட்பாடு. ஏனென்றால், மனிதர்களால் கவலைப்படாமல் அல்லது மகிழ்ச்சி அடையாமல் சும்மாவே இருக்க முடியாது.
கரப்பான் பூச்சி கோட்பாட்டை விளக்குவதற்குக் கூறப்படும் இந்த சம்பவத்தை நீங்கள் ஏற்கெனவே படித்திருக்கலாம்.
ஹோட்டலில் நிறைய பேர் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்கள். அப்போது ஒரு பெண் மீது எங்கிருந்தோ ஒரு கரப்பான் பூச்சி வந்து அமர்கிறது. எதிர்பாராமல் கரப்பான் பூச்சியைக் கண்டதும் அந்த பெண் பயத்தால் கூச்சலிடத் தொடங்குகிறார். அந்தப் பெண்ணுக்குப் பக்கத்தில் இருப்பவர்களுக்கும் பதற்றம் பற்றிக்கொள்கிறது. அந்த பெண்ணின் கணவன் சட்டென அந்த கரப்பான் பூச்சியை தட்டிவிட, அது பறந்து சென்று பக்கத்து டேபிளில் இருக்கும் வேறொரு பெண் மீது அமர்கிறது. இப்பொழுது இந்த பெண்ணும் அதே போல் கூச்சலிடுகிறார். அமைதியாக இருந்த உணவகத்தை சில நொடிகளில் அந்த கரப்பான் பூச்சி களேபரமாக்கிவிடுகிறது.
இதை பார்த்த ஒரு பணியாளர் வேகமாக அந்த பெண்ணுக்கு அருகே வந்து, அந்த கரப்பான் பூச்சியை தன் கையினால் பிடித்து, சிரித்த முகத்துடன் எதுவும் நடக்கவில்லை என்பது போன்று ஹோட்டலுக்கு வெளியே வீசிவிட்டுத் திரும்புகிறார்.
இப்போது விஷயத்துக்கு வரலாம். அந்த கரப்பான் பூச்சி என்பது ஒரு சிக்கல். அதை அந்த பணியாளர் மிக எளிதாகக் கையாண்டார். ஆனால், அந்த இரண்டு பெண்களும் ஏன் பதறினார்கள்.
அந்த பெண்களின் நடத்தைக்கு கரப்பான் பூச்சி காரணம் அல்ல. அந்த கரப்பான் பூச்சி அவர்களை விழுங்கிவிடும் அளவுக்கு ஆபத்தானது அல்ல என்பது அவர்களுக்கும் தெரியும். ஆனால், அந்த கரப்பானை அகற்ற முடியாத அவர்களின் இயலாமையே கூச்சலாக வெளிவருகிறது.
ஏதேனும் ஒரு விஷயத்துக்கு பதட்டப்படுகிறீர்கள் அல்லது செய்வதறியாது திகைக்கிறீர்கள் என்றால் அதற்கு உங்கள் உயர் அதிகாரி அல்லது கணவன், மனைவி காரணம் இல்லை. அந்த பிரச்னையை எப்படி கையாள்வது என்று தெரியாமல் பதட்டம் அடைகிறீர்கள் என்பதே அர்த்தம்.
சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் உங்களை தொந்தரவு செய்யவில்லை, ஆனால் அந்த நெரிசலால் ஏற்படும் நேர மேலாண்மையை கையாள முடியாத இயலாமையே தொந்தரவு செய்கிறது. இந்த நெரிசலை முன்கூட்டி எதிர்பார்த்து, இன்னும் கொஞ்சம் வேகமாகக் கிளம்பியிருந்தால் இந்த பதட்டம் வந்திருக்காது.
எனவே, யாருக்கும் சிக்கல் தானாக வருவதில்லை. ஒரு விஷயத்தையும் தவறாக அணுகும்போது அது சிக்கலாக மாறுகிறது. எந்த ஒரு விஷயத்துக்கும் எப்படி எதிர்வினை செய்கிறோம் என்பதைப் பொறுத்தே அது சிக்கலாக அல்லது சாதாரண ஒன்றாக மாறிவிடுகிறது.
எனவே, ஏதேனும் குழப்பம் அல்லது சிக்கல் வருவதாகத் தெரிந்தால் உடனே பதட்டம் அடையாதீர்கள். அதற்கான விடை என்னவென்று தேடுங்கள். கரப்பான் பூச்சி அடுத்து நம் மீது வந்து அமர்ந்துவிடலாம் என்று அச்சப்படுவதை விட, எழுந்து வெளியே சென்றுவிடலாம் அல்லது பணியாளர் அந்த பிரச்னையை பார்த்துக்கொள்வார் என்று நம்பிக்கையுடன் வேடிக்கை பார்க்கலாம்.
நம் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டு நடக்கும் செயல்களை நாம் எதிர்கொள்ளத்தான் வேண்டும். வேகமாக செல்ல வேண்டிய நேரத்தில் கார் பஞ்சர் ஆகிவிட்டால், அந்த சூழ்நிலையை சமாளித்துத் தான் ஆக வேண்டும். அதற்காக நம்மையே நொந்துகொள்வதால் எதுவும் மாறிவிடப் போவதில்லை.
எனவே, எல்லா விஷயங்களையும் நம்மால் கட்டுப்படுத்த முடியாது என்பது உண்மை. அதேநேரம், அந்த விஷயங்களுக்கு நாம் எப்படி பதில் அளிக்கிறோம் என்பதன் மூலம் அதையும் நம்முடைய கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவர முடியும்.
அந்த கலையைக் கற்றுக்கொண்டால் கரப்பான் பூச்சி சம்பவத்தை ஒரு வேடிக்கைக் கதையாக நிறைய பேரிடம் சொல்லி சிரிக்கவும் முடியும்.
பின்குறிப்பு :
இந்த கட்டுரை வெளியாகியிருக்கும் ஞானகுரு மகிழ்ச்சி ஜூன் மாத இதழ் முழுமையாகப் படிப்பதற்கு இந்த லிங்க் தொட்டுச் செல்லுங்கள். அட்டையைத் தொட்டால் இதழ் விரியும். படியுங்கள் பரப்புங்கள்.