சேவல் சண்டை
மனிதர்களிடம் இல்லாத ஒரு குணம் நாம் வளர்க்கும் கோழி இனங்களிடம் உள்ளது. அதிலும் சேவல்கள், எதிரிகளை ஒருபோதும் முதுகில் தாக்குவதில்லை. நேருக்குநேராக மோதியே எதிரியை வீழ்த்துகின்றன. அதை வேடிக்கை பார்க்க வேண்டிய மனிதர்கள், போட்டியாக மாற்றி பந்தயம் கட்டுகிறார்கள்.
மன்னராட்சி காலத்தில் போர் வீரர்களை உற்சாகப்படுத்துவதற்காகவும், சில நேரங்களில் கேளிக்கைக்காகவும் சேவற்சண்டை நடத்தப்பட்டது. கி.பி ஐந்தாம் நூற்றாண்டில் சேவல் சண்டை நடைபெற்றமைக்கான சான்றாக சேவல் நடுகல் கிடைத்துள்ளது. இந்தளூர்ப் பகுதியில் கிடைத்த சேவல் நடுகல்லில் வீரமரணம் அடைந்த சேவலின் பெயர், பொற்கொற்றி என்றும், அச்சேவல் கீழச்சேரி எனும் இடத்தைச் சேர்ந்தது எனவும் தகவல்கள் கிடைத்துள்ளன.
சிந்து சமவெளி நாகரிகத்தில் சேவல் முத்திரைகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. பட்டினப்பாலை, குறுந்தொகை, திருமுருகாற்றுப்படை போன்ற பழந்தமிழ் நூல்களில் சேவல் சண்டை பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளன. புகார் நகரத்து மக்கள் சங்ககாலத்தில் கண்டுகளித்த விளையாட்டுகளில் ஒன்றாகக் கோழிச்சண்டை இருந்துள்ளது. தமிழகத்தில் பாளையக்காரர்கள் எனும் பிரிவினர் தங்களுக்குள் சேவல் சண்டை விளையாட்டினை வைத்துக்கொண்டார்கள். இதற்காக எட்டயபுரம் அரண்மையில் சண்டைச் சேவல்கள் பராமரிக்கப்பட்டன. பண்டைய தமிழகத்தில் கீழச்சேரி, மேலச்சேரி என்ற இடங்களில் சேவல் சண்டை நடைபெற்றுள்ளது. தொல்காப்பியம் மற்றும் நன்னூல் போன்றவற்றில் கீழச்சேரி, மேலச்சேரி ஆகிய இடங்களில் நடைபெற்ற சேவல் சண்டையைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. தமிழில்
இதேபோன்ற விளையாட்டுகள் வடஅமெரிக்கா, சீனா, பாரசீகம் மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளில் ஆசியாவின் பல பகுதிகளிலும் நடத்தப்படுகின்றன. குறிப்பாக, சேவல் சண்டை என்பது தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் நடத்தப்பட்ட ஒரு விளையாட்டாகும். 2011ம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான ஆடுகளம் எனும் திரைப்படம் தமிழக தென்மாவட்டங்களில் நடைபெறும் வெற்றுக்கால் சேவல் சண்டையை மையமாக வைத்து எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சேவல் சண்டையானது, இரு சேவல்களிடையே நடைபெறும் சண்டையாகும். இயற்கையாகச் சேவல்கள், பெட்டைகளோடு இணைசேர்வதற்காகத் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்கின்றன. இந்தச் சண்டையில் வெற்றிபெறும் சேவல், பெட்டையுடன் இணைசேர்கிறது. சேவல் சண்டையானது, கோட்சை, வெப்போர், வெற்றுக்கால் சண்டை என ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஏற்ப வெவ்வேறு விதிகளோடு பல்வேறு பெயர்களில் நடத்தப்படுகின்றன. சண்டைக்காகச் சேவல்களை தயார்செய்ய சேவல்கள் கட்டுத்தரை எனுமிடத்தில் கட்டப்படுகின்றன. இதனால் சண்டைச் சேவல்களை கட்டுச் சேவல்கள் என அழைக்கும் வழக்கம் உள்ளது. கட்டுச் சேவல்கள் சண்டையிட்டுக் கொள்வதால் சேவல்கட்டு என்றும் அழைக்கின்றனர். கிராமப்புறங்களில் சேவல் சண்டை இல்லாமல் காணும் பொங்கல் நிறைவடையாது.
இந்த சேவல் சண்டையில், கத்திக்கால், வெத்துக்கால் சண்டை என இருபிரிவுகளில் போட்டி நடைபெறுவதுண்டு. அதற்காகச் சேவல்களின் கால்களில் சிறுகத்திகள் கட்டப்பட்டு, சண்டைக்கு விடும் வகை கத்திக் கால் சண்டையாகும். இதில் ஆக்ரோஷத்துடன் மோதும் சேவல்களின் கால்களில் உள்ள கத்தி எதிர் சேவலின்மீது பட்டு காயங்களினால் சேவல் சோர்வடைந்து வீழும் அல்லது களத்தைவிட்டு ஓடும் சேவல், தோல்வியடைந்ததாகக் கருதப்படும். இந்த வகைச் சண்டையில் சில சமயங்களில் கத்தியால் காயம்பட்ட சேவல்கள் இறப்பதும் உண்டு.
வெற்றுக்கால் சேவல் சண்டை அல்லது வெப்போர் என்னும் சேவல் சண்டையில் சேவலின் காலில் கத்தியைக் கட்டாமல் வெற்றுக் கால்களுடன போட்டி நடக்கும். வெப்போர் சேவல் சண்டைக்கு அசில் வகை சேவல்களை அதிகம் பயன்படுத்துவர். அதற்குக் காரணம், அவற்றின் உடல்வாகும், போர்க் குணமும் ஆகும். மேலும் அதன் கால்பகுதியில் கட்டை விரலுக்கு மேலே, அம்பின் முனைபோல வளரும் ‘முள்’ அமைப்பும் முக்கியக் காரணம். இதில் பெரிய சேவல், சின்ன சேவல் எனப் பிரித்து போட்டிக்கு விடப்படும். நடைபெறும் போட்டியில் ஒவ்வொரு சேவலுக்கும் 15 நிமிடம் சண்டை, 15 நிமிடம் ஓய்வு என ஒரு மணி நேரம் வழங்கப்படும். மூக்கைக் கீழே வைத்தாலோ, ஓட்டம்பிடித்தாலோ அந்தச் சேவல் தோல்வியைத் தழுவியதாக கருதப்படும்.வெப்போர் சேவல்கள் கழுத்து மற்றும் தலையினை மட்டுமே பெரும்பாலும் தாக்கும். மற்ற இடங்களில் அடித்தால் எதிரியை வெல்லவோ கொல்லவோ முடியாது.
ஜல்லிக்கட்டு காளைகளை எப்படிப் பொங்கல் பண்டிகைக்கு 3 மாதங்களுக்கு முன்பு இருந்து தயார் படுத்துகிறார்களோ, அதேபோல சண்டைச் சேவல்களையும் தயார்படுத்துகின்றனர். இதற்காக சேவல்களுக்கு வழக்கமான உணவைவிட, உடலை வலிமைப்படுத்தும் வகையில் கம்பு, சோளம், கேழ்வரகு, கோதுமை, பாதாம், பிஸ்தா, முந்திரி, ஈரல், வேகவைத்த இறைச்சி போன்றவை கொடுக்கப்படும். சண்டைக்குத் நன்கு தயாராகிய சேவல்களைப் பொங்கல் பண்டிகைக்கு சில தினங்களுக்கு முன்பே ரகசியமாகப் பண்ணை தோட்டங்களில் வைத்து ஒத்திகை நடத்துவார்கள். சேவல் சண்டையைத் தொடங்குவதற்கு 21 நாட்களுக்கு முன்பு எந்த சேவலுடன் எந்த சேவலை மோதவிடுவது என்பது தீர்மானிக்கப்படும். இது ‘ஜோடி சேர்த்தல்’ என்று அழைக்கப்படுகிறது. சேவல்களின் உயரம், வலு போன்றவற்றை அடிப்படையாக கொண்டு ஜோடி சேர்க்கப்படுகிறது. சண்டைக்கு முன்னதாக சேவல்களில் கால் நகங்களையும், காலில் இருக்கும் முட்களையும் கூர்மையாக்கி தயார் செய்வார்கள்.
இந்தியா சுதந்திரம் அடையாமல் ஆங்கிலேயர்கள் ஆட்சிக்கு உட்பட்டிருக்கும்போது கிபி 1879ம் ஆண்டு சேவல் சண்டைக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த தடை சில காலம் நீடித்தது. பிற்காலத்தில் இது சூதாட்டம் போன்ற நிலைக்குக் கொண்டு செல்லப்பட்டது. இதனால் இந்த விளையாட்டில் இரு பிரிவினர்களுக்கிடையே மோதல், கலவரம் என நடந்ததைத் தொடர்ந்து இவ்விளையாட்டிற்கு தமிழ்நாடு காவல்துறை தடை விதித்துள்ளது என்றாலும் இன்றளவும் கிராமப்புறங்களில் ஆங்காங்கே நடந்துகொண்டுதான் இருக்கிறது.