கடினமான முடிவுகளைத் தேர்வு செய்யுங்கள்

Image

நிம்மதி நிச்சயம்

கண்ணுக்கு முன் இரண்டு தீர்வுகள் தென்படும் நேரத்தில், கடினமான முடிவுகளை தேர்வு செய்வது மிகப்பெரிய நிம்மதியும் திருப்தியும் தருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உதாரணத்துக்கு சில சம்பவங்கள்.

இப்போது வாடகைக்கு இருக்கும் வீடு வசதிக் குறைவு என்றாலும் அக்கம்பக்கத்தில் நன்றாகப் பழகுகிறார்கள். வீட்டுக்காரர் தொந்தரவு இல்லை. மழை காலத்தில் மட்டும் சிக்கல். அடுத்த ஏரியாவில் கூடுதல் அறையுடன் ஒரு வீடு வாடகைக்கு வருகிறது. பழகிய ஏரியாவை விட்டு மாறுவதா வேண்டாமா என்ற குழப்பம் வருகிறது. என்ன முடிவு எடுப்பீர்கள்..?

மாதக் கடைசி. கோவா டூருக்கு நண்பர் அழைக்கிறார். செலவையும் ஏற்பதாகச்  சொல்கிறார். டூர் செல்வது மகிழ்ச்சி என்றாலும் பணம் இல்லாமல் பங்கெடுக்க மனம் வராமல் குழப்பத்தில் விழுகிறீர்கள். என்ன முடிவு எடுப்பீர்கள்..?

உறவினர் வீட்டுக்கு வந்திருக்கிறீர்கள். கிளம்பும் நேரத்தில் கடுமையான மழை. தங்கிவிட்டு காலையில் போகுமாறு வாய் வார்த்தையாகச் சொல்கிறார்கள். மழையில் நனைவதைவிட தங்குவது செளகர்யம் தான். ஆனாலும், குழப்பமாக இருக்கிறது. என்ன முடிவு எடுப்பீர்கள்..?

இது போன்ற தருணங்களில் சுகமான, வசதியான, செளகரியமான முடிவுகளை ஒருபோதும் எடுக்காதீர்கள். சிறு சிரமங்கள் இருந்தாலும் ஏற்றுக்கொண்டு கடின முடிவை தேர்வு செய்யுங்கள். பின்னர் அதற்காக வருத்தப்படுவதற்கு எந்த அவசியமும் நேராது.

உறவுகளில் ஒருவரை விரும்புகிறீர்களா இல்லையா என்ற குழப்பம் வந்தாலே, விலகி விடுங்கள். வேண்டுமா, வேண்டாமா என்று குழப்பம் வந்தாலே வேண்டாம் என்ற முடிவுக்கு வந்துவிடுங்கள்.

இந்த முடிவும் ஒரு வேளை தவறாக இருக்கலாம். ஆனால், இது நீங்கள் விரும்பி ஏற்றுக்கொண்ட முடிவு என்பதால், எளிதில் கடந்து விடுவீர்கள். குழப்பத்தைத் தீர்க்கும் இந்த சூத்திரம் தெரிந்துவிட்டால், இனியெல்லாம் மகிழ்ச்சியே.

Leave a Comment