மகிழ்ச்சியாக பள்ளிக்குப் போகும் குழந்தைகள்

Image

பின்லாந்து ஆச்சர்யம்

’இன்னைக்கு ஸ்கூல் லீவு” என்று சொல்லும்போது குழந்தைகள் முகத்தில் தோன்றும் மகிழ்ச்சியை வேறு எங்கேயும் நாம் பார்த்துவிட முடியாது. முந்தைய காலங்களில் போன்று இப்போது பள்ளிகளில் மாணவர்களுக்கு அடி, உதை, தண்டனை போன்ற சித்ரவதைகள் இல்லை என்றாலும், குழந்தைகளுக்குப் பள்ளி செல்ல பிடிப்பதே இல்லை.

ஏனென்றால், நம் கல்வி முறை மதிப்பெண் அடிப்படையில் கட்டியமைக்கப்பட்டுள்ளது. மழலையர் பள்ளியிலே யாருக்கு அதிக ஸ்டார்… யாருக்கு அதிக திறமை போன்ற ஒப்பீடுகள் குழந்தைகளை சோர்வடைய வைக்கின்றன. பள்ளிக்குச் செல்வதைவிட வீட்டிலேயே இருக்கலாம் என்று எண்ண வைக்கிறது. இன்றைய வாழ்க்கை சூழலில் கல்வி அறிவில்லாமல் ஒரு குழந்தை வளர்வதற்கு சாத்தியமில்லை. எனவே ஒவ்வொரு குழந்தையும் பள்ளிக்கு போகத்தான் வேண்டும்.

ஆனால், குழந்தைகள் மகிழ்ச்சி பொங்க பள்ளிக்குப் போக வாய்ப்பே இல்லையா? உலகம் முழுவதும் இப்படித்தான் குழந்தைகள் சலிப்புடன் பள்ளிக்குச் செல்கிறார்களா..?

இல்லை. இன்று, உலகில் தலைசிறந்த கல்வியில் பின்லாந்து முதல் இடத்தில் உள்ளது. அங்கு குழந்தைகள் சந்தோஷமாக பள்ளிக்குச் செல்வதாக புள்ளிவிபரங்கள் சொல்கின்றன.

அங்கு மட்டும் எப்படி மகிழ்ச்சி சாத்தியமாகிறது..?

பின்லாந்தில் ஏழு வயதில்தான் ஒரு குழந்தை பள்ளிக்குச் செல்லத் தொடங்குகிறது. நம் நாட்டை போன்று ஒன்றரை வயதில் ப்ளே ஸ்கூல், இரண்டரை வயதில் ப்ரீ-கே.ஜி.., மூன்று வயதில் எல்.கே.ஜி., நான்கு வயதில் யு.கே.ஜி என்ற அவசரக்கல்வி முறை அந்த நாட்டில் இல்லை.  

பள்ளியில் பாடத்திட்டம் என்பது பள்ளியறையில்தான் தொடங்குகிறது. தன்னைச் சுற்றியுள்ள ஒவ்வோர் அசைவில் இருந்தும் ஒவ்வோர் ஒலியில் இருந்தும் குழந்தை பாடம் கற்கிறது. இலை உதிர்வதும், செடி துளிர்ப்பதும், இசை ஒலிப்பதும், பறவை பறப்பதும் குழந்தைக்குக் கல்விதான். எனவே பாடப்புத்தகம் என்ற சுமை கிடையாது. ஏழு வயதில் பள்ளிக்குச் செல்லும் பின்லாந்து குழந்தை, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு கிட்டத்தட்ட ஆண்டின் பாதி நாட்கள்தான் பள்ளிக்கூடம் செல்கிறது. மீதி நாட்கள் விடுமுறை.

ஒவ்வொரு நாளும் பள்ளி இயங்கும் நேரமும் குறைவு தான். அந்த நேரத்திலும்கூட, படிப்புக்குக் கொடுக்கப்படும் அதே முக்கியத்துவம் இசை, ஓவியம், விளையாட்டு, போன்ற பிற கலைகளுக்கும் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு பள்ளியிலும் ஓர் ஓய்வறை கட்டாயம். படிக்கப் பிடிக்கவில்லை அல்லது சோர்வாக இருக்கிறது என்றால், மாணவர்கள் அங்கு சென்று ஓய்வு எடுக்கலாம். முக்கியமாக, 13 வயது வரை ரேங்கிங் என்ற மாணவர்களை தரம் பிரிக்கும் கலாச்சாரம் கிடையாது. பிராக்ரஸ் ரிப்போர்ட் கார்டு கொடுத்து, பெற்றோரிடம் கையெழுத்து வாங்கி வரச் சொல்லும் வன்முறை கிடையாது…

தங்கள் பிள்ளையின் கற்றல் திறன் குறித்து தெரிந்துகொள்ள வேண்டும் என பெற்றோர்கள் விரும்பினால், தனிப்பட்ட முறையில் விண்ணப்பித்துப் பெற்றுக்கொள்ளலாம். கற்றலில் போட்டி கிடையாது என்பதால், தேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுக்கும் மன உளைச்சல்கள் மாணவர்களுக்கு இல்லை…

சக மாணவர்களைப் போட்டியாளர்களாகக் கருதும் மனப்பாங்கும் இல்லை. மேலும், இவர்களுக்கு வீட்டுப்பாடம் தரப்படுவது இல்லை. மாணவர்களுக்கு எந்தப் பாடம் பிடிக்கிறதோ அதில் இருந்து அவர்களே வீட்டுப்பாடம் செய்து வரலாம், வராமலும் இருக்கலாம்.

ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு மருத்துவர் இருப்பார். அவர், மாணவர்களின் உடல்நிலையை தனிப்பட்ட முறையில் கவனித்து ஆலோசனைகள் வழங்குவார்.

ஒரு பள்ளியில் அதிகபட்சமாக 600 மாணவர்கள் இருக்கலாம்; அதற்கு அதிக எண்ணிக்கை கூடவே கூடாது. முக்கியமாக பின்லாந்தில் தனியார் பள்ளிக்கூடமே கிடையாது. அங்கு கல்வி என்பது முழுக்க முழுக்க அரசின் வசம். எனவே கான்வென்ட் கலாசாரம் இல்லை. கோடீஸ்வரராக இருந்தாலும், நடுத்தர வர்க்கத்தினராக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும், அனைவரின் குழந்தைகளும் ஒரே பள்ளியில்தான் படிக்க வேண்டும். அனைவருக்கும் சம தரமுள்ள கல்வி என்ற உத்தரவாதம் உள்ளது.

அதனால்தான் பின்லாந்தில் 99 சதவிகிதம் குழந்தைகள் ஆரம்பக் கல்வியைப் பெற்றுவிடுகின்றனர். அதில் 94 சதவிகிதம் பேர் உயர்கல்விக்குச் செல்கின்றனர். ‘டியூஷன்’என்ற அருவருப்பான கலாச்சாரம், அந்த நாட்டுக்கு அறிமுகமே இல்லை…

ஆனால், தேர்வுகளை அடிப்படை முறைகளாக இல்லாத இந்தக் கல்வி முறையில் பயின்றுவரும் மாணவர்கள்தான், உலகளாவிய அளவில் நடைபெறும் பல்வேறு தேர்வுகளில் முதல் இடங்களைப் பிடிக்கின்றனர்…

இது எப்படி சாத்தியமாகிறது?

இந்த கேள்விக்கான விடையை, ஐ.நா சபையின் ஆய்வு  அவிழ்த்தது.  ஆம், பின்லாந்து மாணவர்கள் மகிழ்ச்சியான மனநிலையில் கல்வி பயில்கிறார்கள் என்பதுதான் அந்த விடை. மகிழ்ச்சியின் நறுமணத்தில் திளைக்கும் குழந்தைகள், அறிவை ஆர்வத்துடன் கற்றுத் தேர்கிறார்கள்.

இத்தகைய சிறப்புகள் குறித்து அறிந்து வருவதற்காக, உலகமெங்கும் உள்ள கல்வியாளர்களும், பிரதிநிதிகளும் அந்த நாட்டை நோக்கிக் குவிகின்றனர். உலகின் 56 நாடுகளில் இருந்து 15,000 பிரதிநிதிகள் ஒவ்வோர் ஆண்டும் செல்கின்றனர். நாட்டின் அந்நியச் செலாவணியில் கணிசமான சதவிகிதம் கல்விச் சுற்றுலாவின் மூலமே வருகிறது.

ஆனால், இப்படி தங்களை நோக்கி வீசப்படும் புகழ் மாலைகளை பின்லாந்தின் கல்வியாளர்களும் அமைச்சர்களும் ஓடோடி வந்து ஏந்திக்கொள்வது இல்லை. அதற்கு அவர்கள் சொல்லும் காரணம், ’பின்லாந்து கல்வி முறைதான் உலகிலேயே சிறந்தது எனச் சொல்ல முடியாது… ஏனெனில், இதற்காக நடத்தப்பட்ட ஆய்வில் எல்லா உலக நாடுகளும் பங்கேற்கவில்லை. எனவே, இப்படி ஒரு முடிவை ஏற்றுக் கொள்ள முடியாது… எங்களைவிட சிறந்த கல்விமுறையும் இருக்க வாய்ப்பு உள்ளது” என்கிறார்கள் பெருந்தன்மையுடன்.

அதேநேரம், பின்லாந்தில் ஆசிரியர் பணி என்பது, நம் ஊர் ஐ.ஏ.எஸ் ., ஐ.பி.எஸ் போல மிகுந்த சமூகக் கௌரவம் உடையது. அரசின் கொள்கை வகுக்கும் முடிவுகளில், திட்டங்களின் செயலாக்கத்தில் ஆசிரியர்களுக்கு முக்கியப் பங்கு உண்டு. மூன்றில் ஒரு பின்லாந்து குழந்தை, ஆசிரியர் ஆவதுதான் தன் வாழ்நாள் லட்சியம் என்று கனவு காண்கிறது.

அதே நேரம் அங்கு ஆசிரியர் ஆவது அத்தனை சுலபம் அல்ல. ஏனென்றால், மேல்நிலை வகுப்பில் சிறந்து விளங்கும் மாணவர்களில் இருந்துதான் ஆசிரியர் பயிற்சிக்கு மாணவ மாணவிகள் தேர்வு செய்யப்படுகின்றனர். நம் நாட்டில் மற்ற படிப்புகளில் இடம் இல்லாதவர்கள்தான் ஆசிரியர் பணிக்கு வருகிறார்கள். அப்படியின்றி, அதிக தகுதியுடைய மாணவர்களை ஆசிரியராக்குகிறார்கள். ஆசிரியராவதற்கு ஐந்து ஆண்டுகள் உண்டு, உறைவிடப் பள்ளிகளில் சேர்ந்து கடும் பயிற்சி எடுக்க வேண்டும். அதன்பிறகு, ஆறு மாத காலம் ராணுவப் பயிற்சியும் உண்டு.

அதன்பிறகு, ஒரு வருடத்துக்கு வெவ்வேறு பள்ளிகளில் நேரடியாக வகுப்பறையில் ஆசிரியர் பயிற்சி. ஏதாவது ஒரு பாடத்தில் ஆய்வுக் கட்டுரை வெளியிடுவதும், குழந்தை உரிமைப் பயிலரங்கங்களில் பங்கேற்பதும் முக்கியம். மேலும், நாட்டின் சட்ட திட்டங்கள் குறித்த தெளிவுக்காக தேசிய அமைப்புகளிடம் இருந்து சான்றிதழ் பெற வேண்டும். அது மட்டுமின்றி தீயணைப்பு, தற்காப்புப் பயிற்சி, முதலுதவி செய்வதற்கான மருத்துவச் சான்று என ஆசிரியர் பயிற்சிக்கு சுமார் ஏழு வருடங்களைச் செலவிட வேண்டும்…

இப்படி ஆசிரியர்களை உருவாக்கும் விதத்தில் பின்லாந்து மேற்கொள்ளும் சமரசம் இல்லாத முயற்சிகள்தான், அங்கு கல்வியில் மாபெரும் மறுமலர்ச்சியை உருவாக்கி இருக்கிறது.

பின்லாந்து நாடு பின்பற்றுவதுதான் சரியான கல்வி முறை என்று சொல்லிவிட முடியாது என்றாலும், நம் நாட்டில் இருக்கும் பல்வேறு பாடத்திட்டங்களை விட இது உயர்வான ஒன்று என உறுதியாகச் சொல்ல முடியும். எனவே, இந்திய அரசும் பின்லாந்து பாடத்திட்டத்தை நோக்கி முன்னெடுத்துச் செல்வதுதான், நல்ல குழந்தைகளை உருவாக்கும்.

அந்த குழந்தைகள்தான் மகிழ்ச்சியாக இருப்பார்கள். அவர்களின் மகிழ்ச்சி குடும்பத்தை அழகாக்கும். மகிழ்வான குடும்பம்தான் வன்முறை இல்லாத சந்தோஷமான நாட்டை உருவாக்கும்.

Leave a Comment