என்ன செய்தார் சைதை துரைசாமி – 437
கடந்த 2015 நவம்பர் மற்றும் டிசம்பரில், வடகிழக்கு பருவமழை காலத்தில் சென்னையில் கடும் மழை பொழிந்து பேரழிவை ஏற்படுத்தியது. மழை நவம்பர் முதல் வாரத்தில் தொடங்கியது. இந்த காலகட்டத்தில் பெய்த 3 பெருமழைகளின் காரணமாக சென்னை நகரம் மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. இரண்டாவது, மூன்றாவது பெருமழைகளையடுத்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இந்த பேரழிவின் விளைவாக சாலைகள், ரயில் தண்டவாளங்களும் சேதமடைந்தன.
வரலாறு காணாத வெள்ளப்பெருக்கினால் அவதிப்பட்ட மக்கள் தமிழக அரசு மற்றும் மாநகராட்சி மீது குற்றம் சுமத்தினார்கள். மக்கள் கோபத்திற்கு அழுத்தமான காரணம் உள்ளது. அதாவது தங்கள் பகுதியில் தண்ணீர் வடியவில்லை, போக்குவரத்து சீரடையவில்லை, மின்சாரம் வரவில்லை, தொலைத்தொடர்பு வசதி கிடைக்கவில்லை, பால் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கவில்லை என்பது போன்ற வசதிக் குறைகளை வாழ்க்கையில் முதன்முதலாக சென்னை மக்கள் அனுபவித்தார்கள்.
மந்திரத்தில் நடப்பதுபோல் ஒரே நாளில், அத்தனை குறையையும் அரசு தீர்த்துவிட வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். ஆனால் வழக்கமான மழைப் பொழிவை சமாளிக்கும் அளவுக்கு மட்டுமே உள்கட்டமைப்பு மற்றும் பணியாளர் எண்ணிக்கை உண்டு. அவற்றைக் கொண்டு இத்தனை பெரிய பேரிடரை உடனடியாக யாராலும் தீர்த்துவிட முடியாது என்ற உண்மையை புரிந்துகொள்ளும் மனநிலையில் மக்கள் இல்லை.
அதே நேரம் சென்னை மாநகருக்கு ஒரு மாபெரும் நன்மையும் கிடைத்தது. . ஆம், முதன்முறையாக சென்னையில் மனிதம் வெளிப்பட்டது. தமிழகம் முழுவதும் சென்னைக்கு உதவ தாராளமாக முன்வந்தது. வெளி மாநிலம், வெளி நாடுகளில் இருந்தும் உதவிகள் குவிந்தன. யாரென்று தெரியாத மனிதர்கள் எல்லாம் தேடிப் போய் உதவி செய்தார்கள்.
யார்யாரோ உதவும்போது, அரசு நேரடியாக உதவவில்லை என்ற வருத்தம் மக்களிடம் இருந்தது. அப்படியென்றால் எப்போதும் மக்களுடன் இருக்கும் மேயர் சைதை துரைசாமி என்ன செய்துகொண்டிருந்தார்..?
- நாளை பார்க்கலாம்.
